செவ்வாய், 1 டிசம்பர், 2015

அலீக்கு வந்த வஹீ?


ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -15)

அலீக்கு வந்த வஹீ?

அபூஉஸாமா

மலக்குகள் மற்றும் இறைத் தூதர்களை அவமதிப்பது யூதர்களின் இரத்தத்தில் ஊறிய ஒரு கொடிய உணர்வு. அந்த உணர்வைத் தங்கள் இரத்தமாகக் கொண்டவர்கள் தாம் ஷியாக்கள். அதனால் தான் அவர்கள் வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களை அவமதிக்கிறார்கள் என்பதைக் கடந்த தொடரில் கண்டோம்.

அது போல் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களையும் அவமதிக்கிறார்கள்; மட்டம் தட்டுகிறார்கள். அலீயை உயர்த்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தாழ்த்துகிறார்கள். அந்தப் பட்டியலில் இடம் பெறும் ஒரு செய்தியைப் பாருங்கள்.

கைபர் வெற்றியை அறிவிக்கையில் அபூராஃபி கூறியதாவது: (கைபரை நோக்கி) அலீ சென்றார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். காலையில் அவர் வெற்றியடைந்து மக்களுக்கு மத்தியில் நீண்ட நேரம் நின்றார். தன்னுடைய இறைவனுடன் அலீ ரகசியமாக உரையாடுகின்றார் என மக்கள் பேசிக் கொண்டனர். கொஞ்ச நேரம் அவ்வாறு நின்றதும் வெற்றி கொண்ட நகரத்தின் பொருட்களை எடுக்கும்படி உத்தரவிட்டார். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் உத்தரவிட்டபடியே அலீ மக்களிடம் நின்றார். அல்லாஹ், அலீயிடத்தில் ரகசியமாக உரையாடுகின்றான் என்று மக்களில் ஒரு சிலர் பேசிக் கொண்டனர் என்று சொன்னேன். ஆம்! அபூராஃபியே! தாயிப் நாளின் போதும், தபூக்கின் கணவாய் நாளின் போதும் ஹுனைன் நாளின் போதும் அல்லாஹ் அலீயிடம் ரகசியமாக உரையாடினான் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நூல்: பஸாயிருத் தரஜாத்

ஷியா இமாம்களால் அறிவிக்கப்படும் செய்தி இது!

இத்துடன் மற்றொரு செய்தியையும் இங்கு பார்ப்போம்.

என்னைப் போன்ற ஒருவரை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அவரை வைத்து அல்லாஹ், கைபரை வெற்றி கொள்ளச் செய்வான். சாட்டை தான் அவருடைய வாள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் மக்களிடம் தெரிவித்ததும் மக்களுக்கு அவர் மீது மரியாதை ஏற்பட்டது. மறுநாள் காலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீயை அழைத்து, நீ தாயிஃபுக்குச் செல் என்று கட்டளையிட்டார்கள். அலீ புறப்பட்டுச் சென்ற பின்னர், நீங்களும் தாயிஃபுக்குச் செல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிட்டான். நபி (ஸல்) அவர்கள் தாயிஃபுக்குச் சென்ற போது அலீ (ரலி) மலையின் உச்சியில் நின்று கொண்டிருந்தார்கள். அவரை நோக்கி நபி (ஸல்) அவர்கள், நில்லுங்கள் என்று கூறினார்கள். அப்போது ஒரு பேரிறைச்சல் சப்தத்தைச் செவியுற்றோம். அல்லாஹ்வின் தூதரே! இது என்ன? என்று வினவப்பட்டது. அல்லாஹ் அலீயுடன் ரகசியமாக உரையாடுகின்றான் என்று பதிலளித்தார்கள்.

இவ்வாறு அபூஅப்தில்லாஹ் வாயிலாக அறிவிக்கப்படுகின்றது.

நூல்: பஸாயிருத் தரஜாத்

இவ்விரு செய்திகளில் இருபெரும் அற்புதங்களை (?) இந்த யூத வாரிசுகள் அவிழ்த்து விடுகின்றனர்.

1. நபி (ஸல்) அவர்கள் அலீயை தாயிஃபுக்கு அனுப்பி வைத்ததால், அவரைப் பின்தொடர்ந்து நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பி வைக்கின்றான்.

2. அல்லாஹ்வின் தூதரைப் போலவே அலீக்கு வஹீ வருகின்றது. அதிலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ வரும் போது எழாத பேரிறைச்சல், வெடிச் சப்தங்கள், இடி முழக்கங்கள் எல்லாம் அலீக்கு வஹீ வரும் போது ஏற்படுகின்றன என்ற பிரம்மாண்டத்தைக் காட்டுகிறார்கள்.

அதையும் நபி (ஸல்) அவர்களே சொன்னார்கள் என்பது போல் சித்தரித்து, நபி (ஸல்) அவர்களை இரண்டாம் தரத்தில் நிறுத்துகின்றார்கள் இந்த ஷியா பாவிகள்.

முஹம்மத் (ஸல்) அவர்களே முதன்மையானவர்

எள்ளளவு, எள் முனையளவு ஈமான் உள்ள எந்த முஸ்லிமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட (இப்ராஹீம் நபி தவிர) மனித ஜின் இனத்தில் மேலானவர், அல்லது அவர்களுக்கு நிகரானவர் இருக்கின்றார் என்று ஒரு போதும் நம்ப மாட்டார். இந்த ஷியாக்களோ அலீயை நபிக்கு இணையானவர் என்ற வட்டத்தைத் தாண்டி மேலானவர் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றனர். இது திருக்குர்ஆனுக்கு நேர் எதிரான கருத்தாகும்.

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்.

அல்குர்ஆன் 33:6

இப்படியோர் உயர் தகுதியைப் பெற்ற முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இரண்டாம் தகுதியைக் கொடுப்பவர்கள் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்?

அகிலத் தூதர்

(முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம்.

அல்குர்ஆன் 34:28

(பொய்யையும் உண்மையையும்) பிரித்துக் காட்டும் வழி முறையை அகிலத்தாருக்கு எச்சரிக்கை செய்யக் கூடியதாக தனது அடியார் மீது அருளியவன் பாக்கியமானவன்.

அல்குர்ஆன் 25:1

அகிலத்தின் அருட்கொடை

(முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.

அல்குர்ஆன் 21:107

இவையெல்லாம் முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த மனித குலத்திலேயே சிறந்தவர்கள் என்பதற்குரிய அல்குர்ஆனின் அழகிய சான்றுகளாகும்.

மனித குலத் தலைவர்

நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 3340)

முஹம்மத் (ஸல்) அவர்கள் மனித குலத் தலைவர் என்பதை விளக்குவதுடன், அவர்கள் ஏனைய நபிமார்களை விடவும் சிறந்தவர் என்பதையும் இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. இம்மாபெரும் தகுதியைப் பெற்ற முஹம்மத் (ஸல்) அவர்களைத் தான் இந்த ஷியாக்கள் அலீயை விடத் தாழ்த்தி மட்டம் தட்டுகிறார்கள். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

இந்த உம்மத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட வேறு யாரையும் உயர்த்துபவன் ஒரு முஃமினாக இருக்க முடியாது. ஷியாக்கள் இன்னோர் அக்கிரமத்தையும் இங்கு நிலைநாட்டுகின்றனர். அது, அலீக்கும் வஹீ வருகின்றது என்று அவர்கள் குறிப்பிடுவதாகும்.

இந்த நம்பிக்கை கொண்டவன் ஒருபோதும் முஃமினாக, இறை நம்பிக்கையாளனாக இருக்க முடியாது. ஏனெனில் இது குர்ஆன், ஹதீசுக்கு நேர் எதிரான சிந்தனையும் கருத்துமாகும்.

4:163, 12:3, 13:30, 16:123, 17:73, 17:86, 35:31, 42:7, 42:13, 42:53 இன்னும் இது போன்ற வசனங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதைப் பற்றிக் கூறுகின்றன.

வஹீயில் பங்காளி இல்லை

யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார்.

அல்குர்ஆன் 2:97

ஜிப்ரயீல் (அலை) அவர்கள், முஹம்மத் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இந்தத் திருக்குர்ஆனை இறக்கியதாக இந்த வசனம் கூறுகின்றது.

முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 33:40

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாம் இறுதி நபி என்று திருக்குர்ஆன் அறுதியிட்டுக் கூறுகின்றது. முஹம்மத் (ஸல்) அவர்களின் வஹீயில் எந்தப் பங்காளியும் இல்லை என்று அடித்துச் சொல்கின்றது.

இறுதித் தூதர்

தாம் இறைத் தூதர், தம்மைத் தவிர வேறு யாருக்கும் தூதுச் செய்தியில் பங்கும் இல்லை, பாகமும் இல்லை என்று நபி (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்துகின்றார்கள்.

பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத் தூதர்கள் இருந்தனர். இறைத் தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத் தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத் தூதரும் (வரப் போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: புகாரி 3455

கடைசிக் கல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு ஆச்சரியமடைந்து, இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா? என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்களில் இறுதியானவன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: புகாரி 3535

தம்மைக் கடைசியாக வைக்கப்பட்ட செங்கலுக்கு உவமையாக்கி, தமக்குப் பிறகு நபி வரப் போவதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

மேற்கண்ட வசனங்கள், ஹதீஸ்கள் அனைத்துமே அலீ (ரலி) அவர்களுக்கோ அல்லது வேறு யாருக்குமோ வஹீ வருகின்றது என்று நம்புபவன் இறை மறுப்பாளன் என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

அலீயிடம் ஜிப்ரீல் வருவாரா?

அலீக்கு வஹீ வர வேண்டுமாயின் அது ஜிப்ரீல் வழியாகத் தான் வர வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் வருகையளித்து வஹீ அறிவிக்கும் ஜிப்ரீல் அலீக்கு வருவாரா? ஒரு போதும் வர மாட்டார்.

திருக்குர்ஆன் 53வது அத்தியாயத்தில் நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரயீலைச் சந்தித்த அந்தச் சந்திப்பை மாபெரும் ஓர் அற்புதம் என்று அல்லாஹ் கூறுகின்றான். அந்த ஜிப்ரயீல், அலீயிடம் வருகின்றார்; வஹீ அறிவிக்கின்றார் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இந்த நாசகர்கள் இவ்வாறு சொல்வதில் ஆச்சரியமில்லை. இவர்களது இமாம்களுக்கே ஜிப்ரயீல், மீகாயீல் போன்ற மலக்குகள் வருகையளிக்கின்றார்கள் என்று இவர்கள் சொல்வதைக் கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். எனவே அலீயிடம் ஜிப்ரயீல் வருகின்றார் என்று இவர்கள் சொல்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

அதிலும் அல்லாஹ் அலீயிடம் உரையாடுகின்றான் என்று சொல்வது இறை மறுப்பின் உச்சக்கட்டமாகும்.

வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 42:51

அல்லாஹ் கூறுகின்ற இந்த மூன்று வரையறைகளைத் தாண்டி அல்லாஹ் அலீயிடம் ரகசியமாக உரையாடுகின்றான் என்று சொல்கின்றனர். இதற்கு அரபியில், யுனாஜீ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர் இந்தக் குறுமதியாளர்கள். ஒருவர் மற்றொருவருடன் ரகசியம் பேசும் போது இந்த வார்த்தை பயன்படுத்தப்படும்.

அலீயுடன் அல்லாஹ் ரகசியம் பேசுகின்றான் என்று இவர்கள் கூறுவதன் மூலம் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறும் வரையறையை அவனே மீறி விட்டான் என்று அல்லாஹ்வின் மீதே ஓர் அபாண்டத்தைச் சொல்கின்றனர். அத்துடன், இந்த உயர் தகுதியை முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்காமல் அலீக்கு மட்டும் அல்லாஹ் வழங்கியிருக்கிறான் என்றும் சொல்ல வருகின்றார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ் மேற்கண்ட மூன்று வரையறையுடன் தான் பேசியிருக்கின்றான். இது தான் உண்மை! இந்த வரையறைக்கு அப்பாற்பட்டு அலீயிடம் அல்லாஹ் ரகசியமாக உரையாடினான் என்று பகிரங்கப் பொய்யைக் கூறி, இதன் மூலம் முஹம்மத் (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்தவர் என்ற கருத்தை ஷியாக்கள் நிலைநாட்டுகின்றனர்.

இந்த அடிப்படையில் ஷியாக்கள் கடைந்தெடுத்த காஃபிர்கள் என்பதில் சந்தேகமில்லை. இவர்களைக் காஃபிர்கள் என்று நாம் மட்டுமல்ல! தமிழகத்தைச் சேர்ந்த சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் உலமாக்களும் சொல்கின்றனர்.

ஆனால் அந்த சு.ஜ. உலமாக்களும் அதே கொள்கையைத் தான் கொண்டிருக்கிறார்கள் என்பதை அடுத்த தொடரில் காண்போம்.