வியாழன், 26 பிப்ரவரி, 2015

மீலாதும், மவ்லிதும்...

மீலாதும், மவ்லிதும்...

'உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கு என்றால் அவர்கள் ஓர் உடும்பின்பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'வேறெவரை?'' என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 3456 அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தது போன்றே இன்று முஸ்லிம்களிடம் பிறந்த நாள் கொண்டாடுதல், இறந்த நாள் அனுஷ்டித்தல் போன்ற காரியங்கள் ஏற்பட்டு விட்டன. உண்மையில் பிறந்த நாள் விழா, இறந்த நினைவு தினம் எல்லாமே யூத, கிறித்தவக் கலாச்சாரமாகும். இது இஸ்லாமியக் கலாச்சாரம் கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்கு முந்தைய நபிமார்கள், நல்லடியார்கள் யாருக்கும் பிறந்த நாள் விழா எடுத்தது கிடையாது. யாருடைய இறந்த தினத்தையும் அனுசரித்தது கிடையாது. நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு நபித் தோழர்களின் காலத்திலும் இந்தக் கலாச்சாரம் தோன்றவில்லை. 

இது இஸ்லாமியக் கலாச்சாரம் என்றால், நன்மையான காரியம் என்றால் நன்மையில் எல்லா வகையிலும் முந்திச் சென்ற நபித்தோழர்கள் மற்றும் அதற்குப் பின் வந்த தலைமுறையினர் இதைச் செயல்படுத்தியிருக்க வேண்டும்.

'உங்களால் (மக்களால்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், 'இரண்டுதலைமுறைக்குப் பிறகு மூன்றாவதாக ஒரு தலைமுறையை நபி (ஸல்) அவர்கள் சொன்னார்களா என்று எனக்குத் தெரியாது'' என்று கூறுகிறார்கள். நூல்: புகாரி 2651

சிறந்த தலைமுறையினரான அவர்களிடம் இல்லாத ஒரு புதிய செயலை வணக்கம் என்ற பெயரில் இன்றைக்கு முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில் புகுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பிற மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸ் மூலமும், இன்ன பிற கட்டளைகள் மூலமும் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். இது போன்ற காரியங்களை ஒரு போதும் செய்யக் கூடாது என்று நபித்தோழர்களைத் தடுத்திருக்கின்றார்கள்.

வழிபாடல்ல! வழிகேடே!

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க் கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். 

'தாத்து அன்வாத்' என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் 'அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு 'தாத்து அன்வாத்து' என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்'' என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்'' என்று சொல்லி, 'என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், 'மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்' என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், 'நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள்' என்றுபதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூ வாக்கிதுல் லைசி நூல்கள்: திர்மிதீ 2106, அஹ்மத் 20892 

மீலாது விழா, நினைவு நாள் போன்றவை யூத, கிறித்தவ, இணை வைப்பாளர்களின் கலாச்சாரம் என்பதில் கடுகளவு கூட சந்தேகம் இல்லை. இவர்களது கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடாது என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். அப்படிப் பின்பற்றினால் அவர்கள் யூத, கிறித்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தானே ஒழிய முஸ்லிம்கள் கிடையாது. இதையும் நபி (ஸல்) அவர்கள் மற்றொரு ஹதீஸிலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

'பிற சமுதாயக் கலாச்சாரத்திற்கு ஒப்ப நடப்பவன் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவனே!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூற்கள்: தப்ரானியின் அவ்ஸத், பஸ்ஸார் அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி) 

இந்த ஹதீஸின்படி மவ்லிது ஓதுபவர்கள், மீலாது விழா நடத்துபவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸ்கள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு ஒருவர் மவ்லிது ஓதுகிறார் என்றால், மீலாது விழா கொண்டாடுகிறார் என்றால் அவர் மறுமையில் கடுமையான தண்டனையைச் சந்திக்க நேரிடும்.

மவ்லிது, மீலாது என்பதெல்லாம் வணக்கம் என்ற அடிப்படையில் நடத்தப்படுகின்றது. இதற்கு நன்மை கிடைக்கும் என்று நம்பியே முஸ்லிம்கள் இதைச் செய்கிறார்கள். வணக்கம், நன்மை இவையெல்லாம் நபி (ஸல்) அவர்களால் இந்தச் சமுதாயத்திற்குக் கற்றுத் தரப்பட்டு விட்டது.

மவ்லிது நன்மை என்றால் நபியவர்கள் அதைக் காட்டித் தந்திருக்க வேண்டும். அவ்வாறு காட்டித் தரவில்லையெனில் தம்முடைய தூதுச் செய்தியை அவர்கள் சரியாக மக்களிடம் சமர்ப்பிக்கவில்லை என்ற குற்றத்திற்கு ஆளாகி விடுவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் எந்தவொரு நன்மையையும் இந்தச் சமுதாயத்திற்குக் காட்டித் தராமல் செல்லவில்லை; எந்த நன்மையையும் சொல்லாமல் விடவில்லை.

நபி (ஸல்) அவர்கள் சொல்லாத, செய்யாத, பிறர் செய்து அதை அங்கீகரிக்காத எந்தக் காரியத்தை, வணக்கம் என்ற பெயரில் யார் செய்தாலும் அது வழிபாடு கிடையாது. வணக்கம் கிடையாது. அது அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோஅவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2697 

இந்த ஹதீஸின் அடிப்படையில் மவ்லிது என்ற போலி வணக்கம் அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் வணக்கமாகும். பின்வரும் ஹதீஸ் இதை இன்னும் தெளிவாக விளக்கி விடுகின்றது.

நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 3243

நன்றி: துபை TNTJ