திங்கள், 20 அக்டோபர், 2014

"மனிதநேய மார்க்கம் இஸ்லாம்"

ஏக இறைவனின் திருப்பெயரால்…

"மனிதநேய மார்க்கம் இஸ்லாம்"

இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது.

இத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் எனும் சொல்லாடல் இணைக்கப்பட்டு இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறுவது முரண்பாடான, பொருத்தமற்ற இணைப்பாகும்.

மனிதர்களுக்கிடையில் சாந்தியை பரப்புவதே இஸ்லாத்தின் நோக்கமே தவிர சண்டையைப் பரப்புவது அதன் நோக்கம் அல்ல. மனிதர்களுக்கிடையில் அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும், மனித நேயம் மிளிர வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகிறது. அதனாலேயே எல்லா மதங்களை விடவும் அதிகமாகவே இஸ்லாத்தின் போதனைகளில் மனித நேயம் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது. அவற்றை அறியும் போது இஸ்லாம் தீவிரவாதத்தைப் பரப்பும் மார்க்கம் அல்ல, மனித நேயத்தை மற்ற மதங்களை விடவும் அதிகம் பரப்பும் மார்க்கம் என்பதை சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

ஒரு தாய் மக்கள்

மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கு அடிப்படைத் தேவை சகோதர உணர்வு. நாம் அனைவரும் சகோதரர்கள், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எழுந்தாலே ஒரு இணைப்பு, நெருக்கம் உண்டாகும். இந்த உணர்வு இல்லையாயின் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன? என்று சக மனிதனை கண்டுகொள்ளாத மனிதநேயமற்ற நிலை மனிதர்களிடம் உண்டாகிவிடும். இஸ்லாம் அத்தகைய சகோதர உணர்வைத் தவறாது ஏற்படுத்தி விடுகிறது. மக்கள் அனைவரும் ஜாதி, மதப் பாகுபாடின்றி ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்களே என்று கூறி அன்பு செலுத்துவதற்கான அடிப்படை உணர்வை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். திருக்குர்ஆன் 39:13

இஸ்லாம் கூறும் ஒரு தாய் மக்கள் என்ற இந்தச் சித்தாந்தம் தீவிரவாதத்தை அடியோடு அடித்து நொறுக்கும் சித்தாந்தமாகும். அனைவரும் சகோதரர்கள் சகோதரர்களுக்குள் வெட்டுக் குத்து, சண்டை சச்சரவு இருக்கக் கூடாது என்பதே இந்தச் சித்தாந்தம் வலியுறுத்தும் கருத்தாகும்.

பிறருக்கு உதவு

சிரமப்படும் மக்கள் யாராக, எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சகோதர உணர்வோடு அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் அது மிகச்சிறந்த தர்மம் என்றும் இஸ்லாம் போதிக்கின்றது.

“தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” என நபியவர்கள் கூறியதும் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்?” எனக் கேட்டனர் அதற்கு நபியவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்” என்றார்கள். தோழர்கள், “அதுவும் முடியாவிட்டால்?” எனக் கேட்டதற்கு, “தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். தோழர்கள், “அதுவும் இயலவில்லை என்றால்?” என்றதும், “நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்திட வேண்டும் இதுவே அவர் செய்யும் தர்மமாகும்” என்று கூறினார்கள்.
நூல்: புகாரீ 1445

ஏழையும் இறைவனும்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். இதையும் தாண்டி இஸ்லாம் மனிதனுக்கு உதவி செய்வது இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றது எனவும், மனிதர்களை உதாசீனப்படுத்துவது படைத்த இறைவனையே புறக்கணிப்பதைப் போன்றது எனவும் போதிக்கின்றது. இது இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மனிதனுக்கு உதவுவதை இறைவனுக்கே உதவுவதைப் போன்று ஒப்பீடு செய்யும் இதை மிஞ்சிய மனிதநேயம் வேறென்ன இருக்கின்றது?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், “ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். அதற்கு அவன், “என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை” என்று கூறுவான்.

அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை” என்று கூறுவான்.

அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).நூல்: முஸ்லிம் (4661)

மனிதர்களிடம் இரக்கம்

மனிதர்களுடன் இரக்க உணர்வோடு நடந்தால் தான் இறைவன் நம்மிடம் இரக்கம் காட்டுவான் என்ற இஸ்லாத்தின் போதனை இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மற்றுமொரு முத்திரை பதித்த சான்று.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 7376

போரில் மனித நேயம்

போர் என்றாலே மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட களமாகப் பார்க்கும் உலகம் இது. போர் என்று வந்து விட்டால் சிறியவர், பெரியவர், குழந்தைகள், பெண்கள், அப்பாவிகள் என ஒருவர் விடாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் கொன்றொழிக்கும் அழிவுக் கலாச்சாரம் தான் இன்றைய போர்முறை. சர்வதேச நாடுகளில் எந்த ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. போர் என்றால் பொதுமக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று ஆட்சியாளர்களே அதை நியாயப்படுத்திப் பேசுவதையும் நாம் பார்க்கிறோம்.

ஆனால் இஸ்லாம் மாத்திரம் தான் போர்க்களத்தையும் மனித நேயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய களமாகப் பார்க்கிறது. ஆகவே பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், போருக்குத் தொடர்பில்லாத அப்பாவிகள் ஆகியோரைப் போரில் கொல்ல இஸ்லாம் தடைவிதிக்கின்றது. அவற்றைப் பெரும்பாவமாக அறிவிப்பு செய்கின்றது.

நடைமுறை உலகில் சிறு குற்றமாகக் கூட பார்க்காத ஒன்றை இஸ்லாம் பெரும்பாவம் என்று குறிப்பிடுவது மனித உயிர்களுக்கு இஸ்லாம் அளிக்கும் மதிப்பை மிகச்சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இன்னும் எண்ணற்ற செய்திகள், இஸ்லாம் மனிதநேயத்தைப் போதிக்கும் மார்க்கம் என்பதை சான்றளிக்கின்றது. அது எங்கேயும் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை.

இப்படி தீவிரவாதத்திற்கு எதிராக, மனிதநேயத்திற்கு ஆதரவாக தனது சாட்டையைத் தீவிரமாக சுழற்றும் இஸ்லாத்தை தீவிரவாத மார்க்கம் என்று குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்?

அறிவிலிகள், மனிதநேயமற்ற சில காட்டுமிராண்டிகள் செய்யும் தீவிரவாதச் செயலால் அவர்கள் சார்ந்த மதத்தை தீவிரவாத மார்க்கம் என்று முத்திரை குத்துவது எந்த வகையிலும் ஏற்க இயலாத, நியாயமற்ற செயலாகும்.