திங்கள், 24 ஏப்ரல், 2017

உளூவின் சிறப்புகள்


எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே அனைத்து புகழும். மனித குலத்திற்கு வழிகாட்டியாக வந்த முஹம்மத் (ஸல்) அவர்களின் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லீமான அனைவர்கள் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!

உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் ." என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல் : அநநசாயி : 1578

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே பெரியோர்களே நம்மை படைக்கப்பட்டதின் நோக்கம் இறைவனுக்கு வணக்கங்கள் புரிவதற்காகத்தான். அந்த வணக்கத்தை புரிவதற்கு தன்னை சுத்தப்படுத்திக்கொள்வது அவசியம். ஏன் உளூ செய்யவேண்டும், என்ன பயன் என்றால் அல்லாஹ் குர்ஆனில் உளூ செய்வது முறையை விலக்கிவிட்டு அதன் சிறப்பையும் காரணத்தையும் கூறிக்காட்டுகிறான்.

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

அல்குர்ஆன் : 5:6

எனவே உளூ அங்கசுத்தம் செய்வது மனிதர்களை சிரமத்தில் ஆழ்த்தவேண்டும் என்பதற்கல்ல . மாறாக தூய்மை படுத்துவதோடு அருளைவழங்குவதற்காகவும் தான் என்று இறைவன் கூறுகிறான். இவ்வாறு உளூவின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் முறையாக அங்கத் தூய்மை செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) நூல் : முஸ்லிம்: 413

ஒரு முறை உளூ செய்வதினால் அவனுடைய சிறு பாவங்கள் அனைத்தும் நீங்கி விடுகிறது என்றும் கடைசியாக அவனுடைய நெகக்கண்கள் வழியாக பாவங்கள் வெளியேறிவிடுகிறது என்று இதன் சிறப்பை பற்றி நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் . இது மட்டுமல்ல மறுமை நாளில் அல் கவ்தர் எனும் தண்ணீர் தடாகத்தில் நீரைப் பெற முடிகிறது.

(மறுமையில் எனக்கு வழங்கப்படவிருக்கும் அல்கவ்ஸர் எனும்) எனது நீர்த்தடாக(த்தின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென் அரபகத்திலுள்ள) அதன் நகரத்திலிருந்து (வட அரபகத்திலுள்ள) அய்லா நகர(ம் வரையிலான தூர)த்தைவிட அதிகத் தொலைவுடையதாகும். அ(தன் நீரான)து, பனிக்கட்டியைவிட மிகவும் வெண்மையானது; பால் கலந்த தேனைவிட மதுரமானது. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமானவை. ஒருவர் தமது நீர்த்தொட்டியை விட்டும் (பிற) மக்களின் ஒட்டகங்களைத் தடுப்பதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் மக்கள் சிலரைத் தடுப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம் (உங்கள் சமூகத்தாராகிய) எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ஆம்; வேறெந்தச் சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதை வைத்து உங்களை நான் அடையாளம் கண்டு கொள்வேன்)என்று கூறினார்கள்.

இ அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி) நூல் : முஸ்லிம் :416

மறுமை நாளில் அல் கவ்தர் எனும் தண்ணீர் தடாகத்தில் நீரைப் பெற அனைத்து மக்களும் வருகின்ற போது அதில் உலக வாழ்க்கையில் உளூ செய்தவர்களை உளூவின் உறுப்புகள் பிரகாசமளிக்கும் இந்த அடையாளம் கண்டு இவர்களுக்குமட்டும் அதில் இடமளிப்பார்கள்.

உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: சற்று முன்னர்தான் நீங்கள் இங்கு வந்தீர்கள்; நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நீங்கள் வருவதற்கு முன் பின்வருமாறு) கூறினார்கள்:

உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்துகொள்ளலாம்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி) நூல் : முஸ்லிம் : 397

இப்படி ஒரு வாய்ப்பு வேறு யாருக்கும் கிடைக்குமா? இது போன்ற எண்ணற்ற சிறப்புகள் உளூ செய்வதின் மூலம் கிடைக்கிறது . ஆகவே அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே பெரியோர்களே நாம் ஒவ்வொருவரும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறையில் உளூ செய்து அதற்குரிய சிறப்புகளை அடைய அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன் .