செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

உறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்

உறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்

ஐங்காலத் தொழுகையை நிறைவேற்றி, ஜகாத் வழங்கி, நோன்பு நோற்று, ஹஜ்ஜையும் முடித்து விட்டால் நாம் சுவனம் சென்று விடலாம் என்று மக்கள் பொதுவாகக் கருதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சுவனம் செல்வதற்கு மேற்கண்ட காரியங்கள், கடமைகள் மட்டுமல்லாமல் வேறு பல காரியங்களும் கடமைகளும் இருக்கின்றன. அவற்றை செய்யத் தவறி விட்டால் ஒருவர் சுவனம் செல்ல முடியாது என்பதை மக்கள் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.

இப்படிப்பட்ட காரியங்கள் நிறைய உண்டு. அவற்றில் மிக முக்கியமான ஒன்று உறவினர்களை ஆதரிப்பதாகும். கடமையான வணக்கங்களில் பிடிப்பும் பேணுதலும் காட்டுகின்ற மக்கள் இந்த விஷயத்தில் அதே பிடிப்பையும் பேணுதலையும் காட்டத் தவறி விடுகின்றனர்.

உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ர­லி), நூல்: புகாரி 5984

எனவே ஒருவர் சுவனம் செல்ல வேண்டுமாயின் அவர் தம்முடைய உறவினர்களை ஆதரித்தே ஆக வேண்டும். இல்லையேல் அவருக்கும் நரகம் தான் என்பதை இந்த ஹதீஸ் நமக்குத் தெரிவிக்கின்றது.

ஒருவர் பல நல்ல அமல்களைச் செய்து விட்டு உறவைத் துண்டித்து விட்டு மறுமைக்கு வருவாராயின் அவர் சுவனம் செல்ல முடியாது என்பதால், உறவை ஆதரிப்பதைப் பற்றிய எல்லா விபரங்களையும் அறிந்து கொள்வது நம்மீது கடமையாகும். அவற்றை இப்போது பார்ப்போம்.


உறவினரின் உறவே அல்லாஹ்வின் உறவு

நாம் இரவில் எழுந்து தொழுவது முதல் அனைத்து விதமான வணக்கங்களையும் செய்வதற்கான காரணமே அல்லாஹ்வின் உறவைப் பெறுவதற்காகத் தான். அதன் மூலம் அவனது அன்பை, உதவியைப் பெறுவதற்காகத் தான். நாம் உறவினரின் உறவைத் துண்டித்து விடும் போது அல்லாஹ்வின் அருள் அறுந்து போய் விடுகின்றது. அவனது உதவி துண்டிக்கப்பட்டு விடுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்த போது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றியது. அப்போது அல்லாஹ், ''என்ன?'' என்று கேட்டான். அதற்கு உறவு, ''உறவுகளைத் துண்டிப்பதி­ருந்து உன்னிடம் பாதுகாப்பு கோரி நிற்கின்றேன்'' என்று கூறியது. ''உன்னை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும் உன்னைத் துண்டித்து விடுகின்றவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?'' என்று கேட்டான். அதற்கு உறவு, ''ஆம், என் இறைவா'' என்று கூறியது. அல்லாஹ், ''இது உனக்காக நடக்கும்'' என்று கூறினான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா?'' என்ற (47:22) வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: புகாரி 5987

உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். ஆகவே அதனுடன் யார் ஒட்டி வாழ்கின்றாரோ அவருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை யார் முறித்துக் கொள்கின்றாரோ அவரை நானும் முறித்துக் கொள்வேன் என்று (அல்லாஹ் கூறியதாக) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி­) அவர்கள் இதை அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரி 5989)


உலகத்திலேயே கிடைக்கும் பலன்

பொதுவாக முஃமின்கள் செய்யக் கூடிய அமல்களுக்குரிய பலன்களை மறுமையில் தான் அல்லாஹ் வழங்குவான். அதனால் தான் என்ன கடமையைச் செய்தாலும் வணக்கம் புரிந்தாலும் மறுமையில் கூ­லி கிடைக்கும் என்று அல்குர்ஆனும், ஹதீசும் கூறுகின்றன. இம்மையில் கூ­லி கிடைக்கும் என்று கூறுவதில்லை.

அப்படி இம்மையில் கூலி­ கிடைக்கும் என்று மார்க்கம் சொல்கின்ற ஒரு நன்மையான காரியம் உண்டெனில் அது உறவினர்களை ஆதரிப்பதாகத் தான் இருக்க முடியும்.

இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும். அறிவிப்பவர்: அனஸ் பின் மா­க் (ர­லி), நூல்: புகாரி 2067

தங்களுடைய வாழ்வாதாரத்தில் பரக்கத் - வளம் வேண்டும் என்று வரம் கேட்டுக் கொண்டு, ஆயிரக்கணக்கான அடியார்கள் காத்துக் கிடக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தியாக ஓர் அருட்கொடையாக நபி (ஸல்) அவர்களின் இந்த மணிமொழி அமைந்திருக்கின்றது. இதற்கு நிதர்சனமான எடுத்துக் காட்டை லி தகுந்த சான்றை பின்வரும் ஹதீஸில் பார்க்கின்றோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''(முற்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையிலுள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகையின் வாசலை அடைத்தது. அப்போது அவர்கள், ''நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்றனர்.

அவர்களில் ஒருவர், ''இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டுப் பிறகு வந்து பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பார்கள். ஓர் இரவு நான் தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தைகள் பசியால் என் காலடியில் அழுதனர். விடியும் வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து!'' என்று கூறினார்.

மற்றொருவர், ''இறைவா! எனது தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதை விட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும் வரை தன்னை அடையக் கூடாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளது இரு கால்களுக்கிடையில் நான் அமர்ந்த போது, ''அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே!'' என்று அவள் கூறினாள். உடனே நான் அவளை விட்டு எழுந்து விட்டேன். இதை உனது திருப்தியை நாடி செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தை நீக்கு!'' என்று கூறினார். அல்லாஹ் அவர்களை விட்டும் மூன்றில் இரண்டு பங்கு நீக்கினான்.

மற்றொருவர், ''இறைவா! நான் மூன்று ஸாஉ (ஒருவகை அளவைப் பாத்திரம்) கேழ் வரகு கூ­க்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூ­லியை நான் கொடுத்த போது அதை அவர் வாங்க மறுத்து விட்டார். அந்தக் கேழ் வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, ''அல்லாஹ்வின் அடிமையே! எனது கூலி­யைக் கொடு!'' என்று கூறினார். ''இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை. எடுத்துச் செல்லும்'' என்று கூறினேன். அதற்கவர், ''என்னைக் கே­லி செய்கின்றீரா?'' என்று கேட்டார். ''நான் உம்மைக் கே­லி செய்யவில்லை. இவை உமக்குரியவை தான்'' எனக் கூறினேன். இறைவா! இதை நான் உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களை விட்டு இந்தச் சிரமத்தை நீக்கு'' என்று கூறினார். சிரமம் முழுமையாக விலகியது. அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­லி), நூல்: புகாரி 2215

உறவினர்கள் என்றால் அதில் முத­லிடம் வகிப்பவர்கள் பெற்றோர்கள். பிறகு அவர்களது சகோதர, சகோதரியர் என்று உறவின் கிளைகள் விரிந்து செல்கின்றன. இந்த ஹதீஸில் ஒரு மகன் தனது தலையாய உறவினர்களுக்கு அளித்த உதவி தக்க சமயத்தில் வந்து அவரது உயிரைக் காத்து நிற்பதைப் பார்க்கின்றோம். இதன் மூலம் அவரது ஆயுள் நீட்டிக்கப்பட்டிருப்பதையும் காண்கிறோம்.

உறவினர்களை ஆதரிக்கும் போது இம்மையில் ஒருவருக்கு உரிய பலன் கிடைப்பது போலவே மறுமையில் சுவனம் அவருக்குக் கிடைக்கின்ற உயரிய கூ­யாகி விடுகின்றது. ''உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவது (புகாரி 5984) உறவை ஆதரிப்பது சொர்க்த்தில் கொண்டு போய் சேர்க்கும் உயரிய அமல் என்பதை நமக்கு விளக்குகின்றது.

அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இதை ஈமானுடன் தொடர்பு படுத்திச் சொல்கின்றார்கள்.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப் படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்த பந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப் பேசட்டும், அல்லது வாய் மூடி இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: புகாரி 6138


வ­ந்து போய் உறவு பாராட்டுதல்

ஒருவருக்கு சுவனத்தையும் நரகத்தையும் தீர்மானிக்கும் கருவியாக இந்த உறவு அமைந்திருப்பதால் நமது உறவினரில் யாரேனும் நம்மைப் பகைத்துக் கொண்டால் அவர்களிடம் வ­யச் சென்று உறவைத் தொடர வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அவன் நம்மிடம் உறவு பாராட்டட்டும். நாம் அவனிடம் உறவு பாராட்டுவோம் என்று பண்டமாற்று முறையைக் கைவிடச் சொல்கின்றார்கள். அப்படிச் செய்வது உறவை ஆதரித்ததாக ஆகாது என்றும் கூறுகின்றார்கள்.

பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணியவர் அல்ல. மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ர­லி), நூல்: புகாரி 5991


மிஞ்சினாலும் கெஞ்சிக் கொள்க!

உறவை ஆதரிக்கச் செல்கையில் உறவினர் மிஞ்சினாலும் நாம் கெஞ்ச வேண்டும். அவர்கள் துரோகமிழைத்திருந்தாலும் நமது உறவைத் தொடர வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

''அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் உள்ளனர். அவர்களிடம் நான் உறவு பாராட்டுகின்றேன். அவர்களோ என்னிடம் பகைமை பாராட்டுகின்றனர். நான் உதவி செய்கின்றேன். அவர்கள் எனக்கு ஊறு விளைவிக்கின்றார்கள். அவர்களிடம் நான் பொறுமையை மேற்கொள்கின்றேன். அவர்கள் என்னிடம் அறிவீனத்தையே கடைப்பிடிக்கின்றார்கள்'' என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீ சொல்வது போன்ற நிலையில் இருந்தால் நீ அவர்களை சூடான சாம்பலைத் திண்ணச் செய்தவன் போலாவாய். (அதாவது அவர்கள் தங்கள் மீது மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கின்றனர்) இதே நிலையை நீ தொடர்கின்ற வரை அவர்களின் தீமையை விட்டு காப்பதற்காக ஓர் உதவியாளர் (வானவர்) உன்னுடன் இருந்து கொண்டே இருப்பார்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: முஸ்­லிம் 4640, அஹ்மத் 7651

இப்போது கண்ட இந்த ஹதீஸ்களெல்லாம் உறவினர்களை ஆதரிப்பதில், அவர்கள் மிஞ்சினாலும் நாம் கர்வம் காட்டக் கூடாது. நாம் கொஞ்சம் அல்ல, மிக அதிகமாகவே கீழிறங்கித் தான் போக வேண்டும் என்று வ­யுறுத்துகின்றன.


உறவைப் புறக்கணித்து ஊருக்கு விருந்து

மார்க்கம் இந்த அளவுக்கு உறவைப் பேணச் சொல்கின்ற விஷயத்தில் மக்கள் அலட்சியமாகவே உள்ளனர். உறவினரில் ஒருவர் வட்டியில் மூழ்கிக் கொண்டு சொந்த வீட்டையே விற்பார். அவ்வாறு வீட்டை விற்று வீதிக்கு வரவிருக்கும் அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்து அவரைக் காக்க முன்வர மாட்டார். ஆனால் அதே சமயம் தன் வீட்டில் நடத்தப்படும் திருமணத்திற்காக ஊரை அழைத்து விருந்து படைத்து, பல இலட்சங்களை அள்ளி வீசுவார்.

விருந்து என்பது திருமணத்தின் போது கட்டாயமாக வைத்துத் தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமான ஒன்றல்ல. ஆனால் வட்டியில் வீழ்ந்த தன் உறவினரை மீட்பது, இந்த உலகத்தில் பொருளாதாரச் சுரண்ட­­ருந்து காப்பாற்றுவது மட்டுமல்லாது மறு உலக நரக வேதனையி­ருந்தும் காப்பாற்றிய நன்மை கிடைக்கும். இது கட்டாய கடமையாகும். இதை யாரும் செய்ய முன் வருவதில்லை.

இங்கு இன்னொரு வேதனைக்குரிய விஷயம் என்னவெனில், வட்டிக்கு வாங்கி வகையற்றுப் போய் கையறு நிலையில் நிற்கும் தன் உறவினருக்குக் கடனாகவோ அல்லது தானமாகவோ பணம் கொடுத்து உதவ மறுக்கும் இவர், கையில் பணமில்லை என்று காரணம் கூறும் இவர், அந்த உறவினரின் வீட்டை வாங்குவதற்கு வரிந்து கட்டிக் கொண்டு முன் வருவது தான்.

நமது சமுதாயச் சூழ­ல் உறவை ஆதரிக்கும் பண்பு இன்னும் ஏற்படவில்லை. அதிலும் குறிப்பாக சமுதாய மறுமலர்ச்சிக்குப் பாடுபடுகின்ற ஏகத்துவவாதிகளிடம் கூட இன்னும் இந்தப் பண்பு வரவில்லை. இந்தச் சீர்திருத்தவாதிகளிடம் இந்த முன்மாதிரியை நாம் இன்னும் காண முடியவில்லை. பொருளாதார அடிப்படையில இலட்சக்கணக்கில் உதவும் மனப்பாங்கு இன்னும் வரவில்லை.

அன்ஸாரிகளில் அபூதல்ஹா (ர­லி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரது செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது (ந்நபவி) க்கு எதிரில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம். ''நீங்கள் விரும்புவதை (நல்வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள்'' எனும் (3:92) வசனம் இறங்கியதும், அபூதல்ஹா (ர­லி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹு தஆலா 'நீங்கள் விரும்புவதை தர்மம் செய்யாத வரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்' என்று கூறுகின்றான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக ஆகட்டும். நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (மறுமையின்) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகின்றேன். எனவே அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள், அல்லாஹ்வின் தூதரே!'' எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், ''ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியுற்று விட்டேன். நீர் அதை உமது நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் உசிதமாகக் கருதுகின்றேன்'' என்று கூறினார்கள். அதற்கு அபூதல்ஹா (ரலி), ''அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கின்றேன்'' என்று கூறி, அத்தோட்டத்தை தமது நெருங்கிய உறவினருக்கும் தமது தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளுக்கும் பங்கிட்டு விட்டார். அறிவிப்பவர்: அனஸ் பின் மா­லிக் (ர­லி) நூல்: புகாரி 1461, 2318, 2769, 4555, 5611

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்களே அதிர்ச்சியடையும் அளவுக்கு தல்ஹா (ரலி) தானம் செய்ய முன் வருகின்றார்கள். இந்த நிலையை ஏகத்துவவாதிகள் என்றைக்குச் செய்ய முன்வருகின்றார்களோ அன்று தான் சமுதாய மறுமலர்ச்சியின் பயணப் பாதையில் அடியெடுத்து வைத்ததாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இல்லையேல் அந்தத் திசை நோக்கி திரும்பிக் கூடப் பார்க்கவில்லை என்பதே உண்மைப் பொருளாகி விடும்.


உறவைப் பேணுவதில் ஒரு புதிய பார்வை

உறவைப் பேணுதல் என்ற பாதையில் எட்ட வேண்டிய இலக்கு உறவினருக்காக உறுப்புகளை தானம் செய்வதாகும். அதுதான் உண்மையான உறவு பாராட்டலாகும். அது காலத்தின் கட்டாயமாகும். இத்தகைய கட்டாயத்தை அறிவியல் உலகம் நம்மீது திணித்திருக்கின்றது. நாமோ உணவு, உடை போன்ற பொருளாதார ரீதியிலான உதவிகள் மூலம் உறவைப் பேணுகின்ற விஷயத்தில் அரிச்சுவடி பாடத்தைக் கூட முடிக்காமல் அல்ல, தொடாமல் இருக்கின்றோம். எனவே நாம் இந்த அரிச்சுவடியை முடித்து உறுப்பு தானம் என்ற இலக்கை நோக்கிப் பயணம் செய்தாக வேண்டும். உறவினர்களுக்குப் பொருளாதார ரீதியிலான உதவிகள் என்ற வட்டத்தையும் திட்டத்தையும் தாண்டி உறுப்பு தானம் என்ற ரீதியில் நம்முடைய சிந்தனையைச் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திலும் இருக்கின்றோம்.


செயலற்றுப் போன சிறுநீரகங்கள்

அண்மையில் நெல்லையில் ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு சோதனை நம்மை இந்தப் புதிய பார்வைக்கு இழுத்துச் செல்கின்றது. சுலைமான் என்ற ஒரு முஸ்­லிம் இலட்சக்கணக்கில் உள்ள கட்டடங்களுக்கு உரிமையாளராக இருக்கின்றார். அவருடைய இரு சிறுநீரகங்களும் தம் செயல்பாட்டை இழந்து விடுகின்றன. இதற்காக ஏற்பட்ட மருத்துவச் செலவுகளில் இவருடைய கட்டடங்கள் வட்டியில் மூழ்கி விடுகின்றன. மூன்று குழந்தைகளின் பெற்றோர்களான இந்தத் தம்பதியர் போதிய பொருளாதாரம் இல்லாமல் பெரும் தவிப்புக்குள்ளாயினர்.

மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மானில் வாரந்தோறும் நடைபெறும் மருத்துவ முகாமுக்கு வருகை தரும் மருத்துவர் ஒருவர் இந்த சிறுநீரகம் பழுதடைந்த நோயாளிக்கு உதவி செய்யும்படி பரிந்துரை செய்தார். இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தொடர்பு கொண்டு அவருக்கு உதவி செய்யும் ஆயத்தப் பணிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சிறுநீரகம் செயல்பாடின்மை காரணமாக சிறுநீர் வெளியேறாமல் அவர் உட­ல் நுரையீர­ல் புகுந்து கொண்டு கோளாறு செய்யத் துவங்குகின்றது. உடனே ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்படுகின்றார்.

சுவாசப் பையி­ருந்து மூச்சு வெளிவர முடியாமல் அவரை அவஸ்தையின் அடி பாதாளத்திற்குத் தள்ளுகின்றது. உப்புச் சத்து இரத்தத்தில் ஏறிப் போய் அவரின் கை, கால், உறுப்புகள் உப்பிப் போய் விட்டன. அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்த அவரது உடல் நரம்புகளில் சதையைக் கிழித்துக் கொண்டு ஊடுறுவி நிற்கும் ஊசிகள். நாசிக்குள் செலுத்தப்படும் பிராண வாயு! இத்தகைய பரிதாப நிலையில் மருத்துவமனையில் கண்ட நாம் அவரது மருத்துவச் செலவுக்கான தற்கா­க உதவிகளைச் செய்து விட்டு, மீண்டும் எஸ்.எம். பாக்கர் அவர்களைத் தொடர்பு கொண்டோம். அவரது மனைவியின் வேண்டுகோளின்படி அவரை சென்னைக்கு அனுப்பி வைக்கலாமா? என்று கேட்ட போது, இந்த நிலையில் அவர் சென்னைக்குப் பயணம் மேற்கொண்டால் வரும் வழியிலேயே மூர்ச்சையாகி விடுவார். அதனால் உடனடியாக டயாலிஸிஸ் செய்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார்.

டயா­லிஸிஸ் விபரங்களைக் கேட்ட போது, உபகரணங்கள், மருந்து வகை, மருத்துவமனை கட்டணம் எல்லாம் சேர்த்து பத்தாயிரத்தைத் தாண்டும் என்று தெரிந்து கொண்டு, இறைவன் மீது நம்பிக்கை வைத்து இந்தச் சேவையில் இறங்கினோம். மூச்சு விடத் திணறும் அவருக்கு முதல் கட்டமாக தற்கா­க நிவாரணம் வழங்க எப்பாடு பட்டாயிலும் முயற்சி செய்வோம் என்று காரியம் ஆற்றத் துவங்கினோம். ஏற்கனவே இருந்த மருத்துவமனையி­ருந்து அவரை டிஸ்சார்ஜ் செய்து டயா­லிஸிஸ் வசதியுள்ள மற்றொரு மருத்துவமனையில் சேர்த்து டயா­ஸிஸ் செய்தோம். உறுப்புகளில் உள்ள வீக்கம் குறைந்து சுவாசச் சிக்கல் தீர்ந்தது. இப்படி ஒரு தற்கா­க நிவாரணத்தை அவர் அடைந்தார். இதே தற்கா­க நிவாரணத்தைத் தொடர்வதற்கு அடிக்கடி டயா­லிஸிஸ் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் ஆயிரம் ரூபாய் செலவாகும். இது தற்கா­க தீர்வு தான்.


நிரந்தர நிவாரணம் சிறுநீரக தானமே

இதற்கு நிரந்தர நிவாரணம் உறவினர் ஒருவர் சிறுநீரக (கிட்னி) தானம் செய்ய வேண்டும். உறவினர் என்று சொல்வதற்குக் காரணம், நெருங்கிய உறவினரின் சிறுநீரகம் மிகச் சரியாக ஒத்துப் போவதுடன் அல்லாஹ் நாடிய காலம் வரை ஒத்துழைக்கவும் செய்கின்றது. மற்றவர்களில் சிறுநீரகத்தைப் பொருத்தினால் அந்த அளவுக்குப் பலனளிப்பதில்லை.

அந்தச் சகோதரரின் உறவினர்கள் யாரும் அவருக்காக சிறுநீரக தானம் செய்பவர்கள் இருக்கின்றார்களா? என்று அவரது மனைவியிடம் விசாரித்தோம். அவருடன் பிறந்தவர்கள் எல்லாம் பெண் மக்கள் தான். அந்தச் சகோதரிகள், சிறுநீரக தானம் அளிக்க முன்வரும் நிலையில் இல்லை. அதற்கு அவர்களது கணவன்மார்களும் அனுமதி வழங்க மாட்டார்கள் என்று கூறினார். நீங்கள் சிறுநீரக தானம் வழங்கத் தயாரா? என்று அவரது மனைவியிடம் கேட்ட போது, நான் தயார். ஆனால் என்னுடைய சிறுநீரகம் அவருக்குப் பொருந்தாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள் என்று சொன்னார்.

இங்கு தான் உறவினரை ஆதரித்தல் என்று மார்க்கம் சொல்லும் இந்தக் கட்டளையை புதிய பரிமாணத்தில் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். உறவினரை ஆதரித்தல் என்பது வெறும் அன்ன தானம், பொருள் தானம் என்று குறுகிய வட்டத்திற்குள் நிற்பதில்லை. அதையெல்லாம் தாண்டி சிறுநீரகம், கண் போன்று உறுப்புகள் மற்றும் உதிர தானத்தையும் உள்ளடக்கும் விரிந்த எல்லை கொண்டதாகும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறவினரை ஆதரித்தால் வாழ்வாதாரம், வாழ்நாள் நீட்டிப்பு போன்ற வார்த்தைப் பிரயோகங்களை இந்த ஹதீஸில் பயன்படுத்தியுள்ளார்கள். ஆம்! உன்னுடைய ஒரு சிறுநீரகத்தைத் தானம் செய்வதால் உள் வாழ்வாதாரம் சிதறுண்டு போகாது. உன் வாழ்நாளும் சிறுத்து சுருங்கி விடாது என்ற உத்தரவாதத்தை மிகப் பொருத்தமாகவே வழங்குகின்றார்கள்.

இதைப் பின்பற்றி, இப்படி உறுப்புகளை உறவினர்கள் தானம் வழங்குவதால் ஏற்படும் நல்விளைவுகளையும், வழங்காததால் ஏற்படும் தீய விளைவுகளையும் பார்ப்போம்.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டவரின் உயிர் காக்கப்பட்டு அவரது உட­ல் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனைகள், வியாதிகளி­ருந்து அவருக்குப் பாதுகாப்பு கிடைக்கின்றது. அதனால் அவர் மறுவாழ்வு பெறுகின்றார்.

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32)

என்ற வசனத்தின்படி சிறுநீரக தானம் செய்தவர் இதன் மூலம் மனித குலத்தை வாழ வைத்த நன்மையைப் பெறுகின்றார்.

யார் ஒரு முஃமினை விட்டு உலக சோதனைகளில் ஏதேனும் ஒரு சோதனையை அகற்றி விடுகின்றாரோ அவருக்கு, கியாமத் நாளின் சோதனைகளி­ருந்து ஏதேனும் ஒரு சோதனையை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றி விடுகின்றான். யார் கஷ்டப்படுவோரின் கஷ்டத்தை எளிதாக்குகின்றாரோ அவருக்கு அல்லாஹ் இம்மை மறுமையின் கஷ்டத்தை எளிதாக்கி விடுகின்றான். ஓர் அடியான் தனது சகோதரனுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வரை அல்லாஹ் அவனுக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றான். (ஹதீஸ் சுருக்கம்) அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: முஸ்­லிம் 4867

என்ற இந்த ஹதீஸின் படி இம்மை, மறுமையின் நன்மைகள் கிடைக்கின்றன. உறவினர்களை ஆதரிப்பது பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள அடிப்படையிலும் நன்மைகள் கிடைக்கின்றன.

சிறுநீரக தானம் என்பது கண் தானத்தைப் போன்றதல்ல. உறவினரின் சிறுநீரகம் தான் நூறு சதவிகிதம் பொருந்துவதால் அவ்வாறு பொருத்தப்படும் சிறுநீரகம் நன்கு செயல்படுகின்றது. இதன் மூலம் சிறுநீரகம் பொருத்தப்பட்டவர் ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறுகின்றார். இதற்கு நேர் மாற்றமாக உறவினர் அல்லாத மற்றவரின் சிறுநீரகம் பொருத்தப்படும் போது, சரியான முறையில் பயன்படாமல் போவதுடன் தானம் செய்தவருக்கும் பயனில்லாமல் ஆகி விடுகின்றது. விலை மதிப்பற்ற ஓர் உறுப்பு இரண்டு பேருக்கும் பயனற்றுப் போவதுடன் பெருத்த பொருளாதார சேதமும் ஏற்பட்டு விடுகின்றது. உறவினர்கள் தானம் செய்யும் போது இந்தத் தீய விளைவுகள் தவிர்க்கப்படுகின்றன.

இன்று உறவினர் அல்லாதவர்களிடம் கிட்னியைப் பெற்றுத் தருவதற்கென்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புரோக்கர்கள் பெருகி விட்டனர். இவர்கள் இதனையே தொழிலாகக் கொண்டு பிழைப்பு நடத்துகின்றனர். இவர்கள் அணுகுகின்ற ஆட்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் பரம ஏழைகள்! இந்த அப்பாவி ஏழைகள் ஓர் அற்பத் தொகையை, இருபதாயிரம் அல்லது இருபத்தைந்தாயிரம் பெற்றுக் கொண்டு விலை மதிப்பற்ற சிறுநீரகங்களை விற்க முன்வந்து விடுகின்றனர். இதனால் உறவினர்கள் தான் சிறுநீரக தானம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை அரசு இயற்றியுள்ளது. இந்தச் சட்டத்தை மீறியும் தானம் செய்பவர் உறவினர் தான் என்று போ­ச் சான்றிதழ் தயாரித்துக் கொடுத்து பணத்துக்காக இந்த அநியாயம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. உறவினர்கள் தானம் செய்வதன் மூலம் இத்தகைய தீய விளைவு தடுக்கப்படுகின்றது.

உறவினர்கள் தானம் செய்ய முன்வராததால் ஏற்படும் மற்றொரு படுபயங்கரமான பாதக விளைவு சிறுநீரக திருட்டாகும். இது மருத்துவரின் திறமையான கைவண்ணத்தில் மருத்துவமனையில் நடந்தேறுகின்றது. அல்சர், குட­றக்கம் போன்ற நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வருவோருக்கு, அந்த அறுவை சிகிச்சை செய்யும் போது மயக்க நிலையில் இருக்கும் அவரிடம் கிட்னியை மருத்துவரே திருடி விடுகின்றார். இப்படியொரு கொடிய திருட்டு இன்று பரவலாக மருத்துவமனைகளில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் உறவினர்கள் இந்த தானத்தைச் செய்ய முன் வராதது தான். இத்தகைய தீய விளைவுகள் அனைத்தும் களையப்பட்டு உடல் உறுப்பு மற்றும் பொருளாதார சுரண்டலற்ற ஓர் ஆரோக்கியமான சமூக சூழல் உருவாக உறவினர்கள் இப்படிப்பட்ட தானங்களைச் செய்ய வேண்டும். இதன் மூலம் இம்மை மறுமை பாக்கியத்தைப் பெற முன் வர வேண்டும்.

நன்றி: சகோ. எம். ஷம்சுல்லுஹா