செவ்வாய், 1 டிசம்பர், 2015

கடவுளாக மாறிய ஷாதுலிய்யா கலீஃபா?


ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -11)

கடவுளாக மாறிய ஷாதுலிய்யா கலீஃபா

அபூஉஸாமா

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் 7:54

அர்ஷ் என்பது அல்லாஹ்வின் ஆசனமாகும். இதை மேற்கண்ட வசனத்திலும், 9:129, 10:3, 13:2, 17:42, 21:22, 23:86, 23:116, 25:59, 27:26, 32:4, 39:75, 40:7, 40:15, 43:82, 57:4, 81:20 ஆகிய வசனங்களிலும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இதில் 9:129, 23:86 ஆகிய வசனங்களில் மகத்தான அர்ஷ் என்றும், 23:116 வசனத்தில் கண்ணியமிக்க அர்ஷ் என்றும், 17:42, 81:20 ஆகிய வசனங்களில் அர்ஷின் நாயன் என்று அர்ஷுடன் தன்னை இணைத்தும் வல்ல அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

இப்படிப்பட்ட அர்ஷைத் தான் பாசியும், தூசியும் படிந்த பாஸி, தனக்குக் கட்டுப்பட்டது என்று கூறுகிறார். இதிலிருந்து இவரது அகந்தையையும், ஆணவத்தையும் தெரிந்துகொள்ளலாம். இந்த அகந்தையும், ஆணவமும் யூத, ஷியாயிஸத்தின் பிறவிக் குணங்களாகும். இந்தப் பாஸியும் அந்த வகையறாக்களில் உள்ளவர் என்பதால் அவர் அந்தக் குணத்தைப் பிரதிபலிக்கின்றார்.

அல்லாஹ் தனது குர்ஆனில் அர்ஷுக்கு வழங்கும் மரியாதையை மேலே குறிப்பிட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அர்ஷுக்கு அளிக்கும் மரியாதையைப் பாருங்கள்.

"அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலை நிறுத்தி ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் புகச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகி விட்டது. அவர் இறை வழியில் அறப்போர் புரிந்தாலும் சரி அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரி'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கலாமா?'' என்று (நபித் தோழர்கள்) கேட்டதற்கு அவர்கள், "சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றை அல்லாஹ், தன் பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காகத் தயார்படுத்தி வைத்துள்ளான். இரண்டு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும், பூமிக்கும் இடையில் உள்ளது போன்ற தொலைவு உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால் ஃபிர்தவ்ஸ் என்னும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள். ஏனெனில் அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும்'' என்றுகூறினார்கள்.

(அறிவிப்பாளரான) யஹ்யா இப்னு சாலிஹ் கூறினார்:

மேலும், "அதற்கு மேலே கருணையாளனின் அர்ஷு - சிம்மாசனம் இருக்கிறது. இன்னும் அதிலிருந்தே சொர்க்கத்தின் ஆறுகள் பாய்கின்றன'' என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கருதுகிறேன்.

மற்றோர் அறிவிப்பாளரான முஹம்மத் இப்னு ஃபுலை (ரலி) தம் தந்தையிடமிருந்து, "அதற்கு மேலே ரஹ்மானின் அர்ஷு இருக்கிறது'' என்று அவர்கள் கூறினார்கள் என(சந்தேகமின்றி) அறிவித்தார்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2790

இப்படிப்பட்ட ஃபிர்தவ்ஸ் என்ற சுவனத்திற்கு மேல் அர்ஷ் உள்ளது. அல்லாஹ்வின் அர்ஷ் உள்ள காரணத்தினாலேயே அந்த பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை நீங்கள் கேளுங்கள் என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் அர்ஷின் மகத்துவத்தை உணர்த்துகிறார்கள். அத்தகைய மாண்புமிகு அர்ஷ் தனக்குக் கட்டுப்படுகின்றது என்று பாஸி விஷம் கக்குகிறார்.

சுவனம் என்பது ஒரு முஃமினுக்குக் கிடைக்கும் மாபெரும் பாக்கியமாகும். அந்தச்சுவனத்திலும் அர்ஷுக்குக் கீழே உள்ள சுவனத்தில் இடம் கிடைப்பது மாபெரும்மகத்தான அருட் கொடையாகும். இப்படி அர்ஷுக்குக் கீழ் இடம் கிடைப்பது பாக்கியம் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல இந்த ஃபாஸியோ, மகத்தான அர்ஷ் தனக்குக் கீழ் உள்ளது என்று கூறத் துணிகிறார் என்றால் இவர் நிச்சயமாக யூத, ஷியாக்களின் மறு பிறவி தான் என்பதில் கடுகளவு கூட சந்தேகமில்லை.

நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்த போது யூதர் ஒருவர் வந்து "அபுல்காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்து விட்டார்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் "யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் "அன்சாரிகளில் ஒருவர்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் "அவரைக் கூப்பிடுங்கள்'' என்று உத்தரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன் "இவரை நீர் அடித்தீரா?'' என்று கேட்டார்கள். அந்த அன்சாரி "இவர் கடை வீதியில் "மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததைச் செவியுற்றேன். உடனே நான் "தீயவனே! முஹம்மதை விடவா (மூஸா மேன்மை வாய்ந்தவர்)?' என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட இவரின் முகத்தில் அறைந்து விட்டேன்'' என்றுகூறினார்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் "நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில் மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது பூமி பிளந்து வெளிப்படுத்துபவர்களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது நான் மூஸாவை அர்ஷின் கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். "மூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா? அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்ட போது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதும்; இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு) விட்டதா? என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத்அல்குத்ரீ(ரலி)

நூல்: புகாரி 2412

இறைத் தூதர்களில் மிக முக்கியமான மாபெரும் இறைத் தூதர் மூஸா (அலை) அவர்கள், மறுமை நாளில் அர்ஷின் கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு நிற்பார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த அர்ஷை, அனாமதேய ஃபாஸி தனக்குக் கீழ் இருப்பதாகக் கூறி அவமரியாதை செய்கிறார்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு விருந்தில் இருந்தோம். அப்போது முன்னங்கால் (இறைச்சி) ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. நபி (ஸல்) அவர்கள் வாயால் பற்றிக் கொண்டு அதிலிருந்து சிறிது உண்டார்கள்.

பிறகு அவர்கள் கூறியதாவது: "நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன். (மறுமை நாளில்) அல்லாஹ் (மக்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தொயுமா? பார்ப்பவர் அந்த மக்களைப் பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியேற்பார்கள். சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி) "நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதையும் உணர்ந்து உங்களுக்கு உங்களுடைய இறைவனிடம் பரிந்துரை செய்பவரைப் பார்க்க மாட்டீர்களா?'' என்று கேட்பார்கள். மக்கள் சிலர் "உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)'' என்று கூறுவார்கள். எனவே மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று "ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள். உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியும் படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். உங்களை சொர்க்கத்தில் குடியமர்த்தினான். நீங்கள் உங்களுடைய இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரைசெய்ய மாட்டீர்களா? நாங்கள் இருக்கும் நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் நிலையையும் நீங்கள் பார்க்க வில்லையா?'' என்று கேட்பார்கள்.

அதற்கு ஆதம் (அலை) அவர்கள் "(நான் செய்த தவறின் காரணத்தால்) என் இறைவன் என் மீது கோபமுற்றான். அதற்கு முன் அதைப் போன்று அவன் கோபித்ததில்லை. அதற்குப் பிறகும் அதைப் போல் அவன் கோபம் கொள்ள மாட்டான். மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னைத் தடுத்தான். நான் (அவனுக்கு) மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையிலுள்ளேன். (எனவே!) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்'' என்று கூறுவார்கள்.

உடனே மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று "நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (சட்டங்களுடன் அனுப்பப்பட்ட) முதல் இறைத் தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் "நன்றி செலுத்தும் அடியார்'' என்று குறிப்பிட்டுள்ளான். நாங்கள் இருக்கும் அவல நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்துள்ள நிலையை நீங்கள் காணவில்லையா? எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்துரைக்க மாட்டீர்களா?'' என்று கேட்பார்கள்.

அதற்கு அவர்கள் "என் இறைவன் இன்று என் மீது கோபமுற்றுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபித்ததில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் கோபம் கொள்ள மாட்டான். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் (இறுதி) நபி (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்'' என்று கூறுவார்.

மக்கள் என்னிடம் வருவார்கள். நான் அர்ஷுக்குக் கீழே ஸஜ்தாச் செய்வேன். அப்போது "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துவீராக! பரிந்துரை செய்யுங்கள். (உங்கள்) பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும். கேளுங்கள். அது உங்களுக்குத் தரப்படும்'' என்று சொல்லப்படும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3340

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அர்ஷுக்குக் கீழ் ஸஜ்தாச் செய்வதன் மூலம் அர்ஷின் மகிமையை நமக்கு உணர்த்துகிறார்கள். ஆனால் ஷாதுலிய்யா கலீபாவான ஃபாஸியோ, அர்ஷ் தனக்குக் கீழ் தான் உள்ளது என்று கூறுவதன் மூலம் இறைத் தூதர் (ஸல்) அவர்களையும் சேர்த்தே இழிவுபடுத்துகிறார்.

நபி (ஸல்) அவர்கள் துன்பம் நேரும் போது "லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வ ரப்புல் அர்ஷில் அழீம்'' என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: கண்ணியம் மிக்கவனும் ,பொறுமை மிக்கவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் மாபெரும் அர்ஷின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 6345

சோதனையான கட்டத்தின் போது நபி (ஸல்) அவர்கள் ஓதுகின்ற இந்த துஆவில் அர்ஷின் நாயன் என்று கூறுகின்றார்கள். வானங்கள் மற்றும் பூமியின் அதிபதி என்பதற்குச் சமமான மற்றொரு புகழ் வார்த்தையாக அர்ஷின் நாயன் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அந்த அளவுக்குச் சிறப்பு வாய்ந்த மகத்துவமிக்க அர்ஷ், ஷாதுலிய்யா தரீக்காவின் பாதிரி ஃபாஸியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றால் அல்லாஹ்வே அவரது கட்டுப்பாட்டில் உள்ளவன் என்றாகி விடாதா?

அல்லாஹ்வின் அந்தஸ்தைக் குறைத்துக் கூறுவதன் மூலம், தான் ஒரு யூத, ஷியா வம்சாவளி, வழித்தோன்றல் என்று தெளிவாக உணர்த்துகின்றார். இவரையும் ஒரு கூட்டம் வலியுல்லாஹ் என்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றது என்றால் இவர்கள் எப்படி சுன்னத் வல் ஜமாஅத்தாக இருக்க முடியும்? நிச்சயமாக இவர்களும் ஷியாக்கள் தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்படும் அர்ஷின் அந்தஸ்து மற்றும் மரியாதையைத் தெரிந்த எந்த ஓர் இறை விசுவாசியும் ஃபாஸியின் திமிர் பிடித்த வார்த்தைகளை ஜீரணிக்க மாட்டான். இந்தக் கருத்துக்கள் அடங்கிய ஷாதுலிய்யா பைத்தை நடுச்சந்தியில் வைத்துக் கொளுத்தாமல் விட மட்டான். அவ்வளவு சாபக்கேடான கவிதை வரிகளை ஷாதுலிய்யா தரீக்காவின் தனி வேதமான மவ்லிது தெரிவிக்கின்றது.

ஷாதுலிய்யாவின் பலான ஆசாமி ஃபாஸி இத்துடன் நிற்கவில்லை. அர்ஷ் தனக்குக் கட்டுப்படுகின்றது என்று மட்டும் சொல்லி நிறுத்தி விடவில்லை. அதன் அர்த்தத்தை அடுத்த வரியிலேயே போட்டு உடைக்கின்றார்.

ஒளியும் நான் தான். ஒளிகளும் நான் தான். அந்தரங்கமும் ரகசியமும் நான் தான். நானே சூரியன். என் ஒளியில் பிரகாசிப்பது தான் சந்திரன்.

அர்ஷ் தன் கட்டுப்பாட்டில் உள்ளது என்று ஏன் சொல்கிறார்? என்று நாம் திகைக்கவேண்டிய அவசியமே இல்லை. அர்ஷின் மீது இவர் ஏறி அமர்ந்து விட்டால் அர்ஷ்தானாகவே இவரது கட்டுப்பாட்டில் வந்து விடுகின்றது அல்லவா?

அதாவது இவர் அல்லாஹ்வுடன் இரண்டறக் கலந்து விடுகின்றார். அதனால் தான் ஒளியும், ஒளிகளும் நான் தான் என்று கூறுகின்றார். அல்லாஹ்வும் இவரும் சங்கமமாகி விட்டால் அர்ஷ் இவரது கட்டுப்பாட்டில் வந்து விடுமல்லவா? அதைத் தான் இங்கு கூறுகிறார். அல்லாஹ் தூய்மையானவன். இந்த இணை வைப்புக் கவிதையிலிருந்து நம்மைக் காப்பானாக!

இந்த அபத்தத்தையும் அபாண்டத்தையும் நாம் எப்படிச் சகித்துக் கொள்வது என்றே தெரியவில்லை. எவ்வளவு பெரிய துணிச்சல் என்று பாருங்கள்.

அல்லாஹ், வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாவான். அவனது ஒளிக்கு உவமை ஒரு மாடம். அதில் ஒரு விளக்கு உள்ளது. அவ்விளக்கு ஒரு கண்ணாடிக்குள் உள்ளது. அக்கண்ணாடி ஒளி வீசும் நட்சத்திரம் போன்றுள்ளது. பாக்கியம் பொருந்திய ஸைத்தூன் (ஒலிவ) மரத்திலிருந்து அது எரிக்கப்படுகிறது. அது கீழ்த்திசையைச் சேர்ந்ததுமன்று. மேல் திசையைச் சேர்ந்ததுமன்று. நெருப்பு படா விட்டாலும் அதன் எண்ணையும் ஒளி வீசுகிறது. (இப்படி) ஒளிக்கு மேல் ஒளியாகவுள்ளது. தான் நாடியோருக்கு அல்லாஹ் தனது ஒளியை நோக்கி வழி காட்டுகிறான். மனிதர்களுக்காக உதாரணங்களை அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

அல்குர்ஆன் 24:35

இந்த வசனத்தில் அல்லாஹ் தன்னை எப்படிக் கூறுகின்றானோ அது போன்றே ஃபாஸி என்ற ஷைத்தானும் கூறுவதாக ஷாதுலிய்யா பைத் கூறுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை வர்ணிக்கும் வார்த்தை வடிவங்களைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் "இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவை அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவற்றின் உரிமை உனக்கே உரியது. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மையாளன். உன் வாக்குறுதி உண்மை. உன்னுடைய சந்திப்பு உண்மை. உன்னுடைய கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மையாளர்கள். முஹம்மது உண்மையாளர். மறுமை நாள் உண்மை. இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன் மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்து விடு. நீயே முற்படுத்துபவன்; பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்கு உரியவன் வேறு யாரும் இல்லை. உன்னுடைய உதவியின்றி நன்மை செய்யும் ஆற்றலோ தீமையிலிருந்து விடுபடும் ஆற்றலோ இல்லை'' என்று கூறிவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1120

அல்லாஹ் தனது குர்ஆனில் எவ்வாறு தன்னைப் பற்றிக் கூறுகின்றானோ அது போன்ற வார்த்தைகளை நபி (ஸல்) அவர்களும் கூறி, மனம் ஒன்றி ஒருமைப்படுத்திக் கூறி தமது பிரார்த்தனைகளை அவன் முன் சமர்ப்பிக்கிறார்கள்.

திருக்குர்ஆனும், நபிமொழியும் அல்லாஹ்வைப் பற்றிக் கூறும் இந்த வர்ணனைகளை ஃபாஸி என்ற ஷாதுலிய்யா கலீபா அப்படியே தனக்குப் பொருத்திப் பார்க்கிறார்.

"அவனன்றி நான் தான் வணக்கத்திற்குரியவன்'' என்று கூறுபவனுக்கு நரகத்தையே கூலியாக வழங்குவோம். அநீதி இழைத்தோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.

அல்குர்ஆன் 21:29

தன்னையே கடவுள் என்று கூறும் இந்த சாயிபாபாக்களுக்கு அல்லாஹ் வழங்கும் பரிசு நரகம் தான் என்று இந்த வசனம் தெளிவாக அறிவிக்கின்றது.

இப்படிப்பட்ட இந்த வார்த்தைகளைத் துணிந்து யார் சொல்வார்கள்? யூத வர்க்கம் தான்.

"அளவற்ற அருளாளன் பிள்ளையை ஏற்படுத்திக் கொண்டான்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அபாண்டத்தையே கொண்டு வந்து விட்டீர்கள். அளவற்ற அருளாளனுக்குப் பிள்ளை இருப்பதாக அவர்கள் வாதிடுவதால் வானங்கள் வெடித்து, பூமி பிளந்து மலைகள் நொறுங்கி விடப் பார்க்கின்றன. பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளும் அவசியம் அளவற்ற அருளாளனுக்கு இல்லை. வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.

அல்குர்ஆன் 19:88-93

யூதர்களின் ஏகபோக வாரிசுகளான ஷியாக்களும் அல்லாஹ்வின் தன்மைகளை மனிதர்களுக்கு வழங்கி அழகு பார்ப்பவர்கள் என்பதைக் கடந்த இதழ்களில் கண்டோம். அதைத் தான் இந்த ஷாதுலிய்யாக்கள் எதிரொலிக்கின்றனர்.

திருக்குர்ஆனின், திருத்தூதரின் கட்டளைகளை உணர்ந்தவர்கள் இது போன்ற அகம்பாவமான வார்த்தைகளை ஒரு போதும் சொல்ல மாட்டார்கள்.

அல்லாஹ்வை அவமதிப்பது, அவனுடைய இடத்தில் தன்னைக் கொண்டு வந்து நிறுத்துவது அனைத்துமே இறைவனுக்கு இணை கற்பிக்கும் ஷிர்க் மற்றும் குஃபர் ஆகும். இந்த இணை வைப்பையும், இறை மறுப்பையும் தான் ஷாதுலிய்யா கட்சியினர் அவ்ராதுத் தொகுப்புகளில் ஓதிக் கொண்டிருக்கின்றனர்.

ஷாதுலிய்யா பக்தர்களே! நாம் சுவனத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் இந்த அவ்ராதுத் தொகுப்புகளைத் தீயில் போட்டு விட்டு, குர்ஆன் ஹதீஸ் கூறும் தூய பாதையின் பக்கம் திரும்ப வேண்டும். இல்லையேல் நரகத் தீயில் நிரந்தரமாக வெந்து சாக வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவரையும் காப்பானாக!