ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

தவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு

தவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு

அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் இன்று இமயமாய், விண்ணைத் தொடும் சிகரமாய் வளர்ந்து கொண்டிருக்கின்றது. இயக்கத்தில் கோபுரம்; கொள்கையில் குப்பை மேடு என்ற நிலையில் இந்த இயக்கத்திலுள்ள உறுப்பினர்கள் ஆகி விடக் கூடாது. கொள்கையிலும் கோபுரமாக இருக்க வேண்டும்.

தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கிறேன் என்று சொல்கின்ற ஒருவர் தனது கையில் தாயத்து கட்டியிருந்தால் (அப்படி யாரும் கட்டுவதில்லை) அவர் ஏதோ அரசியல் கட்சியில் இருப்பது போன்று நினைத்துக் கொண்டு இந்த இயக்கத்தில் இருக்கிறார்;கொள்கையளவில் இல்லை என்று தான் அர்த்தம்.

ஒரு காலத்தில் குர்ஆன், ஹதீஸை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று சொல்வதற்கும், செயல்படுவதற்கும் பிறந்த இயக்கம் தான் அஹ்லே ஹதீஸ் என்ற இயக்கம். இன்று அந்த இயக்கத்தவர் தங்கள் கைகளிலும் கழுத்துக்களிலும் தாயத்தைக் கட்டிக் கொண்டு திரிகின்றனர். கேட்டால் பெரியவர்கள் செய்தார்கள் என்ற மவ்ட்டீக வாதத்தைப் பதிலாகத் தருகின்றனர். அவர்கள் இந்த நிலையை அடையக் காரணம், தங்கள் கொள்கையைப் பின்பற்றாதது தான்.

எனவே தவ்ஹீத் ஜமாஅத் என்ற பேரியக்கத்தில் இருப்பவர்கள் அது போன்ற ஒரு நிலையை அடைந்து விடாதிருக்க ஒவ்வொரு விஷயத்திலும் இவ்வியக்கத்தின் நிலைப்பாட்டைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றைத் தங்களின் முழு வாழ்க்கையிலும் கடைப் பிடிக்க வேண்டும்.

தவ்ஹீத் ஜமாஅத்தைச் சாராதவர்கள், தங்களுக்கென்று எந்தவொரு நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. உதாரணத்திற்கு, தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்த ஒருவர், திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டால், அதில் கலந்து கொள்ளலாமா? அது வரதட்சணை வாங்கி நடத்தப்பட்ட திருமணம் ஆயிற்றே! அத்திருமணத்தில் இறைவனுக்கு இணை கற்பிக்கும் காரியங்கள் நடந்தனவே! என்றெல்லாம் கேள்விகளுக்கு அவர் இடம் கொடுக்க மாட்டார். எந்தவிதத் தடங்கலோ, தயக்கமோ இன்றி அந்த விருந்தில் போய் கலந்து கொள்வார்.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் அப்படிப் போய் கலந்து கொள்ள முடியாது; கலந்து கொள்ள மாட்டார். காரணம், தவ்ஹீத் ஜமாஅத் இது போன்ற விஷயங்களில் தனக்கென்று ஒரு நிலைப்பாட்டை வகுத்துக் கொண்டது தான்.

மார்க்க நிலைப்பாடே இயக்க நிலைப்பாடு

வரதட்சணை வாங்கும் திருமணத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று கூறி தனதுஉறுப்பினருக்கு இந்த ஜமாஅத் வழிகாட்டுவது போன்று, ஒருவர் தனது திருமணத்தை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கும் ஒரு நிலைப்பாட்டைக் கூறிவழிகாட்டுகின்றது.

நிலைப்பாடு என்று குறிப்பிடும் போது தவ்ஹீத் ஜமாஅத்தினர் தங்கள் மனோ இச்சைப்படி உருவாக்கிக் கொண்ட, சொந்தமாகத் தயாரித்துக் கொண்ட ஒரு நிலைப்பாடு என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. மார்க்கம் என்ன சொல்கின்றதோ அந்தச் சட்டங்களைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் தனது நிலைப்பாடாகக் கொண்டுள்ளது.

1. மணப் பெண் தேர்வு

இணை கற்பிக்கும் பெண்களைத் திருமணம் முடிக்கக் கூடாது என்று திருக்குர்ஆனில்அல்லாஹ் தடை செய்துள்ளான்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமைசிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
அல்குர்ஆன் 2:221

ஏகத்துவத்தைக் கொள்கையாகக் கொண்ட இளைஞர்களில் சிலர் பக்கா தர்ஹா வழிபாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த மணமகளைத் திருமணம் முடிக்கின்றனர். அதிலும் குராபி மதரஸாக்களில் படித்து ஆலிமா பட்டம் பெற்ற பெண்ணைத் திருமணம் முடிக்கின்றனர். இதற்கு இவர்கள் குறிப்பிடுகின்ற ஒரே காரணம், அந்தப் பெண் தனது மாமன் மகள், மாமி மகள் என்ற உறவு முறையைத் தான். திருமணத்திற்குப் பிறகு அவளைத் தவ்ஹீதுக்குக் கொண்டு வந்து விடுவேன் என்றும் கூறுகின்றனர்.

இந்த நொண்டிச் சாக்கிற்கும் நோஞ்சான் சமாதானத்திற்கும் அல்லாஹ்வே விளக்கம்தருகிறான்.

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்! என்று கூறப்பட்டது.
அல்குர்ஆன் 66:10

நீண்ட காலமாகப் பழகி, நெருக்கமாக வாழ்ந்த இவ்விரு இறைத் தூதர்களே தங்கள்மனைவிமார்களை ஏகத்துவத்திற்குக் கொண்டு வர முடியவில்லை எனும் போது,நேற்று தவ்ஹீதுக்கு வந்த நாம், இன்று ஒரு முஷ்ரிக்கான பெண்ணை மணமுடித்து,நாளை தவ்ஹீதுக்குக் கொண்டு வந்து விடுவேன் என்று சொல்வது எவ்வாறு பொருத்தமான பதிலாக அமையும்?

இணை வைப்பில் உள்ள அந்தப் பெண் நாளை தவ்ஹீதுக்கு வந்து விடுவாள் என்பது என்ன நிச்சயம்? அவள் தவ்ஹீதுக்கு வந்து விடுவாள் என்ற ஞானம் நம்மில் யாருக்குஇருக்கிறது? இது அடுத்து எழக்கூடிய கேள்வியாகும்.

திருமணம் முடித்துக் கொஞ்ச நாட்களில் இந்தப் பெண் கருவுற்ற நிலையில் அவளை மணமுடித்த ஏகத்துவவாதி இறந்து விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். பிறக்கும் அந்தக் குழந்தை தர்ஹா வழிபாட்டிலேயே வளர்க்கப்படும். காரணம், பெண்ணுடைய குடும்பமே தர்ஹா வழித்தோன்றல்கள், தர்ஹா வழிபாட்டு மையம்!

நாமும் நமது சந்ததியினரும் நரகத்தில் வீழ்ந்து விடக் கூடாது என்பதற்காகத் தான்தவ்ஹீது ஜமாஅத்தில் இணைந்தோம். இந்த அடிப்படை நோக்கமே இப்போது அடிபட்டு, நம்முடைய சந்ததியை நாமே நரகத்தில் கொண்டு போய் தள்ளும் நிலைக்கு ஆக்கி விடுகின்றோம். எனவே ஓர் ஏகத்துவக் கொள்கைவாதி ஒருபோதும் இணை வைக்கும் பெண்ணைத் திருமணம் முடிக்கக் கூடாது.

2. திருமண உரை

ஒரு காலத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க அறிஞர்கள் பலரும் நீண்ட நெடிய தூரம் பயணம் மேற்கொண்டு, கொள்கைச் சகோதரர்களின் திருமணங்களில் போய் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவார்கள். இதற்குக் காரணம் அந்தக் காலத்தில் ஏகத்துவத்தைச் சொல்வதற்கு திருமணத்தின் மூலமாகவாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்ற ஆர்வம் தான். ஆனால் இப்போது அவர்கள் யாரும் இது போன்று கலந்து கொள்வதில்லை. மாநில தாயீக்களும் கலந்து கொள்வதில்லை. இதற்குக் காரணம் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் திருமண சபை என்று ஒன்று கூடி, அந்தச் சபையில் நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்டதாகப் பார்க்கமுடியவில்லை. இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், மதீனாவுக்கு வந்த போது,அவர்களையும் சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். சஅத் (ரலி) அவர்கள் வசதி படைத்தவராக இருந்தார்கள். அவர் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களிடம், எனது செல்வத்தைச் சரிபாதியாக உமக்குப் பிரித்துத் தருகிறேன்; (என் மனைவியரில் ஒருத்தியை விவாகரத்து செய்து) உமக்கு மண முடித்துத் தருகிறேன்! எனக் கூறினார். அதற்கு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், உமது குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் வளம் (பரக்கத்) புரிவானாக! எனக்குக் கடை வீதியைக் காட்டுங்கள்! எனக் கூறினார்கள். அவர்கள் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப்பெற்று, தாம் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார்கள். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் வந்தார்கள். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் என்ன விசேஷம்? எனக் கேட்டார்கள். அதற்கவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு அன்ஸாரிப் பெண்ணை மணமுடித்துக்கொண்டேன்! என்றார்கள். நபி (ஸல்) அவருக்கு என்ன மணக்கொடை (மஹ்ர்) கொடுத்தீர்? எனக் கேட்டார்கள். ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்! என அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அதற்கு, ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 2048, 2049

திருமணத்திற்கென்று ஒரு தாயீ வர வேண்டும் என்பது அவசியமில்லை. அப்படியானால் திருமண உரை?

திருமணத்தின் போது உரை நிகழ்த்தியாக வேண்டும் என்பது கட்டாயமல்ல! ஜும்ஆ,பெருநாள் போன்ற வணக்கங்களுடன் சேர்ந்து அமைந்துள்ள உரைகளைத் தவிர மற்ற இடங்களில் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் உரைகள் எங்கும் அமையலாம். தேவை அதைத் தீர்மானிக்கும்.

(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான,வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே முளர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்டஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிமாறி விட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட,பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது மக்களே! உங்களை ஒரே ஒரு உயிரிலிருந்துபடைத்த உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள் எனும் (4:1) இறை வசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள். மேலும், அல்ஹஷ்ர் அத்தியாயத்திலுள்ள நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நாளைக்கு என தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனும் (59:18) வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது (உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக் காசு, துணி, ஒரு ஸாஉ கோதுமை, ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும் என்று கூறி, பேரீச்சம்பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும் என்று வலியுறுத்தினார்கள். அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல்: முஸ்லிம் 1848

வறுமையில் வாடும் ஒரு கூட்டத்தினரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் தர்மத்தை வலியுறுத்தி உரை நிகழ்த்துகின்றார்கள். இது போன்று தான் திருமண உரையும்! திருமண ஒப்பந்தத்தின் போது வந்திருக்கும் மணமக்கள், அவர்களது பொறுப்பாளர்கள், சாட்சிகள் முன்னிலையில் இறையச்சத்தை ஊட்டுகின்ற ஓர் உரை! அதுவும் கட்டாயமில்லை என்ற அளவுக்குத் தான் திருமண உரை என்பது அமைந்துள்ளது.

திருமண உரை இந்த அளவுக்குத் தான் எனும் போது நாம் ஏன் திருமணத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் திரள்கிறோம் என்ற கேள்வி எழலாம். திருமண அவையில் இவ்வளவு பேர்கள் கூடுவதற்கு ஓர் அடிப்படைக் காரணம் இருக்கின்றது.நம்முடைய தவ்ஹீது சகோதரர்களின் திருமணத்தின் போது தான் சுன்னத் ஜமாஅத்தினர் எனப்படும் ஊர் ஜமாஅத்தினர் தங்கள் கெடுபிடிகளை, காட்டு தர்பார்களைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். திருமணப் பதிவேடு தர மாட்டோம்;திருமணத்தில் கலந்து கொள்ளும் மக்களை ஊர் நீக்கம் செய்வோம் என்று ஜமாஅத்தினர் மிரட்டல் விட்டனர். இந்த எதிர்ப்பலைகளால் நாம் ஒரு பெருங்கூட்டத்துடன் அவையில் கலந்து கொள்வது கட்டாயமாகி விடுகின்றது.

ஏகத்துவம் எங்கெல்லாம் வளர்ந்து கொண்டிருக்கின்றதோ அங்கெல்லாம் இத்தகையபிரச்சனைகள் இன்னும் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. இப்படி மக்கள்குழுமுகின்ற இடங்களில் இவ்வாறு ஒரு சொற்பொழிவு நடைபெறுகின்றது. இத்தகைய திருமணங்களில் நம்முடைய தாயீக்கள் கலந்து கொள்கின்றனர்.

இது போன்ற கட்டங்களில் நம்முடைய தாயீக்கள், திருமணத்திற்காக ஒரு மார்க்க அறிஞர் அல்லது பேச்சாளர் வந்து கலந்து கொண்டு உரை நிகழத்தினால் தான் திருமணம் என்பது கிடையாது என்று பகிரங்கமாக உணர்த்துவதற்குத் தவறுவதில்லை.

இந்த வழக்கத்தை நியாயப்படுத்துவதில்லை. ஏகத்துவம் வளர்ந்த ஊர்களில் இப்போது இந்த நடைமுறை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதும் மாறி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர்கள், உரை நிகழ்த்தினால் தான் திருணமம் நிறைவேறும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.
நன்றி எகத்துவம் இதழ்

வலிமா விருந்து

திருமண நிலைப்பாடு தொடர்பான விஷயங்களில் மணப்பெண் தேர்வு மார்க்க அடிப்படையில் அமைய வேண்டும் என்பதையும், திருமண உரை என்பது கட்டாயமல்ல என்பதையும் கடந்த இதழில் கண்டோம்.

திருமணத்திற்காக உற்றார் உறவினர்களை, நண்பர்களை அழைக்கச் செல்லும் நம்முடைய சகோதரர்கள் வாய்மொழியாக அழைத்தாலும், அழைப்பிதழ்கள் வாயிலாக அழைத்தாலும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தான் அழைக்கிறார்கள்.

புகாரியில் இடம் பெற்ற அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் ஹதீஸ்அடிப்படையில் இப்படி ஓர் அழைப்பு இல்லை என்று தெளிவாக விளங்கிக் கொள்கிறோம்.

திருமண அவைக்கு ஒருவரை அழைக்கவில்லை என்றாலும், அழைத்த பின்னர் ஒருவர் திருமண சபைக்கு வரவில்லை என்றாலும் நம்முடைய தவ்ஹீத் சகோதரர்கள் கடுமையாகக் கடிந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கடிந்து கொள்வதற்குக் காரணம், திருமணம் தொடர்பான இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்த நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்ளாதது தான்.

அதே சமயம் திருமணத்தின் போது வைக்கப்படுகின்ற விருந்தில் கலந்து கொள்வதுநபிவழியாகும்.

ஒருவர் திருமண சபையில் போல் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. ஆனால் திருமண விருந்திற்கு அழைக்கப்பட்டு அதில் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர் மீது குற்றமாகும்.

நபி (ஸல்) அவர்கள் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை விருந்துவைக்கும்படிச் சொல்கிறார்கள். ஆனால் இது கட்டாயமோ, கடமையோ கிடையாது. கடன் வாங்கியோ, சொத்துக்களை விற்றோ, நகைகளை அடகு வைத்தோ விருந்து வைக்கக் கூடாது.

கறி, சாப்பாடு போட்டுத் தான் விருந்து வைக்க வேண்டும் என்பதில்லை. வெறும்பிஸ்கட், டீயாகக் கூட இருக்கலாம்.

வசமான இறைச்சி இல்லையென்றால் அது வலீமா விருந்தே அல்ல என்றே சமுதாயம் கருதுகின்றது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் இறைச்சி இல்லாமலேயே வலீமா விருந்தளித்திருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (சத்துஸ் ஸஹ்பாஎனுமிடத்தில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மணமுடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அப்போது நபியவர்கன் வலீமா – மணவிருந்துக்காக முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்கடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட, (அவ்வாறே அது கொண்டுவந்து விரிக்கப்பட்டது.) அதில் பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் போன்றவை இடப்பட்டன. இதுவே அன்னாரின் வலீமா – மணவிருந்தாக அமைந்தது. அறிவிப்பவர்: அனஸ் (ரலி),நூல்: புகாரி 5159

எனவே வலீமா விருந்தை சாதாரணமாக இனிப்பு வழங்கி அல்லது சம்சா, டீ வழங்கிநிறைவேற்றிக் கொள்ளலாம்.

இன்று திருமணத்தின் போது ஏற்படுகின்ற உச்சக்கட்ட செலவே இந்த விருந்தில் தான். அதிலும் கடன் வாங்கி, கடன் கிடைக்காத போது வட்டிக்கு வாங்கி விருந்து வைக்கும் கொடுமை சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. கடன் வாங்கிக் கல்யாணம் என்று சொல் வழக்கில் உதாரணம் கூறும் அளவுக்குத் திருமணத்தின் போது கடன் வாங்கும் கொடுமை, சமுதாயத்தில் ஊடுருவி விட்டது. இதற்காகப் பலர் வீட்டைக் கூட விற்றிருக்கின்றனர். அந்த அளவுக்கு இந்தத் திருமண விருந்து மக்களை ஆட்டி அலைக்கழிக்கின்றது. அதனால் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் இந்தச் சமூக நிர்ப்பந்தத்திற்குப் பலியாகி விடக் கூடாது.

திருமணத்திற்காகக் கடன் வாங்குவதற்கு அல்லாஹ்வை அஞ்ச வேண்டும். ஏனெனில், கடன் இருந்தால் இறைவனின் மன்னிப்பு கிடைக்காது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே நின்று,அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்களிலேயே மிகவும் சிறந்ததாகும் என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல்முன்னோக்கிச் சென்று கொல்லப்பட்டால், (உங்கள் அனைத்துப் பாவங்களும்மன்னிக்கப்படும்) என்று பதிலளித்தார்கள்.

பிறகு (சிறிது நேரம் கழித்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எப்படிக்கேட்டீர்கள் (மீண்டும் சொல்லுங்கள்)? என்று கேட்டார்கள். அந்த மனிதர், நான்அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்? என்று கேட்டார்.

மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம், நீங்கள் பொறுமையுடனும்(இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் செல்லும்போது (கொல்லப்பட்டுவிட்டால் உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன.) ஆனால், கடனைத் தவிர! ஏனெனில், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் (இப்போதுதான்) இவ்வாறு கூறினார் என்றார்கள். அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி), நூல்: முஸ்லிம் 3498

எனவே சமுதாயம் வெட்டி வைத்திருக்கும் சமூக நிர்ப்பந்தம் என்ற படுகுழியில்கொள்கைச் சகோதரர்கள் விழாத வண்ணம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி விருந்து வைக்கும் அவல நிலைக்குச் சென்று விடக் கூடாது.

விருந்தில் கலந்து கொள்ளுதல்

திருமண விருந்துக்கு ஒருவர் அழைக்கப்பட்டால் அந்த விருந்தில் போய் கலந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் விருந்துக்குப் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொருமுஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை: ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை நலம் விசாரிப்பது, ஜனாஸாவைப் பின் தொடர்வது,விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது, தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1240

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கல் ஒருவர் வலீமா (மண) விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதனை ஏற்றுச் செல்லட்டும்! அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி 5173

வலீமாவில் கலந்து கொள்வது சுன்னத் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அது மாப்பிள்ளை வீட்டு விருந்தாக இருக்க வேண்டும்.

பெண் வீட்டு விருந்து

ஒரு கொள்கைவாதி, தன் மகளை, தன் பொறுப்பில் சகோதரியைத் திருமணம் முடித்துக் கொடுத்தால் அதற்காகத் தனது வீட்டில், அதாவது பெண் வீட்டில் விருந்து வைக்கக் கூடாது. பிறர் வைக்கின்ற பெண் வீட்டு விருந்தில் போய் கலந்து கொள்ளவும் கூடாது.

இவ்வாறு நாம் சொல்கின்ற போது, பெண் வீட்டு விருந்துக்கு மார்க்கத்தில் தடைஇருக்கின்றதா? என்று கேள்வி கேட்கிறார்கள். பெண் வீட்டு விருந்து வைப்பதற்குத்தடையில்லை என்று தீர்ப்பும் அளிக்கிறார்கள். இப்படித் தீர்ப்பளிப்பது பாமரனாகஇருந்தால் பரவாயில்லை. மார்க்கம் படித்த, அதிலும் மதீனாவில் போய் மார்க்கம்படித்தவர்கள் இந்த அறியாமைக் கேள்வியைக் கேட்கிறார்கள். இவர்களுக்கு மார்க்கத்தின் முக்கியமான அடிப்படையே தெரியவில்லை.

தடை இருக்கின்றதா?

தடை இருக்கின்றதா? என்று எப்போது, எதில் பார்க்க வேண்டும் என்று தெரியாததால்தான் இப்படி ஒரு புத்திசாலித்தனமான கேள்வியைக் கேட்கிறார்கள். தடையை எப்போது பார்க்க வேண்டும்? எதில் பார்க்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உத்தரவு, அங்கீகாரம் இருக்கின்றதா என்றுபார்க்க வேண்டும். ஒருவர் லுஹர், மக்ரிப், இஷா ஆகிய தொழுகைக்குப் பின்னால் சுன்னத் தொழுவது போன்று ஃபஜ்ருக்குப் பின்னாலும் சுன்னத் தொழலாமா? என்று நினைக்கின்றார். இப்போது அவர் அதற்கு உத்தரவு இருக்கின்றதா? என்று பார்க்க வேண்டும். அதாவது அல்லாஹ்வின் கட்டளை அல்லது தூதர் (ஸல்) அவர்களின் கட்டளை, அல்லது பிறர் செய்வதைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் அளித்த ஒப்புதல் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும்.

ஃபஜ்ர் தொழுகையில் முன் சுன்னத்தை விட்டிருந்தால், பின்னால் தொழலாம். ஆனால் ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் சுன்னத் என்பது கிடையாது. இது தெளிவாகத் தெரிந்த பின்னால் அவர் நம்மிடம், ஃபஜ்ருக்குப் பின் சுன்னத் தொழுவதற்குத் தடை இருக்கின்றதா? என்று கேட்கக் கூடாது. காரணம், இபாதத்தில், வணக்கத்தில் நாம் பார்க்க வேண்டிய அளவுகோல் உத்தரவு இருக்கின்றதா? என்பது தான்.

ஒரு சில ஊர்களில் பெருநாள் தொழுகைக்கு முன்பு சுன்னத் தொழுகின்றார்கள். இவ்வாறு தொழக் கூடாது என்று நாம் சொல்கின்ற போது, இதற்குத் தடை இருக்கின்றதா? என்ற கேள்வியைக் கேட்கக் கூடாது. ஏனெனில் இது வணக்கம். இதில் உத்தரவு இருக்கின்றதா? என்று தான் பார்க்க வேண்டும். 

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று முதன் முதலில் பெருநாள் தொழுகையைத் தான் தொழுதிருக்கின்றார்கள். மற்ற தொழுகையைத் தொழவில்லை. (பார்க்க: புகாரி 751)

இந்த அளவுகோல் நாமாகக் கண்டுபிடித்தது அல்ல! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னது தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன்உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப் பட்டதாகும். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2697

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த (மார்க்க)விஷயத்தில், அதில் இல்லாத ஒன்றை யார் புதிதாகப் புகுத்துகின்றாரோ அதுநிராகரிக்கப்பட வேண்டியதாகும். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம்3242

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு அமலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்பட்டதாகும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 3243

பின் விளைவுகள் பித்அத்துக்கள் தான்

முஸ்லிம் 3243 ஹதீஸில் அமல் – வணக்கம் என்ற வார்த்தையே இடம்பெறுகின்றது.இபாதத்தில், வணக்க வழிபாடுகளில் இப்படி ஓர் அளவுகோல் இல்லை என்றால் எல்லா பித்அத்களும் உள்ளே நுழைந்து விடும். எல்லா பித்அத்களையும் நியாயப்படுத்த, தடை இருக்கின்றதா? என்ற கேள்வி காரணமாக அமைந்து விடும்.

தொழுகைக்குப் பின் கூட்டு துஆ ஓதாதீர்கள் என்று நாம் சொன்னால் அவ்வாறு ஓதுபவர் உடனே, தடையிருக்கின்றதா? என்று கேட்பார். இதுபோல் மிஃராஜ் இரவில் தொழுகை, மிஃராஜில் நோன்பு நோற்றல், பராஅத் இரவுத் தொழுகைகள், பராஅத் நோன்பு, கத்தம் ஃபாத்திஹா என அனைத்து பித்அத்களும் அமர்க்களமாக அணி வகுத்து உள்ளே நுழைந்து விடும். எனவே இபாதத்துகளில் தடை இருக்கின்றதா என்று பார்க்கக் கூடாது. உத்தரவு அல்லது அங்கீகாரம் இருக்கின்றதா? என்று தான் பார்க்க வேண்டும். இபாதத்தில் உத்தரவைப் பார்க்க வேண்டும் என்று சொல்கின்ற போது, இபாதத்தில் தடையே வராது என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. தடையும் வரும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்வாசலின் சுவரில் (உமிழப்பட்டிருந்த) சயைக் கண்டார்கள். உடனே பொடிக்கல் ஒன்றை எடுத்து அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பின்னர், உங்கல் எவருக்கேனும் ச உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தமது முகத்துக்கு எதிரே அவர் உமிழவேண்டாம்; தமது வலப் பக்கத்திலும் உமிழ வேண்டாம்; தம் இடப்புறமோ அல்லது பாதத்திற்கு அடியிலோ அவர் உமிழட்டும் என்று சொன்னார்கள். அறிவிப்பவர்கள்: அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரி 411

வாழ்க்கை தொடர்பானவை

உணவு, உடை, கொடுக்கல் வாங்கல் போன்றவை வாழ்க்கை சார்ந்த செயல்களில்அடங்கும். ஒரு முஸ்லிமுக்கு, சாப்பிட அனுமதிக்கப்பட்டவை எவை? உடுத்துவதற்குஅனுமதிக்கப்பட்டவை எவை? பொருளாதாரத்தைத் திரட்டுகின்ற வழிகளில் அனுமதிக்கப்பட்டவை எவை? என்று மார்க்கம் வழிகாட்டியாக வேண்டும். அவ்வாறு வழிகாட்டும் போது, தரை வாழ் பிராணிகளில் வெள்ளாடு சாப்பிடலாம், செம்மறியாடு சாப்பிடலாம், மாடு சாப்பிடலாம் என்று உண்ண அனுமதிக்கப்பட்ட பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

அதுபோன்று கடல்வாழ் பிராணிகளில் மீன் சாப்பிடலாம், நண்டு சாப்பிடலாம், இறால்சாப்பிடலாம் என்று ஒரு பட்டியல் நீளும்.

தாவர இனத்தில் வெள்ளரி சாப்பிடலாம்; வெங்காயம் சாப்பிடலாம் என்று அதில் ஒரு பட்டியல் போட வேண்டி வரும்.

உடையில் காட்டன் அணியலாம்; பாலியஸ்டர் அணியலாம் என்று ஒரு பட்டியல் நீளும்.

வியாபாரத்தில் அரிசி வியாபாரம் செய்யலாம், ஜவுளி வியாபாரம் செய்யலாம் என்றுஅனுமதிக்கப்பட்ட வியாபாரத்தின் பட்டியல் ஆயிரக்கணக்கில் வரும்.

இப்படி அனுமதிக்கப்பட்ட விஷயங்கள் என்று பார்த்தால் உலகில் கோடான கோடி தேறும். அத்தனையையும் ஒரு வேதத்தில் சொல்லி விட முடியாது. அப்படிச் சொன்னால் அது வேதமாக இருக்காது. அதற்கென்று பல நூறு பாகங்கள் தேவைப்படும். எனவே இதுபோன்ற வாழ்க்கை சார்ந்த விஷயங்களில் மார்க்கம் தடுக்கப்பட்டதை விளக்கி விடும்.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். (அல்குர்ஆன் 2:173)

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும்,அம்புகள் மூலம் குறி கேட்பதும் (தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும். (அல்குர்ஆன் 5:3)

உணவில் இதுபோன்ற வசனங்களிலும், ஹதீஸ்களிலும் தடை செய்யப்பட்ட உணவுகள் குறித்து விளக்கப்பட்டிருக்கும்.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். வியாபாரம் வட்டியைப் போன்றதே என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். (அல்குர்ஆன் 2:275)

வியாபாரத்தில் வட்டி கூடாது, மோசடி கூடாது என்று தடைகள் கூறப்பட்டிருக்கும்.

எனவே இது போன்ற வாழ்க்கை சார்ந்த விஷயங்களில் தடை இருக்கின்றதா? என்று பார்க்க வேண்டும். இதில் உத்தரவு இருக்கின்றதா? என்று தேடக் கூடாது. அதே சமயம் இந்த விஷயங்களில் உத்தரவே வராது என்றும் விளங்கிக் கொள்ளக் கூடாது. உத்தரவும் வரும்.

மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! (அல்குர்ஆன் 2:168)

இதுபோன்று உத்தரவு வரும் போது, அதற்கு மாற்றமானதைச் செய்யக் கூடாது என்ற தடையும் அதில் அடங்கியிருக்கும். தூய்மையானதை உண்ணுங்கள் என்று சொல்லப்பட்டால், அசுத்தத்தை உண்ணக் கூடாது என்ற தடை அதனுள் அடங்கியிருக்கும்.

பெண் வீட்டு விருந்துக்குத் தடை

இவற்றின் பின்னணியாகக் கொண்டு பெண் வீட்டு விருந்து பற்றிப் பார்ப்போம்.

வலீமா விருந்து விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை நோக்கி, அதாவது மணமகனை நோக்கி, நீ விருந்து கொடு! என்று சொல்கிறார்கள். எனவே மாப்பிள்ளை தான் விருந்து கொடுக்க வேண்டும் என்று தெளிவாகி விடுகின்றது.

பெண் வீட்டில் வரதட்சணை வாங்கக் கூடாது என்பதில் தவ்ஹீதுவாதிகள் யாருக்கும்மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் வரதட்சணை வாங்கக் கூடாது என்று நாம் அழுத்தமான, ஆழமான பிரச்சாரத்தை மேற்கொள்கின்ற போது, குராபி ஆலிம்கள் நம்மைப் பார்த்து கேட்ட கேள்வி, பெண்ணிடத்தில் வாங்குவதற்குத் தடை இருக்கின்றதா? என்று தான்.

பிச்சைக்காரனுக்குப் பிச்சை போடுவதற்குப் பதிலாக அவனிடமிருந்து எடுப்பதற்குத்தடையிருக்கின்றதா? என்று கேட்பது போல் இருக்கின்றது என்று அதற்கு நாம் பதில்சொன்னோம்.

இப்போது இதே பதிலைத் தான், பெண் வீட்டு விருந்தை ஆதரிக்கும் ஜாக் போன்றஇயக்கத்தினரிடமும் கூறுகிறோம். பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! (அல்குர்ஆன் 4:4)

பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும் என்று வருகின்றது. இதிலேயே பெண்ணிடம் வாங்கக் கூடாது என்ற தடையும் அடங்கியிருக்கின்றது. இந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு வரதட்சணை வாங்கக் கூடாது என்று வீரியமிகு பிரச்சாரத்தை மேற்கொள்கிறோம்.

அதே போன்று, மாப்பிள்ளையை நோக்கி, விருந்து கொடு என்று சொல்லும் போது,அந்த உத்தரவிலேயே, திருமண விருந்து பெண் வீட்டில் இல்லை என்ற தடையும் இருப்பது நமக்குத் தெளிவாக விளங்கி விடுகின்றது.

உத்தரவின்றி உள்ளே வராதே!

உத்தரவின்றி உள்ளே வரக் கூடாது என்று சில இடங்களில் போட்டிருப்பார்கள். அனுமதி பெற்று உள்ளே வரவும் என்று சில இடங்களில் போட்டிருப்பார்கள். இரண்டிலும் வார்த்தைகள் வெவ்வேறாக இருந்தாலும் கருத்து ஒன்று தான். உள்ள வருவதற்கு அனுமதி பெற்றாக வேண்டும் என்ற கருத்தைத் தான் இரண்டு வாசகங்களும் தருகின்றன. இது போன்று தான் மார்க்கம் ஓர் உத்தரவைப் பிறப்பிக்கின்றது என்றால் அதற்கு நேர் மாறானதைச் செய்யக் கூடாது என்ற தடையும் அதில் உள்ளடங்கி விடுகின்றது.

அளக்கும் போது நிறைவாக அளங்கள்! நேரான தராசு கொண்டு எடை போடுங்கள்! (அல்குர்ஆன் 17:35)

இப்படி ஓர் உத்தரவை அல்லாஹ் பிறப்பிக்கின்றான் என்றால் அதற்கு நேர்மாறானதைச் செய்யக் கூடாது என்ற தடை அதில் அடங்கியுள்ளது. இந்தத் தடையை இன்னொரு இடத்தில் வெளிப்படுத்தியும் கூறுகின்றான்.

அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்! (அல்குர்ஆன்11:84)

மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! (அல்குர்ஆன் 2:168)

அனுமதிக்கப்பட்டதை உண்ணுங்கள் என்ற உத்தரவு இந்த வசனத்தில் கூறப்படுகின்றது. பின்வரும் வசனத்தில் ஹராமானதை உண்ணாதீர்கள் என்று வெளிப்படுத்திக் கூறப்படுகின்றது.

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! (அல்குர்ஆன் 2:188)

மார்க்கம் ஓர் உத்தரவைப் பிறப்பிக்கின்ற போது, அதற்கு நேர்மாறானதைச் செய்யக்கூடாது என்ற தடையும் அதில் அடங்கியிருக்கின்றது என்பதற்கு இந்தஎடுத்துக்காட்டுகள்.

எனவே வாழ்க்கை சார்ந்த விஷயங்களாக இருந்தாலும் ஓர் உத்தரவு வந்து விட்டால்அதில், தடையிருக்கிறதா? என்று கேட்கக் கூடாது. அது அர்த்தமற்ற கேள்வியாகி விடும்; கேலிக் கூத்தாகி விடும்.

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! அல்குர்ஆன் 7:31

இப்படிக் கூறும் போது, நிர்வாணமாகப் பள்ளிக்கு வருவதற்குத் தடை இருக்கிறதா?என்று சிந்திப்பவர் எவரும் கேட்க மாட்டார்கள். எனவே இந்த விளக்கத்தின்படி, பெண் வீட்டு விருந்து என்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுக்கு நேர்மாற்றமான நடைமுறை; அது ஒரு மறைமுக வரதட்சணை. இந்த அடிப்படையில் இது ஒழித்துக்கட்டப்பட வேண்டிய ஒரு சமூகத் தீமை என்பதில் சந்தேகமில்லை.

- ஏகத்துவம், நவம்பர் 2009