செவ்வாய், 19 நவம்பர், 2019

ஏகத்துவம் மாத இதழ் - நவம்பர் 2019

ஏகத்துவம் - ஓரிறைக் கொள்கை விளக்க மாத இதழ் - நவம்பர் 2019

PDF டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.




வெள்ளி, 8 நவம்பர், 2019

மனித குலத்தின் முன்னோடி நபிகள் நாயகம் (6)


குற்றவியல் சட்டங்களால் தேசத்தை காத்தவர்

உலகெங்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பலவகையான குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றன. ஒரு நாட்டின் அரசாங்கம் எத்தகைய சட்டங்களைக் கொண்டு வந்தாலும் இவை குறைந்த பாடில்லை.

இதற்கு மிக முக்கிய காரணம், தவறு செய்தவனுக்கு தகுந்த தண்டனை வழங்கப் படாமல் இருப்பதாகும். இதனால் தவறு செய்பவன் மென்மேலும் தவறு செய்ய தூண்டப்படுகிறான்.

மேலும் மனிதச் சட்டங்களில் குற்றங்களை செய்துவிட்டு தப்பிப்பதற்கு பல ஓட்டைகள் உள்ளன. இதன் காரணமாக, பல நிரபராதிகள் தண்டிக்கப்படுகின்றனர். பல குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்து விடுகின்றனர். படைத்த இறைவனால் வழங்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே தவறுகளுக்குத் தகுந்த தண்டனைகளையும் வழங்குகிறது. அதை நபிகளார் தமது ஆட்சியில் செம்மையாக நிறைவேற்றியதன் மூலம் தேச மக்களை காத்தார்கள்.

இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை; மனிதாபிமானமற்றவை என்று பரவலாக விமர்சிக்கின்றனர். குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை இஸ்லாம் வழங்குவதே இதற்குக் காரணம். ஆனால் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் தாம் மனித குலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதை நடுநிலையோடு சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்வார்கள்.

குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டு இருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும். கொலைக் குற்றம் செய்த ஒருவனுக்கு மரண தண்டனை வழங்குவதால், கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பக் கிடைத்து விடப் போவதில்லை; கற்பழித்தவனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்ப வரப்போவதில்லை; பொருளாதாரம் சம்பந்தப்பட்ட, திருட்டு போன்ற சில குற்றங்களில் வேண்டுமானால் பறிபோனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப்பட்டு விடுவதால் அவனால் பாதிக்கப்பட்டவனுக்கு பயனேதும் கிடையாது.

இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை இதிலிருந்து விளங்கலாம். அப்படியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியதன் காரணம் என்ன?

1. குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.

2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.

3. குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். அவன் மன நிறைவு அடைய வேண்டும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட இந்த மூன்றைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.

குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலும், குற்றம் செய்ய நினைப்பவர்கள் அதன்பால் நெருங்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் உலகமெங்கும் சிறைச்சாலைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு எந்தவிதமான தண்டனையும் வழங்க கூடாது என்று உலகில் எந்த அரசாங்கமும் கூறுவதில்லை.

ஆனால் உலக நாடுகள் பலவற்றில் இயற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களால் குற்றங்களை குறைக்க இயலவில்லை. அது மட்டுமின்றி குற்றவாளிகளுக்கு சிறைச் சாலைகளில் செய்து தரப்படுகின்ற வசதிகள் குற்றங்களை அதிகப்படுத்தவே வழிவகுக்கின்றன.

குற்றங்களை தடுத்து நிறுத்தவேண்டிய சட்டங்களே குற்றம் செய்யத் தூண்டினால் என்னவாகும்?

திருட்டு, கற்பழிப்பு, கொலை, கொள்ளை, இன்னபிற குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன?சில மாதங்களோ, சில வருடங்களோ சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. பெரும்பாலான நாடுகளில் தண்டனையின் அளவு இதுதான்.

சிறை தண்டனை என்பது என்ன? வெளியே வர முடியாது என்ற ஒரு அம்சத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் எத்தனையோ பரம ஏழைகளின் வாழ்வை விட சிறை வாழ்வு மேலானதாக உள்ளது.


நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் ஏழைகளுக்கு அன்றாடம் கால் வயிற்றுக் கஞ்சிக்கே வழியில்லை. அநியாயமாகவும், அயோக்கியத்தனமாகவும் நடந்து கொண்ட குற்றவாளிகளுக்கு மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் தரப்படுகின்றது. உயர்தரமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குச் செய்து தரப்படுகின்றன. அவர்களின் பொழுதைப் போக்குவதற்காக (?) சினிமா போன்ற வசதிகளும் சிறைக்குள்ளேயே செய்து தரப்படுகின்றன.

இந்த குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளை எதுவும் செய்து விடாத அளவுக்குப் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் வேதனையான அம்சம் என்னவென்றால், எந்த மக்களிடமிருந்து ஒருவன் திருடுகிறானோ, எந்த மக்களை கொலை செய்கிறானோ, எந்த பெண்களை கற்பழிக்கிறானோ அந்த மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் இந்த அயோக்கியர்களுக்கு இவ்வளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

பெயரளவிலான இந்த தண்டனையால் ஒரு பயனும் ஏற்படாது; ஏற்படவில்லை.

  • 50 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது!
  • 20 முறை சைக்கிள் திருடியவர் மீண்டும் கைது!

என்றெல்லாம் அன்றாடம் செய்தித்தாள்களில் செய்திகள் வருகின்றன. 50 தடவை வழங்கப்பட்ட தண்டனைகள் அவனுக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. அதை ஒரு தண்டனையாகவே அவன் கருதவில்லை.

சிறைச்சாலைகளில் கிடைக்கும் வசதிகள் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொண்டதால், நேர்மையாக வாழ்ந்து கஞ்சிக்கு கஷ்டப்படுவானேன்? ஏதேனும் குற்றம் புரிந்தால் சிறைச்சாலையில் மூன்று வேளை உணவு கிடைக்குமே என்று எண்ணி அவர்களும் குற்றங்களில் ஈடுபட தொடங்குகின்றனர்.

மேலும் குற்றவாளிகள் ஒருவரை ஒருவர் சிறைச்சாலைகளில் சந்தித்து கொள்வதற்கும், கூட்டாக திட்டமிடவும் வாய்ப்பு கிடைப்பதால் மேலும் பெரிய அளவில் குற்றம் செய்வதற்கு புதுப்புது யுக்திகளை வகுக்கின்றனர். சிறைச்சாலைகள் குற்றவாளிகளின் பல்கலைக்கழகங்கள் என்பதை அனைவரும் அறிவர்.

ஆண்டுதோறும் குற்றவாளிகள் பெருகி வருகின்றார்கள்; குற்றங்கள் பெருகுகின்றன; குற்றவாளிகளை அதிகப்படுத்துவதற்காக மக்களின் வரிப்பணம் பாழாக்கப்படுகின்றது. மனிதாபிமான (?) சட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் இவை.

இதன் விளைவாக குற்றங்கள் சர்வசாதாரணமாக பெருகி விட்டதை கடந்த ஆகஸ்ட் 2019 நாடாளுமன்றத்தில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது நினைவுபடுத்தலாம்.

இந்தியாவில் ஆண்டுதோறும் 5 கோடி வழக்குகள் பதிவாகின்றன. அதில் 2 கோடி வழக்குகள் விசாரிக்கப்பட்டும், 3 கோடி வழக்குகள் நிலுவையிலும் இருக்கின்றன என்று சொல்லப்படும் அளவிற்கு நாடு நாசமடைந்து கிடக்கின்றது.

பாதிக்கப்பட்டவன் இந்த தண்டனைகளால் மனநிறைவு அடைவானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

திருட்டுக் கொடுத்தவன் இடம் போய், திருடியவனை என்ன செய்யலாம் என்று கேட்டால் ஆறுமாதம் சோறு போடலாம் என கூற மாட்டான். கொல்லப்பட்டவனின் மகனிடம் போய், கொலையாளியை என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால் 14 வருடம் அரசாங்க சிலவில் அவனை பராமரிக்க வேண்டும் என்று கூறுவானா? தலையை வெட்ட வேண்டும் என்பானா?

கற்பழிக்கப்பட்டவள், அதனால் தனது எதிர்காலமே இருண்டு விட்ட நிலையில் கற்பழித்தவனுக்கு எத்தகைய தண்டனை கொடுத்தால் மனம் நிறைவடைவாள்? என்றெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை சீர்தூக்கிப் பார்த்து, தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் பாதிக்கப் படாத இடத்தில் அமர்ந்துகொண்டு சட்டங்கள் இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.

ஆனால் நபிகளாரோ பாதிக்கப்பட்டவனின் நிலையைத்தான் கவனத்தில் கொண்டார்கள். நபிகளார் நடைமுறைப்படுத்திய குற்றவியல் சட்டங்களை பார்ப்போம்.

தேசத் துரோகத்திற்கான தண்டனை

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உக்ல் குலத்தைச் சேர்ந்த 8 பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக உறுதிமொழி அளித்து மதினாவில் தங்கி இருந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்பவெப்ப நிலை ஒத்துக்கொள்ளாமல் அவர்களது உடல் நோய் கண்டது. எனவே அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைப்பற்றி முறையிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நம் ஒட்டக மேய்ப்பர் உடன் ஒட்டகங்களிருக்கும் இடத்திற்குச் சென்று, அவற்றின் பாலையும் சிறுநீரையும் பயன்படுத்தி நிவாரணம் பெற்றுக் கொள்கிறீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "சரி" என்று கூறி, புறப்பட்டுச் சென்று ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் அருந்தி நிவாரணம் பெற்றனர். பிறகு அந்த ஒட்டகம் மேய்ப்பரை கொலை செய்துவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். இவ்விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, உடனே அவர்களைப் பின்தொடர்ந்து ஆட்களை அனுப்பினார்கள். அவர்கள் பிடிக்கப்பட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டனர். அப்போது அவர்களின் கை கால்களை துண்டித்து அவர்களின் கண்களில் சூடிடுமாறு நபியவர்கள் உத்தரவிட்டார்கள். பிறகு அவர்கள் சாகும்வரை ஹர்ரா என்ற பகுதியில் வெயிலில் போடப்பட்டனர்.

நூல்: முஸ்லிம் 3448

கொலை மற்றும் வழிப்பறிக்கான தண்டனை

அனஸ் பின் மாலிக் அவர்கள் கூறியதாவது:
யூதன் ஒருவன் ஒரு சிறுமியை, அவளது வெள்ளி நகைக்காக கல் எறிந்து கொன்று விட்டான். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுமி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டாள். அவளிடம் நபி (ஸல்) அவர்கள், "இந்த மனிதரால் உன்னை தாக்கினார்?" என்று கேட்டார்கள். அவள் "இல்லை" என்று தலையால் சைகை செய்தாள். மீண்டும் அவர்கள் "இன்ன மனிதரா உன்னை தாக்கினார்?" என்று கேட்டார்கள். அவள் அப்போதும் "இல்லை" என்று தலையாட்டினாள். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவளிடம் "இன்ன மனிதரா உன்னை தாக்கினார்?" என்று (ஒரு மனிதரது பெயரை குறிப்பிட்டு) கேட்டபோது அவள் "ஆம்" என்று தலையால் சைகை செய்தாள். ஆகவே அந்த யூதனை அழைத்து (வந்து விசாரித்து, அவன் ஒப்புக் கொண்டதும்) இரு கற்களுக்கிடையே வைத்து அவ(னது தலையி)னை நசுக்கி கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் 3453

கொலை செய்தவனுக்கு நபிகளாரை போல் நம் அரசாங்கம் மரண தண்டனை விதித்தால் கொலை செய்ய எவருமே துணியமாட்டார்கள். பல்லை உடைத்தால் தனது பல்லும் அரசாங்கத்தினால் உடைக்கப்படும் என்பதை அறிந்தால் எவருமே அடுத்தவனின் பல்லை உடைக்க மாட்டார்கள். சட்டங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது.

பாதிக்கப்பட்டவன் மன நிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படா விட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளியாகும் நிலைமையும் உருவாகும்.

திருட்டுக்க்கான தண்டனை

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மக்ஸூமி" குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டாள் என்ற செய்தி குறைஷியருக்கு கவலையளித்தது. அப்போது அவர்கள், "அந்தப் பெண் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பேசி, தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க} சொல்வது யார்?" என்று கேட்டுக்கொண்டார்கள். பிறகு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செல்லப்பிள்ளையான உசாமா பின் ஸைத் தவிர வேறு யார் துணிந்து பேச முடியும்?" என்று சொன்னார்கள். அவ்வாறே உஸாமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் விதித்த தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல் விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்? என்று கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று பின் வருமாறு உரையாற்றினார்கள்:

மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனு இஸ்ராயில்) மக்கள் அழிந்து போனதற்குக் காரணமே (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடி விட்டால், அவர்கள் அவரை (தண்டிக்காமல்) விட்டுவிடுவார்கள். அவர்களில் உள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்கள்மீது தண்டனையை நடைமுறை படுத்துவார்கள். "அல்லாஹ்வின் மீது ஆணையாக (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும், நான் அவரது கையை துண்டித்தே இருப்பேன்.

நூல்: முஸ்லிம் 3485

விபச்சாரத்திற்கான தண்டனை

அல்லாவின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்:
(விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை சட்டத்தை) என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வீர்; என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வீர். அல்லாஹ் (வாக்களித்து இருந்ததைப் போன்று) பெண்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தி விட்டான். மணமாகாத பெண்ணுடன் மணமாகாத ஆண் விபச்சாரம் செய்து விட்டால் நூறு சாட்டை அடிகள் வழங்கி, ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தப்படவேண்டும். மணமான பெண்ணுடன் மணமான ஆண் விபச்சாரம் செய்து விட்டால், 100 சாட்டையடிகள் வழங்கி கல்லெறி தண்டனை வழங்கப்பட வேண்டும். இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 3489

இது போன்ற தண்டனைகளை நிறைவேற்றும் போது மக்களுக்குத் தெரியாமல் ரகசியமாக நிறைவேற்றுவதை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில் தண்டனை வழங்குவதற்கான நோக்கம் அதைப் பார்த்து மற்றவர்கள் திருந்த வேண்டும் என்பதுதான். எனவே மக்கள் முன்னிலையில் இது போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால் தான் தண்டனை வழங்கப்படுவதன் நோக்கத்தை எட்ட முடியும் என்பதையும் நபிகளார் கவனித்தே தண்டனைகளை வழங்கியுள்ளார்கள்.

மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மது அருந்திய ஒரு மனிதர் நபி (ஸல்) கொண்டுவரப்பட்ட போது, அவரை இரு பேரீச்ச மட்டைகளால் ஏறக்குறைய 40 முறை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் 3512

உலகில் எத்தனையோ அரசுகள் வந்து போய்விட்டன. மக்களின் உயிருக்கும், உடமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தில் அத்தனை அரசுகளுமே தோல்வியைத் தான் தழுவி இருக்கின்றன. எப்போது என்ன நேருமோ? என்று அஞ்சியே மக்கள் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது. இந்த நிலை மாற வேண்டுமானால் குற்றவாளிகளின் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடம் அளிக்கக்கூடாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் வழிப்பறிகள் நிறைந்த மதினா நகரை 10 ஆண்டுகளில் பாதுகாப்பு மிக்க நகராக மாற்றிய நபிகளாரின் ஆட்சி முறை வரவேண்டும்.

இஸ்லாம் சொல்கின்றது என்ற குறுகிய நோக்கில் இஸ்லாமியர் தண்டனைகளைப் புறக்கணிக்காமல் அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கருத்தில் கொண்டு அதை அமல்படுத்த முன்வர வேண்டும்.

குற்றவாளிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் தண்டனைகளை மாற்றி அவர்களுக்கு எதிராகக் கடும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தினால் உலகம் அமைதிப் பூங்காவாக திகழும். அதைத்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஆட்சிக்காலத்தில் செயல்படுத்திக் காட்டினார்கள்.

ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
ஏகத்துவம் மாத இதழ் - அக்டோபர் 2019