செவ்வாய், 1 டிசம்பர், 2015

அர்ஷை அவமதிக்கும் ஷாதுலிய்யா கலீபா


ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -9)

அர்ஷை அவமதிக்கும் ஷாதுலிய்யா கலீபா

அபூஉஸாமா

ஷரீஅத்தில் முழுப் பிடிப்பும், பேணுதலும் கொண்ட ஒரே தரீக்கா என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்த ஷாதுலிய்யாக்கள், மறைவான ஞானம் தங்களுக்கு இருப்பதாக வாதிடுவன் மூலம் தாங்களும் ஷியாக்களின் வாரிசு என்பதைத் தெளிவுபடுத்துகின்றனர். இந்த விபரங்களைக் கடந்த இதழில் கண்டோம். தரீக்காக்களிலேயே மிகவும் கேடு கெட்ட தரீக்கா ஷாதுலிய்யா தரீக்கா என்பதைக் கீழ்க்காணும் விபரங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

தெளிவான மது ரசம் என்னும் ரகசிய ஞான பானத்தை நான் பருகி விட்டேன். சத்தியமாக நான் அதன் போதையில் உள்ளேன். என்னிடம் அதை எதிர்த்து வாதிப்பவர் எவருமில்லை.

அதை எனக்குப் புகட்டியவர் வேறு யாருமல்லன். நண்பன் (அல்லாஹ்) தான். போதை ஏறிய பின் நான் இப்பூவுலகில் பார்க்கும் போது, எங்கும் அவன் மட்டுமே பொதுவாக இலங்குவதைப் பார்க்கிறேன். வேறெதையும் நான் பார்க்கவில்லை.

எனக்கு ஒரு கூட்டு இருப்பதைக் காணவில்லை. அல்லாஹ்வை நான் பார்க்கும் போதெல்லாம் எனக்கு எந்தத் திடுக்கமும் இல்லை.

ஆகாய நட்சத்திரத்திற்கு மேல் உள்ளவற்றையும், பூமியில் அதள பாதாளத்திற்குக் கீழ் உள்ளவற்றையும் நான் பார்த்து விட்டேன். என் பார்வையில் படாதவை எதுவுமில்லை. அர்ஸும் குர்ஸும் என் முடிவுக்குக் கட்டுப்பட்டவை.

ஒளியும் நான் தான். ஒளிகளும் நான் தான். அந்தரங்கமும் ரகசியமும் நான் தான். நானே சூரியன். என் ஒளியில் பிரகாசிப்பது தான் சந்திரன்.

இவை ஷாதுலிய்யா தரீக்காவின் அவ்ராது, பைத் மற்றும் மவ்லிதுத் தொகுப்புகள் என்று நூலில் 176ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள உளறல்களாகும்.

இலக்கிய போதையல்ல! யதார்த்த போதையே!

இந்த உளறல்களைக் கொட்டியிருப்பவரின் பெயர் முஹம்மது ஃபாஸி! இவர் தான் ஷாதுலிய்யா தரீக்காவின் முக்கியத் தூண்.

ஏதோ அல்லாஹ் அவருக்கு வழங்கிய ரகசிய ஞானத்தை, மது பானத்துடன் ஒப்பிட்டு இலக்கிய நடையில் பேசுகிறார் என்று இதை எடுத்துக் கொள்ள முடியாது. இவர் யதார்த்தமாகவே தண்ணியடித்த போதையில் பேசுவது போன்று தான் பேசுகிறார். அல்லது புத்தி பேதலித்துப் போய் புலம்புகிறார்.

தண்ணியடித்தவனுக்குத் தான் தலை, கால் புரியாது. தாய்க்கும் தாரத்திற்கும் வேறுபாடு தெரியாது. அதே நிலையை இவர் அடைந்து விட்டார் போல் தோன்றுகிறது.

ரகசிய ஞானம் எனும் மதுபானத்தை அருந்தி விட்டேன் என்று கூறி மறைவான ஞானம் தனக்கு வழங்கப்பட்டதாகப் பிதற்றுகின்றார்.

காணும் பொருள் எல்லாம் இவருக்குக் கடவுளாகத் தெரிகிறதாம். அல்லாஹ் ஒளியானவன் என்பதால் காணும் பொருளெல்லாம் ஒளியாகவே தெரிகின்றது.

இந்தக் கவிதை வரிகள் வரை, அல்லாஹ்வையும் தன்னையும் தனித்தனியாகத் தான் வைத்துப் பேசுகிறார்.

எனக்கு ஒரு கூட்டு இருப்பதைக் காணவில்லை. அல்லாஹ்வை நான் பார்க்கும் போதெல்லாம் எனக்கு எந்தத் திடுக்கமும் இல்லை.

இங்கு இவர் மெதுவாகத் தன்னை அல்லாஹ்வுடன் சங்கமிக்கச் செய்கிறார். தானும்அல்லாஹ்வும் ஒன்று தான் என்ற அத்வைதக் கருத்தை மெதுவாகத் திணிக்கிறார்.

ஆகாய நட்சத்திரத்திற்கு மேல் உள்ளவற்றையும், பூமியில் அதள பாதாளத்திற்குக் கீழ்உள்ளவற்றையும் நான் பார்த்து விட்டேன். என் பார்வையில் படாதவை எதுவுமில்லை. அர்ஸும் குர்ஸும் என் முடிவுக்குக் கட்டுப்பட்டவை.

ஒளியும் நான் தான். ஒளிகளும் நான் தான். அந்தரங்கமும் ரகசியமும் நான் தான். நானே சூரியன். என் ஒளியில் பிரகாசிப்பது தான் சந்திரன்.

என்று கூறுவதன் மூலம், தானும் அல்லாஹ்வும் ஒன்று தான் என்று தெளிவாகக் கூறி விடுகின்றார். இந்தக் கவிதை வரிகளை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

நல்ல, ஒரு புத்தி சுவாதீனமுள்ள, மறுமையில் நம்பிக்கையுள்ள ஒரு முஸ்லிம் இப்படிச் சொல்ல முடியுமா? ஒருவன் தன்னையே கடவுள் என்று கூறினால் அவனுக்கு என்ன தண்டனை? நரகம் தான் என்று கீழ்க்கண்ட வசனம் தெளிவாகப்பிரகடனப்படுத்துகின்றது.

"அவனன்றி நான் தான் வணக்கத்திற்குரியவன்'' என்று கூறுபவனுக்கு நரகத்தையே கூலியாக வழங்குவோம். அநீதி இழைத்தோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.

அல்குர்ஆன் 21:29

அதனால் புத்தி சுவாதீனமுள்ள, சுய சிந்தனையுள்ள எந்த ஒரு முஸ்லிமும் இவ்வாறு பேச மாட்டான்.

ஒன்று, இந்தப் பாஸி என்பவன் பைத்தியமாக இருக்க வேண்டும். அல்லது தண்ணியடித்திருக்க வேண்டும். அல்லது உண்மையிலேயே தன்னைக் கடவுளாகக் கருதியிருக்க வேண்டும்.

இவரது பக்தர்கள் வரைந்து தள்ளியிருக்கும் வரலாற்றுத் துணுக்குகளிலிருந்து பார்த்தால் இவர் பைத்தியக்காரராகத் தெரியவில்லை. தண்ணியடித்தவராகவும் தெரியவில்லை. எனவே, இந்தப் பாசி திட்டமிட்டு, தெரிந்து கொண்டே தன்னைக் கடவுளாக்கியிருக்கிறார். அதாவது, ஷியாக்களின் இமாம்களைப் போன்று இவரும் தன்னைக் கடவுள் நிலைக்கு உயர்த்தியிருக்கிறார். மறைவான ஞானம் பற்றி ஷியாக்கள் கூறுவதை மீண்டும் நினைவு படுத்துகிறோம்.

நாம் அல்லாஹ்வின் பூமியில் அவனது நம்பிக்கை நட்சத்திரங்கள். நம்மிடம் (மக்களுக்கு வரும்) சோதனைகள், மரணங்கள் பற்றிய ஞானங்கள் இருக்கின்றன. அரபியர்கள் தலைமுறை இஸ்லாத்தில் உருவாக்கம் பற்றிய ஞானமும் நம்மிடம் இருக்கிறது.

ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரது உள்ளத்தில் குடியிருப்பது இறை நம்பிக்கையின் தன்மையா? அல்லது நயவஞ்சகத் தன்மையா? என்று நாம் அறிந்து கொள்வோம். நம்முடைய ஷியாக்களின் பெயர்களும் அவர்களது தந்தைமார்களின் பெயர்களும் பதியப்பட்டவர்கள் ஆவர். அல்லாஹ் நம்மிடமும் அவர்களிடமும் வாக்குறுதி எடுத்திருக்கிறான்.

அல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம்: 223

இப்போது மீண்டும் ஒரு முறை ஷாதுலிய்யாவின் வார்த்தைகளைப் படியுங்கள்.

ஆகாய நட்சத்திரத்திற்கு மேல் உள்ளவற்றையும், பூமியில் அதள பாதாளத்திற்குக் கீழ் உள்ளவற்றையும் நான் பார்த்து விட்டேன். என் பார்வையில் படாதவை எதுவுமில்லை. அர்ஸும் குர்ஸும் என் முடிவுக்குக் கட்டுப்பட்டவை.

என்ன ஆணவமும், அகந்தையும் இருந்தால் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவார் என்று சிந்தித்துப் பாருங்கள்.

மலக்குகளுக்குத் தெரியாத ரகசியம்

அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!'' என்று கேட்டான்.

"நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவுஇல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்'' என்று அவர்கள் கூறினர்.

"ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!'' என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறிய போது, "வானங்களிலும்,பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா?'' என (இறைவன்) கேட்டான்.

அல்குர்ஆன் 2:31-33

வானங்களில், பூமியில் உள்ள ரகசியங்கள் அனைத்தும் தனக்கு மட்டுமே தெரியும்; மலக்குகளுக்குக் கூட தெரியாது என்று அல்லாஹ் சொல்கிறான். இந்தப் பாசியோதனக்கு அனைத்தும் தெரியும் என்று பெருமையடிக்கிறார்.

ஜின்களுக்கும் தெரியாது

அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் "நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே'' என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.

அல்குர்ஆன் 34:14

இறைத் தூதர்களுக்கும் தெரியாது

"அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! "குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?'' என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 6:50

யாருக்கும் தெரியாத ரகசியம்

"வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 27:65

வானங்கள், பூமியில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்.

வானத்திற்கு மேல் உள்ள ரகசியங்கள் எனப்படுபவை சாதாரணமான விஷயங்கள் அல்ல! அவற்றை எந்தவொரு சாதாரண மனிதனும் பார்க்க முடியாது. அதனால் தான் அல்லாஹ் இதைச் சிலாகித்துச் சொல்கிறான்.

தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான். அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா? ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார்.

அல்குர்ஆன் 53:10-18

இப்படிப்பட்ட மிகச் சிறப்பு மிக்க அதிசயங்களையும், அற்புதங் களையும் முகவரி இல்லாத இந்தப் பேர்வழிகள் தங்களுக்குத் தெரியும் என்று கூறுகிறார்கள் என்றால் அதற்கு அடிப்படைக் காரணம், இந்தப் பொய்களையும் நம்புவதற்கு, சுய சிந்தனையை இழந்த ஒரு கூட்டம் இருப்பதால் தான்.

இந்த இழி நிலையிலிருந்து நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! இந்த ஷைத்தானின் சதிவலையில் இனியும் யாரேனும் வீழ்ந்து விடாமல் காப்பதே இந்தத் தொடரின் லட்சியம்! அதற்காகத் தான் இந்த அறியாமைக் கருத்துக்களையும்,ஆணவக் கருத்துக்களையும் இங்கே தொடர்ந்து அடையாளம் காட்டி வருகிறோம்.

ரகசிய ஞானம் எனும் மதுரச பானம் என்பதெல்லாம் ஏமாற்று, பசப்பு வார்த்தைகள். உண்மையில் இது ஷியாயிஸம் தரும் விஷ பானமாகும். இதைப் பருகி நம்மை நாமே அழித்து விடக் கூடாது.

பொதுவாக நாம் ஓர் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். தரீக்கா என்று சொல்லி விட்டாலே அது ஷியா தான். காரணம் எல்லாத் தரீக்காக்களுமே சங்கிலித் தொடராகச் சென்று முடிவது அலீ (ரலி)யிடம் தான்.

இரண்டில் இல்லாத ரகசிய ஞானம்?

ரகசிய ஞானம்! யாருக்கும் இல்லாத ரகசிய ஞானம் என்று பாட்டுப் படிப்பது ஷியாக்கள் தான். அந்தப் பாட்டைத் தான் சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறும் இந்தத் தரீக்காக்களும் படிக்கின்றன. இவ்வாறு படிப்பதற்கு ஓர் அடிப்படைக் காரணமும் உண்டு.

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு மூல ஆதாரங்களில் இல்லாத ரகசிய ஞானம் அலீ (ரலி) அவர்களுக்கு இருப்பதாக அன்னார் வாழும் போதே கிளம்பி விட்டது. அலீ (ரலி) அவர்களின் வாழ்நாளிலேயே அவர்களிடம் நேரடியாக இது பற்றிக் கேட்கப் பட்டுவிட்டது.

அபூ ஜுஹைஃபா (ரலி) அறிவித்தார்: நான் அலீ (ரலி) அவர்களிடம், "நபியவர்களின் குடும்பத்தினராகிய) உங்களிடம் குர்ஆனில் இல்லாத ஏதேனும் (செய்தி) உள்ளதா?'' என்று கேட்டேன். அதற்கு அலீ (ரலி) அவர்கள், "வித்துக்களைப் பிளந்தவனும் உயினங்களை உருவாக்கியவனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக! குர்ஆனில் இருப்பதைத் தவிர வேறெதுவும் (நபியின் குடும்பத்தாராகிய) எங்களிடம் இல்லை. இறைவேதத்தில் ஒரு மனிதருக்கு வழங்கப்படும் விளக்கத்தையும் இந்த ஏட்டில் உள்ளவற்றையும் தவிர'' என்று கூறினார்கள். நான் "இந்த ஏட்டில் என்ன இருக்கிறது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "இழப்பீடு (தொடர்பான விளக்கங்கள்), போர்க் கைதியை விடுவித்தல், இறைமறுப்பாளனுக்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக் கூடாது ஆகிய விஷயங்கள் இதிலுள்ளன'' என்றார்கள்.

(அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) சில வேளைகளில் "மக்களிடம் இல்லாத ஏதேனும் ஒன்று உங்களிடம் உள்ளதா?'' என்று அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்கள் கேட்டார்கள் என அறிவித்தார்.)

நூல்: புகாரி 6903

அலீ (ரலி) அவர்கள் அன்றே இந்த வாசலை அடைத்து விட்டார்கள்; ஆப்பு வைத்துவிட்டார்கள். இருப்பினும் யூத மதம் தனது கைப்பிள்ளையான ஷியாயிஸத்தைப் புகுத்தி இந்த வழிகேட்டின் வாசலைத் திறந்து விட்டது. அது இன்னும் தொடர்ந்து நரகத்தின் வாசலுக்கு இழுத்துச் செல்கின்றது. அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

ஃபாஸிக்காக ஆடும் அல்லாஹ்வின் அர்ஷ்

அர்ஸும் குர்ஸும் என் முடிவுக்குக் கட்டுப்பட்டவை.

இந்தப் பாஸியின், பாவியின் தடித்த நாவில் வெடித்துச் சிதறும் அணுகுண்டைப்பாருங்கள். அல்லாஹ்வுடைய அச்சம் கடுகளவு இருப்பவன் கூட இவ்வளவு பெரியகொடிய, அக்கினி வார்த்தைகளைச் சொல்ல மாட்டான். இந்த ஃபாஸி தன்னைக்கடவுளாகக் பாவித்ததன் காரணமாகத் தான் அபாயகரமான அணுகுண்டு வார்த்தைகளை வெடிக்கிறார்.

யூதமும், அதன் கள்ளப் பிள்ளையும் தான் அல்லாஹ்வின் விஷயத்தில் அதிபயங்கரமான வார்த்தைகளைச் சொல்லத் தயங்க மாட்டார்கள்.

"அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது'' என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான்.

அல்குர்ஆன் 5:64

யூதர்கள் கூறியது போன்ற ஒரு பயங்கரமான சுடு சொல்லை, இந்தப் பாஸி சொல்கிறார்.

அர்ஷும் குர்ஸும் இவருடைய முடிவுக்குக் கட்டுப்பட்டதாம். அதாவது, இவருடைய கட்டளைக்கு, காட்டுகின்ற கை விரலுக்குத் தக்க ஆட்டம் போடுமாம். இது தான் இந்தப் பாசி பிடித்த பாஸியின் கருத்து.