வியாழன், 27 ஏப்ரல், 2017

வீண் விரயம் செய்யாதீர்கள்


இன்றைக்கு பணத்தின் அருமை பெருமைகளை நாம் துளிகூட உணர்வுபூர்வமாக உணரவில்லை. அதனால்தான் பணத்தைத் தண்ணீராய் செலவு செய்து கொண்டிருக்கின்றோம். செலவு என்பது தவிர்க்க முடியாத ஒன்று; அதே வேளை வீண் செலவுகள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

மரணத்தைப் பற்றி மனிதன் நினைத்துப் பார்ப்பதே இல்லை. அதனால்தான் அவன் வீண் விரயங்களைக் குறித்து கவலைப் படுவதே இல்லை. நாம் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, வசிக்கும் வீடு, பேசும் பேச்சு என்று நமது வீண் விரயப் பட்டியலை வெகு எளிதாகப் பட்டியலிட்டு விடலாம்..

நமக்குத் தேவை ஆரோக்கியமான வாழ்வே தவிர ஆடம்பரமான வாழ்வல்ல. நாம் வாழ்வதற்கு பொருள் வேண்டும்; நாம் வாழ்வதிலும் பொருள் வேண்டுமல்லவா?

‘‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை; அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை’’ என்ற திருக்குறளின் குரல் நம் செவிகளில் ஓங்கி ஒலிக்கவில்லையா? இப்போது திருக்குர்ஆனின் குரல் ஒன்றைச் செவியேற்போமா..

‘‘மனிதன் எத்தகையவன் என்றால்.. பொருளைச் சேமித்து அதனைக் கணக்கிட்டு தன்னிடமே வைத்துக் கொண்டான். நிச்சயமாக தனது பொருள் தன்னை இவ்வுலகில் நிரந்தரமாக்கி வைக்கும் என அவன் நினைத்துக் கொண்டான்.’’ (திருக்குர் ஆன்–104:2)

‘‘நீங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள்; நிச்சயமாக வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர் ஆன்–6:141)

‘‘ஒருவருக்கொருவர் அதிகமதிகமாகத் தேடிக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களை தூரமாக்கி விட்டது’’ (திருக்குர் ஆன்–102:1) என்ற திருமறை வசனம் கூர்ந்து கவனிக்கத் தக்கதாகும். ‘‘மண்ணறைகளை நீங்கள் தரிசிக்கும் வரை’’ என்று அடுத்த வசனம் அப்பேராசை அழிய அற்புதமான வழியைக் காட்டுறது.

வீண்விரயம் தொடர்பாக அல்குர்ஆனில்…

. “மேலும், (அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாக) உண்ணுங்கள். மேலும், பருகுங்கள். (ஆனால்) வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்கமாட்டான்.” (அல்அஃராஃப்: 31)

. “(செல்வத்தை) அளவு கடந்து வீண் விரயம் செய்யாதுமிருப்பீராக! நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ, தன் இரட்சகனுக்கு நன்றி செலுத்தா(து மாறு செய்)தவனாக இருக்கின்றான்.” (பனீ இஸ்ராயீல்: 26, 27)

வீண் விரயமானது பல்வேறுபட்ட அமைப்புக்களில் நமது சமுகத்திற்கு மத்தியில் தலைவிரித்தாடுகின்றது.…

உணவில் வீண்விரயம் . வுழு செய்யும் போது நீரை வீண்விரயம் செய்தல்.

மின்சாரம் மற்றும் எரிபொருட்கள் உபயோகங்களின் போது வீண்விரயம் செய்தல்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது கையிலிருந்து தவறி கீழே விழும் சிறுத் துண்டு உணவைக் கூட எடுத்து துடைத்து விட்டு சாப்பிடச் சொல்கிறது இஸ்லாம் ''...உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒருத் துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும் அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம்,

என்று அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுருத்தினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்கள்: முஸ்லிம், அஹமத், அபூதாவூத், திர்மிதி)

ஒரு சிறுத் துண்டைக் கூட ஷைத்தானுக்கு விட வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகையில் தட்டை, தட்டையாக கொண்டு போய் குப்பையில் தட்டலாமா?

சிந்தித்தால் ...

விருந்துகளுக்கு அழைக்கப்படுபவர்களில் ஏழைகளும் இருக்க வேண்டும் என்று ஏற்றத் தாழ்வுகளைக் கலைந்து சமநிலைப படுத்திய இஸ்லாம் வலியுருத்துவதுடன் ஏழைகள் அழைக்கப்படாத விருந்தே விருந்துகளில் வெறுக்கத்தக்கது என்றும் கண்டிக்கிறது இஸ்லாம். வலீமா விருந்துகளில் கெட்ட விருந்து பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கனிக்கப்படும் விருந்தாகும் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரகள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி-முஸ்லீம்)

அல்லாஹ் மனிதனுக்குப் பொருள் வளத்தை அதிகப்படுத்த, அதிகப்படுத்த மனிதன் தன்னுடைய சுகபோகத்திற்காக, சுயநலனிற்காக தனக்குப் பொருள் வளத்தை வழங்கிய அல்லாஹ்வை மறந்து அதை வீண் விரயம் செய்து ஷைத்தானின் தோழனாகி விடுகின்றார்கள்.

இன்று உலகில் எத்தனையோ மக்கள் உணவு கிடைக்காமல் செத்து மடிவதற்கான காரணங்களில் குறிப்பிட்ட ஓரிடத்தில் உணவுகள் சீரழிக்கப்படுவதும் முக்கியக் காரணம் என்பதை ஏன் பலருடைய மனம் ஏற்க மறுக்கின்றது? சிந்தியுங்கள் சீர் பெறுவீர்கள்.

வீண், விரயம் நம் அன்றாட வாழ்வின் சகலதிலும் ஒட்டி, ஒன்றாகிப் போய்விட்டன. ஊதாரிகளாக வாழ்க்கைப் படகோட்டுகிறோம். நாம் அறியாமலேயே, உணராமலேயே வீணடிக்கின்றோம். விரயமாக்கின்றோம். அது எமக்கு ஒரு பொருட்டுமல்ல. ஆனால் வீணாக்கிய, விரயமாக்கிய ஒவ்வொன்றுக்கும் மறுமையில் கணக்குக் கொடுத்தாக வேண்டும்.

ஆகவே வீண், விரயம் தவிர்த்து இறை அன்பை, அருளை, பரக்கத்தைப் பெற்றிட முயற்ச்சி செய்வோம்!