புதன், 18 பிப்ரவரி, 2015

குர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...

குர்ஆன் நபி வழியும், நமது நிலையும்

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே !

குர்ஆனும், நபிவழியும் நமது மார்க்கத்தை முழுமையாக்கி இருந்தாலும், இன்றைய கால நம் பெண்கள் தங்கள் வாழ்க்கைகளை அல்லாஹ்வின் அச்சமில்லாமல் மனோ இச்சைப் படி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

திருமணம்

திருமணத்தில் நபிவழித் திருமணம் என்று நாம் பல இடங்களில் கேள்விப்படுவதுண்டு. ஆனால் நாம் அதனை கண்கூடாக ஒரு சில இடங்களில் தான் காணக்கூடியதாக உள்ளது.

திருமணத்திற்கு மணமகன் தயாரான பின்பு அவன், அவனுடைய உறவினர்கள் எவ்வாறு மணமகளை தேர்வு செய்கின்றனர். மணப்பெண் அழகாக இருக்கின்றாளா, அவள் குடும்பம் வசதி படைத்ததாக உள்ளதா, அவர்களிடம் எவ்வளவு வரதட்சணை (பிச்சை) கேட்கலாம் போன்றவாறாக ஒரு லிஸ்ட் போட்டுதான் தங்களுடைய மருமகள் அல்லது மனைவியை தேர்வு செய்கின்றனர்.

ஆனால் உலக இறுதித் தூதர் நபி (ஸல்) அலை அவர்கள் இந்த மாதிரியாக திருமணம் செய்பவர்களின் இரு கரங்களும் மண்ணாகட்டும் என்று சபித்துள்ளார்கள். அவர்கள் தங்களது மருமகள் அல்லது மணைவியை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு அழகிய வழிமுறைகளையும் நமக்கு காண்பித்து தந்திருக்கின்றார்கள். அந்த வழிமுறையை அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அலை கூறும் போது, நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.

  1. அவளுடைய செல்வத்திற்காக
  2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக
  3. அவளுடைய அழகிற்காக
  4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! புகாரி : 5090.
ஒவ்வொருவரும் தங்கள் மனைவியை மார்க்கப்பற்றுள்ளவராகத் தேர்தெடுத்து இம்மையிலும், மறுமையிலும் வெற்றியடைய வேண்டும்.

வரதட்சணை

பலர் பெண் பேசுவதற்கு முன்னரே வரதட்சணை எனும் பிச்சையை அந்த பெண் வீட்டினரிடம் கேட்கின்றனர். அவர்கள் இந்த கேடுகெட்ட செயலைச் செய்வதற்கு அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும். வரதட்சனைக் கொடுமையால் எத்தனை பெண்கள் கணவன் மற்றும் அவர்களின் குடும்பத்தினரால் கொடுமைப்படுத்தப்பட்டு சாகடிக்கப்படுகின்றார்கள், மகள் திருமணத்திற்கு முன்புவரை கண்ணியமாகவும், கவுரவமாகவும் நடந்த எத்தனை பெற்றோர்கள் வெளி ஊர்களில் சென்று பள்ளி வாசல்களிலும், ஜமாஅத்தார்களிடமும் பிச்சை எடுக்கின்றார்கள், எத்தனை பிஞ்சுக் குழந்தைகள் கருவரையிலும், பிறந்தவுடனும் வரதட்சணை கொடுக்க வேண்டுமே என்ற காரணத்திற்காக சமாதிகட்டப்படுகின்றன, எத்தனை பெண் குடும்பத்தார்கள் திருமணத்திற்காக வட்டிக்குக் கடன் வாங்கி, அதனைச் செலுத்த முடியாமல் கேவலப்படுக்கொண்டிருக்கின்றனர், இன்னும் எத்தனை பெண்கள் வயது முதிர்ந்தவர்களாக வரதட்சணை கொடுக்க முடியாமல் திருமணம் நடைபெறாமல் இருக்கின்றனர், எத்தனை சகோதரர்கள் அவனது சகோதரிக்கு திருமணம் நடைபெறுவதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று இரவு பகலாக கடும் வெயிலிலும், கடும் குளிரிலும் கஷ்டப்பட்டு பல வருடக்கணக்கில் உழைத்து அனுப்புகின்றனர். இது போன்று வரதட்சணையால் நடைபெறும் கொடுமைகள் ஏராளம். இந்த மாதிரியான கொடுமைகளை ஆதரிப்பவர்களின் நிலை, இவ்வளவு நாட்களாக வரதட்சணையால் பாதிக்கப்பட்டு, சீறழிந்தவர்களின் பாவங்களும் மற்றும் இனி இவ்வாறாக பாதிக்கப்படுபவர்கள் அனைவரின் பாவத்திற்கும் இவர்கள் ஆளாவார்கள். ஆதரிப்பவர்கள் என்றால் அந்தக் குடும்பம் மட்டும் அல்ல, அங்கு ஒரு வேளை சோத்துக்காக போய் கொட்டிக்கொள்பவர் ஒவ்வொருவருக்கும் இது பொருந்தும்.

தவ்ஹீத் சகோதரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் கூட பல கஷ்டமான நிலைகளில் சரியாக நடந்து கொண்டு இந்த விஷயத்தில் தான் கோட்டைவிட்டு விடுகின்றனர்.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) தம் மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளம் இருக்க, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது (அது குறித்து) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வினவியபோது, தாம் ஓர் அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக்கொண்டதாக அப்துர் ரஹ்மான் (ரலி) நபியவர்களிடம் தெரிவித்தார்கள். நபி(ஸல்)அவர்கள் அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு மஹர் செலுத்தினீர்?. என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான்(ரலி) ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தை என்று பதிலளித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா-மணவிருந்து அளிப்பீராக!.என்று கூறினார்கள். புகாரி :5153.

இந்த ஒரு ஹதீஸ்-ல் இருந்து நாம் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். இப்போதுள்ள குர்ஆனைக் கரைத்துக் குடித்த உலமா(?)க்களுக்கு எல்லாம் பெரிய உலமா(?)க்கலாக இருந்தாலும், இவர்களை விடவும் நம் உயிரிலும் மேலான இறுதித் தூதர் (ஸல்) அலை அவர்கள் இருக்கும் போது அவர்களுக்கே தெரியாமல் மிக மிக எளிமையாக அப்துர் ரஹ்மான் இப்னு அவ்;ஃப்(ரலி) அவர்கள் திருமணம் செய்திருக்கின்றார்கள். அந்த நபித் தோழர் தனக்கு திருமணம் ஆகி விட்டது என்று சொன்ன பின் தான் நபி (ஸல்) அவர்களுக்கே தெரியவருகின்றது. இதைக்கேட்ட நபி அவர்கள் இப்போதுள்ள இமாம் என்று சொல்லிக்கொள்பவர்கள் (வரதட்சணைக்கு முழுவதுமாக துணை புரிந்து திருமணம் செய்து வைக்கக் கூடியவர்கள் கமிஷன் போச்சே!!! என்று எண்ணி) கேட்பார்களே என்னை ஏன் திருமண(?)த்திற்கு அழைக்கவில்லை? என்பது போன்ற வார்த்தைகளையா நபி (ஸல்) அலை அவர்கள் கேட்டார்கள். ஸஹாபி சொன்ன உடனே அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு மஹர் செலுத்தினீர்? என்று கேட்டார்கள். பின்னர் வலீமா விருந்து கொடுக்க சொன்னார்கள்.

இந்த ஹதீஸ்-ல் மஹர் என்பது எவ்வளவு வலியுறுத்தப்பட்டிருந்தால் திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்த உடன் அந்த சஹாபியைப் பார்த்து எவ்வளவு மஹர் செலுத்தினீர்? என கேட்டிருப்பார்கள். இஸ்லாத்தில் மஹர் என்பது ஒன்று உள்ளது அதை கணவன் தான் மனைவியாகப் போகிறவளுக்கு கொடுக்க வேண்டும். வரதட்சணை என்பது இஸ்லாத்திற்கு அப்பார்ப்பட்ட, கேவலமான செயல் என்று இந்தகாலத்தில் உள்ள உலமா(?)கள் தெரிந்து கொண்டே, இதனால் ஏற்படும் விளைவுகளையும் தெரிந்து கொண்டே தெருக்கலிலும், பள்ளிவாசலிலும் வைத்து இந்த மாதிரியான கேடுகட்ட, இஸ்லாத்திற்கு அப்பார்ப்பட்ட திருமணங்களை செய்து வைக்கின்றனர். குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை கேலிக்குறியதாக்கி அதன் மூலம் கிடைக்கும் பிச்சைக் காசுக்காக் மனக் குருடர்களாய் நாங்களும் உலமா(?)க்கள் தான் என வேடமிட்டுக் கொண்டிருக்கின்றனர் இந்த காட்டு ஓநாய்கள்.

பெண் பார்த்திருந்தாலும் திருமணம் முடியும் வரை அப்பெண் அந்நியப்பெண்ணே 

பெண் பார்த்திருந்தாலும், திருமணம் முடியும் வரை அவள் அன்னியப் பெண்தான் என்பதை மறந்து, அவளிடம் இவர்கள் செய்யும் அனாச்சாரியங்களுக்கு அளவே இல்லை. பெண் பேசியவுடன் முதல் வேலையாக, பெண் பார்த்த அன்றைய தினமே அவளுக்கு ஒரு செல் போனை பரிசாக வழங்கி பின்னர் அதில் நிமிடம் தவறாமல் தனிமையில் பேசி ஷைத்தானின் தூண்டுதலுக்கு இருவரும் அடிமையாகி விடுகின்றனர். இதன் நிலை தனிமையில் சந்திக்கும் அளவுக்கு கொண்டு போய் விடுகின்றது. இன்னும் பல வீடுகளில் பெற்றோர்களே அப்பெண்ணை அவனுடன் வெளியில் செல்ல அனுமதிக்கின்றனர். வெளிநாட்டு மாப்பிள்ளையாக இருந்தால் சொல்லவே தேவையில்லை. பல வகையான பரிசுப்பொருட்களை வாங்கி பெண்ணுக்கு கொடுக்கின்றனர். இதன் நிலை தான் அந்தப் பெண், நீங்கள் கொடுத்த செல் போன் அழகாக உள்ளது, ஆனால் நீங்கள் கொடுத்த உங்கள் போட்டோ அழகாக இல்லை என்று சொல்லும் நிலைக்கு தள்ளுகின்றது. அவர்களின் இந்த அந்நியோன்ய உரவால் திருமணத்தில் சிக்கலை சந்தித்தால் அந்த பெண்களின் நிலை என்னவாகும் என்ற எண்ணம் அந்த இளைஞனுக்கு இல்லை, ஏன்? இன்றைய கால பெண்களுக்கும் இருக்கவில்லை.

மனைவியை வெறுத்து ஒதுக்குதல்

பின்னர் திருமணம் ஆன பின் தன்னுடைய மணைவியை சமைக்கத் தெரியவில்லை போன்ற சின்ன, சின்ன விஷயங்களுக்காகவே முழுவதுமாக வெறுத்து ஒதுக்குகின்றனர். இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கை கொண்ட ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும். அறிவிப்பவர் : அபுஹீரைரா (ரலீ) நூல் : முஸ்லிம் 2915

ஒழுக்கமான பெண்கள்

அல்லாஹ் தன் திருமறையில் ஒழுக்கமான பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கீழ்க்கண்டவாறு கூறுகின்றான்.

நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளான பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானையை தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திரமானரவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும். அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள் இன்னும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். (அல்குர்ஆன் 33:59)

மேலும் (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும், தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும். அதனின்று வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர, (தங்கள் அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளில் மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு, ஆகியவற்றை மறைத்து) க் கொள்ள வேண்டும்... அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியப்படுவதற்காக, தங்களுடைய கால்கள் பூமியில் தட்டி நடக்க வேண்டாம். (அல்குர்ஆன் 24:31)

இந்த வசனம் இறங்கியவுடன் நம் சஹாபியப் பெண்மணிகளின் நிலை எவ்வாறு இருந்ததென்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பெண்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளட்டும் என்ற அல்குர்ஆனின் கட்டளை அருளப்பட்டபோது பெண்கள் தம் மெல்லிய ஆடைகளை கைவிட்டனர். தடித்த (கம்பளி போன்ற) துணிகளால் முந்தானைகளைத் தயாரித்துக் கொண்டனர். (அபூதாவுத்)

ஆனால் இந்த குர்ஆன் ஹதீஸ்களுக்கு சம்பந்தமே இல்லாமல் பல இஸ்லாமியப் பெண்களைப் பார்க்கலாம். இவர்கள் இஸ்லாமியப் பெண்களா? என்று சந்தேகத்திற்கு இடமாக அவர்களின் நிலை இருக்கும். அவர்கள் கண்ணாடி போன்ற சேலைகளை உடுத்திக் கொண்டும், தலை நிறைய பூ வைத்துக் கொண்டும், நறுமணங்களைப் பூசிக்கொண்டும், கால்களில் ஒலி எழுப்பக்கூடிய கொலுசுகளைப் போட்டுக் கொண்டு பல திருமணங்களுக்கும், கந்தூரிகளுக்கும் போவதைப் பார்க்கின்றோம். ஆனால் இதனைத் தடுக்கக்கூடிய, கண்டிக்கக்கூடிய கணவன்மார்கள் இதனைக் கண்டுகொள்ளாமல் உள்ளனர். மேலும் இவர்கள் அவர்களை சீறழிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் புதுமையான பர்தாக்களைப் பார்த்தால் சொல்லவே தேவையில்லை. 

பர்தாக்கள் என்று சொல்லிக் கொள்ளும் அந்த ஆடைகள் பெண்களின் உடல்களின் அங்க அசைவுகளை வெளிப்படையாகக் காட்டும் அளவுக்கு உள்ளது. கீழ்ப்பகுதியில் கிழிந்து (சேலைகள் தெரிய வெளியில்) தொங்குகிறது. கேட்டால் பேஷன் என்று சொல்வார்கள். அவர்கள்; நடக்கும் போது காற்றில் பர்தா ஒருபுரமாக போகின்றது. இந்த நிலை தற்போது நமது ஊர்களில் வளர்ச்சியடைந்து பர்தாக்களை வாங்கி அவர்களின் உடல்களுக்கு ஏற்றவாறு இருக்கமாகவும், அழகு வெளியில் தெரியும் படியுமாக தைத்துக் கொள்கின்றனர். முதலில் இந்த பெண்களுக்கு பர்தா என்பது எதற்காகப் போடுகிறோம் என்றே தெரியவில்லை. எந்த ஆடை போட்டாலும் தங்களுடைய அழகைக வெளிக் காட்டுவதிலேயே குறியாக இருக்கின்றனர் பெண்கள்.

ஒரு பெண் தன் கணவரின் இசைவின்றி யாரையும் அவரின் இல்லத்திற்குள் அனுமதிக்ககவும், குழைந்து பேசவும் கூடாது.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான், ''...இறைவனுக்கு அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான்' (அல்குர்ஆன் 33:32)

கணவனின் அனுமதி இல்லாமல் நோன்பு நோற்பதற்கும் தடை

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒரு பெண் தன் கணவர் உள்ளூரில் இருக்க, அவரின் அனுமதியில்லாமல் (கூடுதல்) நோன்பு நோற்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவரின் அனுமதியில்லாமல் (யாரையும்) அவரின் இல்லத்திற்குள் அவள் அனுமதிக்கலாகாது. கணவர் கட்டளையிடாமலேயே ஒரு பெண் (அறவழியில் கணவரின் பொருளைச்) செலவிட்டால் (அதன் பலனில்) பாதி அவருக்கும் கிடைக்கும். புகாரி5195.

ஆனால் இன்றைய கால பெண்கள் அறவழியில் செலவழிக்கின்றனரோ? இல்லையோ? கணவன் அவனுடைய பொருளை அவன் அறவழியில் செலவிடுவதை தடுக்கும் பெண்களைத்தாம் நாம் அதிகமாகக் காண்கின்றோம். அதற்கு இந்தப் பெண்கள் ஒரு பெயரும் வைத்து விடுவார்கள் 'பொழைக்கத்தெரியாதவர் என்று' . மேலும் நம் சமூகத்துப் அதிகமான பெண்கள் இந்தக் குர்ஆன் ஹதீஸ்களுக்கு அப்படியே நேர் மாறாகத்தான் நடக்கின்றனர். அன்னிய ஆண் ஒருவர் தன் வீட்டிற்கு வந்து உங்கள் கணவர் உள்ளாரா? என்று கேட்டால் ஆம் அல்லது இல்லை என்று தான் பதில் வரவேண்டும். இந்த பெண் 'சிடுமூஞ்சி' என பெயர் வாங்கினாலும் பரவாயில்லை. ஆனால் இவர்கள் 'அவங்க வெளியில போய்ருக்காங்க நீங்க உள்ள வாங்க உட்காருங்க டீ சாப்பிடுறீங்களா? சீனி போட்டு தரட்டுமா? சீனி போடாம தரட்டுமா?' இந்த மாதிரியாக குழைந்து பேசுவார்கள். மேலும் துணிக்கடைகளிலும், பால்காரனிடமும், காய்கறிக்காரனிடமும் இப்படித்தான். இவ்வாறு குழைந்து பேசினால்; அல்லாஹ் தன் திருமறையில் கூறியவாறு'எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான்' என்ற நிலை தான் உண்டாகும். இதனால் மிகப் பெரிய பாதிப்புகள் உருவாகும். இந்த மாதிரியான விஷயங்களின் கணவன்மார்கள் அதிக கவனம் செலுத்தி சொர்க்கத்தை அவர்கள் தங்குமிமாக்கிக் கொள்ள குர்ஆன் மற்றும் ஹதீஸ் ன் அடிப்படையில் நடக்குமாறு அறிவுறை கூறவேண்டும்.

பெண்களே அஞ்சிக் கொள்ளுங்கள்

நரகத்தில் அதிகமானவர்களாக பெண்களையே பார்த்ததாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அலை அவர்கள் கூறுகின்றார்கள்.

நான் (தொழுது கொண்டிருக்கையில்) நரகத்தையும் கண்டேன். இன்றைய தினத்தைப் போல் (ஒரு பயங்கரமான) காட்சி எதையும் ஒருபோதும் (ஒரு பயங்கரமான) காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. மேலும், நரகவாசிகளில் அதிகமாகப் பெண்களையே கண்டேன். என்று கூறினார்கள்.மக்கள்,.ஏன் (அது?) இறைத்தூதர் அவர்களே!.என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், பெண்களின் நிராகரிப்பே காரணம்'.என்றார்கள். அப்போது. பெண்கள் அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்?. என வினவப்பட்டது. அதற்கு.கணவன்மார்களை நிராகரி(த்து நிந்தி)க்கிறார்கள். (கணவன் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவி, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள் கண்டால். உன்னிடமிருந்து எந்த நலனையும் நான் கண்டதேயில்லை. என்று சொல்லிவிடுவாள்'. என்று பதிலளித்தார்கள். புகாரி 5197. (ஹதீஸ் சுருக்கம்)

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே கொடிய நரகத்திலிருந்து தங்களைக் காத்து, நிரந்தரமான சொர்க்கத்தில் தங்களை சேர்ப்பவர்களாக உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ் மன்னிக்கக் கூடியவனாகவும், மன்னிப்பை விரும்பக்கூடியவனாகவும் இருக்கின்றான். ஆகவே அல்லாஹ்விடமே பாவ மன்னிப்பைத் தேடிக் கொள்ளுங்கள்.

- சகோ. கடையநல்லூர் மசூது