திங்கள், 24 ஏப்ரல், 2017

புறம் பேசாதீர்கள்!


எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே அனைத்து புகழும். மனித குலத்திற்கு வழிகாட்டியாக வந்த முஹம்மத் (ஸல்) அவர்களின் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லீமான அனைவர்கள் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே அல்லாஹ் நம்மை இந்த உலகத்தில் மிக உயர்ந்த படைப்பாக படைத்துள்ளான். அப்படி படைத்த இறைவன் நாம் இந்த உலகத்தில் எப்படி வாழவேண்டும் என்பதையும் முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாக அனுப்பி தந்து எவைகளை செய்யவேண்டுமோ அவைகளுக்கு ஊக்கமளித்தும், எவைகளிலிருந்து விளகவேண்டுமோ அவைகளை தடுத்தும் அனைத்து விஷயங்களையும் கற்றுத் தந்தான்.

இப்படி நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட செய்திகளில் ஒன்றுதான் "புறம் பேசாதீர்" என்பதாகும் . புறம் பேசுவது அல்லாஹ்வும் ரசூலும் தடுத்திருக்கிறார்கள். குர்ஆனில் அல்லாஹ் இப்படி சொல்லிக்காட்டுகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன்:49:12

என்று இறைவன் குர்ஆனில் கூறுகிறான் . எனவே புறம் பேசுவது கூடாது, புறம் பேசுவது சகோதரனின் இறைச்சியை சாப்பிடுவதற்கு சமம் என்று எச்சரிக்கின்றான் . எனவே நாம் ஒவ்வொருவரும் புறம் பேசுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளவேண்டும் .

புறம் பேசுவது என்றால் என்ன? இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாக சொன்னார்கள்.

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்" என்று பதிலளித்தார்கள்.

அப்போது, "நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ, நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம்: 5048

ஆக நம்மில் இருவர் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி ஓரிடத்தில் சந்தித்தால் மூன்றாமவரை பற்றி பேசாமல் இருப்பதில்லை . இப்படி புறம் பேசுவது அல்லாஹ்வும் , நபி (ஸல்) அவர்களும் தடைசெய்திருப்பது தெரிந்திருந்தும் அதிலிருந்து நாம் விலகிக்கொல்வதில்லை . ஆனால் புறம் பேசினால் அல்லாஹ்விடம் தண்டனை இருக்கிறது என்பதை விளங்காமல் இருக்கிறோம். இதற்குரிய தண்டனை இருக்கிறது என்பதை ஒரு ஹதீஸ் நமக்கு விளக்குகிறது .

நபி(ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை' என்று சொல்லிவிட்டு, 'இருப்பினும் (அது பெரிய விஷயம்தான்) அவ்விருவரில் ஒருவர், தாம் சிறு நீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் 'நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல் : புகாரி:216

எனவே ஒருவர் புறம் பேசுவது குற்றம் என்பதும், அப்படி பேசினால் அதற்க்கு இறைவனிடம் தண்டனை இருக்கிறது என்பதும் தெளிவாகிறது. எனவே இது பொன்ற செயல்களிலிருந்து நாம் தவிர்ந்துகொள்ளவேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் என்னையும், உங்களையும் மார்க்கத்தை சரியாக அறிந்து அதன் படி செயல்படக்கூடிய நல்லோர்களாக வாழ அருள் புரிவானாக! ஆமீன்.