செவ்வாய், 10 ஜனவரி, 2017

30-12-2016 அன்று நடைபெற்ற QITC யின் மாபெரும் ‪இரத்ததான முகாம்



கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக 30-12-2016 வெள்ளிகிழமை அன்று ஹமத் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் ‪இரத்ததான முகாம்‬ நடைபெற்றது.

ஜூம்மா தொழுகையின் பின்னர் மதிய உணவுடன் பிற்பகல் இரண்டு மணிக்கு துவங்கப்பட்ட முகாம் இரவு ஒன்பது மணிவரை நடைபெற்றது.

இதில் சுமார் 250 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் இரத்த தானம் வழங்க வருகை புரிந்தனர். குறிப்பாக ‪ இந்திய‬ ‎இலங்கை‬ ‎முஸ்லிம்‬ மற்றும் ‪‎மாற்றுமத‬ சகோதரர்கள் ஆர்வத்துடன் குருதி கொடை முகாமில் கலந்து கொண்டார்கள்.

வருகை தந்திருந்த சகோதர்கள் அனைவரையும் முறைபடுத்தி வருகை பதிவு செய்து வருகை எண் வழங்கப்பட்டது. பின்னர்‪ ‎ஹமத் மருத்துவ‬ குழுவிற்கு உடல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு தகுதி பெற்ற சகோதர்கள் ‪இரத்ததானம்‬ அளிக்க அனுமதிக்கப்பட்டனர். மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் நேரம் போதாமை போன்ற காரணங்களினாலும்‪ 116‬ நபர்கள் மாத்திரமே தங்களின் குருதிக்கொடைகளை வழங்கினர்.

நமது இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற ஹமத் மருத்துவமனை‬ ‪இரத்த வங்கி‬ ‪மருத்துவர்கள்‬,‪ செவிலியர்கள்‬, ‪ஆய்வாளர்கள்‬ என 11 பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்தது. மேலும் 5 படுக்கை கொண்ட நவீன பேருந்தையும் QITC மர்கஸ்க்கு அனுப்பி இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற உதவியது.

ஆர்வத்துடன் வந்த 80 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் இரத்தம் எடுக்க ஏற்பட்ட கால தாமதத்தினால் திரும்ப சென்றுவிட்டார்கள், தூரத்தில் இருந்து வந்த சகோதரர்கள், பதிவு மாலை 6:00 மணியுடன் முடிந்து விட்டது என்பதை அறிந்து வருத்தத்துடன் திரும்பினார்கள், இது போன்ற அசௌகரியங்களுக்காக எங்களின் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம், இனிவரும் காலங்களில் HMC இரத்த பிரிவு மையத்தில் குறைந்தது 5+5 படுக்கை வசதி கொண்ட இரண்டுவாகனங்களை அனுப்பித் தர கோரிக்கை வைக்க வேண்டும் எனவும் மண்டல நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டது.

‪‎இம்முகாம் சிறப்பாக நடைபெற குருதிக் கொடை செய்து ஒத்துழைப்பு நல்கிய சகோதர சகோதரிகளுக்கும், கிளைப் பொறுப்பாளர்கள், கொள்கை சொந்தங்கள், உணவுக் குழு, வாகனக் குழு, செயல்வீரர்கள் மற்றும் கலந்துகொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

இம் மகத்தான உயிர்காக்கும் பணியில் நம் அனைவரையும் பங்கு கொள்ளச்செய்து நற்கூலிகளை வாரிவழங்கி நம் பாவங்களை மன்னிக்க காத்திருக்குக்கும் அகில உலக அதிபதி அல்லாஹ்விற்கு நன்றி கூறி அனைத்து புகழும் அவனுக்கே உரித்தாக்குகிறோம்.


"ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" (அல் குர்ஆன்: 5:32)