செவ்வாய், 1 டிசம்பர், 2015

மவ்லிது ஓதும் மவ்லவிகள் ஷியாக்களே!


ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -4)

மவ்லிது ஓதும் மவ்லவிகள் ஷியாக்களே!

அபூஉஸாமா

ஆன்றோர்கள், சான்றோர்கள் வீற்றிருக்கும் அவையில் முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி முழங்கும் முழக்கம் இதோ:

எனக்கு ஸலாம் கூறாமல் சூரியன் (தினந்தோறும்) உதிப்பதில்லை. உதிக்கின்ற அந்தச்சூரியன் ஊர், உலகத்தில் நடக்கவிருக்கும் விவரங்களை என்னிடம் தெரிவிக்காது விடுவதில்லை. இவ்வாறு உதிக்கும் சூரியன் மட்டுமல்ல! உதிக்கின்ற ஒவ்வொரு ஆண்டும் என்னிடம் வந்து தன்னுள் நிகழவிருப்பதைத் தெரிவித்து விடுகின்றன. இவ்வாறு மாதங்களும், வாரங்களும், நாட்களும் தமக்குள் நடக்கவிருப்பதை என்னிடம் வந்து அறிவித்து விடுகின்றன. அவை தமக்குள் நடக்க இருக்கும் ரகசியங்களை கொட்டி விடுகின்றன.

என் இறைவனின் கண்ணியத்தின் மீது ஆணையாக! நல்லவர்கள், கெட்டவர்கள் அனைவரும் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றனர். என் சமூகத்தின் முன்னால் நிறுத்தப் படுகின்றனர்.

என் கண்ணொளி என்றென்றும் நிரந்தரமான பதிவேட்டில் பதிந்தே இருக்கின்றது. அல்லாஹ்வின் ஞானக் கடலில் நான் மூழ்கிப் போயிருக்கிறேன். மக்கள் காட்சியளிக்கும் (மறுமை) நாளில் நான் அல்லாஹ்வின் ஆதாரம். நான் நபி (ஸல்) அவர்களின் தனிப் பிரதிநிதி! அவர்களுடைய அடுத்த வாரிசு!

இது தான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் முழக்கம் என்று முஹ்யித்தீன் மவ்லிது குறிப்பிடுகிறது.

அகில உலகத்தின் ஆட்சி கொடுக்கப்பட்ட இறைத் தூதர் சுலைமான் அவர்களுக்குக் கூட அல்லாஹ் சூரியனை வசப்படுத்திக் கொடுக்கவில்லை. சுழலும் அந்தச் சூரியன் முஹ்யித்தீன் முன்னால் வந்து நின்று ஸலாம் சொல்கிறதாம். அத்துடன் நிற்கவில்லை இந்தக் கப்ஸா புராணம்! மக்கள் எல்லோரும் இவருக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறார்களாம்.

இவர் என்ன? படைப்பினத்தில் அல்லாஹ்வால் முப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கின்றாரா? மக்கள் இவர் முன்னால் நிறுத்தப்படுவதற்கும், அவர்களை இவர் பார்வையிடுவதற்கும் அல்லாஹ்வால் தனி அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதா?

அதுவும் இவர் இறந்து பல நூறு ஆண்டுகள் பறந்து போனதற்குப் பின்னால் இப்படி ஒரு பார்வையிடலா?

இப்படிப் பிதற்றும் முஹய்யித்தீன் மவ்லிது தனது பொய்யை இத்துடன் நிறுத்தவில்லை. முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் பார்வை, பதிவேட்டில் பதிந்திருக்கிறதாம். இவ்வாறு கொழுப்பேறிய வார்த்தைகளைக் கொப்பளிக்கிறது இந்த மவ்லிது! இதை நோக்கித் தான் நமது விமர்சன வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றோம்.

"நான் வானங்கள், பூமியில் உள்ளவற்றை அறிகின்றேன்; சுவனத்தில் உள்ளதையும், நரகத்தில் உள்ளதையும் அறிகின்றேன். இதுவரை நிகழ்ந்ததையும், இனி நிகழவிருப்பதையும் நான் அறிவேன்'' என அபூ அப்தில்லாஹ் (ஷியாக்களின் இமாம்) கூறுகின்றார்.

நூல்: அல்காஃபீ ஃபில் உசூல் பக்கம்: 124

இந்த நச்சுக் கருத்தைத் தான் முஹ்யித்தீன் மவ்லிது பறை சாற்றுகின்றது. இதைத்தான் சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் வீடு வீடாகச் சென்று ஓதி வருகின்றனர்.

ஷியாக்களின் இந்த நச்சுக் கருத்து தான் ஷாஹுல் ஹமீது அண்டு சன்ஸ் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட மவ்லிதுக் கிதாபுகளில் அச்சுக் கோர்க்கப்பட்டிருக்கின்றது.

ஷியாக்களின் கருத்துக்களையும், அவர்களின் வேர்களான யூதர்களின் கருத்துக்களையும் வாந்தி எடுப்பதன் மூலம் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று கூறிக் கொள்வோர் பக்கா ஷியாவினர் தான் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகின்றது.

இந்த மவ்லிதில் படிந்திருக்கும் ஷியாக்களின் படிமானங்களையும், அதன் மீது சுன்னத்வல் ஜமாஅத்தினர் கொண்டிருக்கும் பிடிமானங்களையும் இன்னும் தொடர்ந்து பார்ப்போம்.

அபுல் முளஃப்பர் கூறியதாக அபூ மஸ்ஊத் அறிவிப்பதாவது: (இந்தக் குப்பைக்கு அறிவிப்பாளர் வேறு வேண்டிக் கிடக்கிறது!)

"நான் பணியாளர்களுடன் எண்ணூறு தீனார் பணத்தை எடுத்துக் கொண்டு சிரியாவுக்குச் செல்கிறேன்'' என்று ஷைக் ஹம்மாதிடம் விடை பெறும் விதமாக அபுல் முளஃப்பர் தெரிவிக்கின்றார். (சிஷ்யர்கள் பயணம் செய்யும் போது அதை ஷைகுகளிடம் தெரிவிப்பது ஒரு முக்கியமான வழிமுறையாம்)

அதற்கு ஹம்மாத், "நீ பயணம் செய்ய வேண்டாம். அவ்வாறு பயணம் செய்தால் நீ கொல்லப்பட்டு, உன்னுடைய பொருளும் கொள்ளை அடிக்கப்பட்டு விடும்'' என்று தெரிவிக்கின்றார். ஷைகின் இந்த முன்னறிவிப்பைக் கேட்டு மனம் உடைந்து போன அபுல் முளஃப்பர் சென்று கொண்டிருக்கின்றார். வழியில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவரைக் கண்டு, ஹம்மாத் அவரிடம் கூறியதை அப்படியே தெரிவிக்கின்றார். (அபுல் முளஃப்பருக்கு இது அதிர்ச்சி அளிக்கிறது. ஹம்மாத் தன்னிடம் கூறியதை முஹ்யித்தீன் அப்படியே வார்த்தை பிசகாது கூறுகின்றாரே என்று பிரமித்து விடுகின்றார்)

அப்போது முஹ்யித்தீன் அபுல் முளஃப்பரை நோக்கி, "நீ செல்! வெற்றிகரமாக இலாபம் ஈட்டித் திரும்புவாய். (ஹம்மாது சொன்னது போல் நீ கொல்லப்பட மாட்டாய்) உன்னையும், உனது பொருளாதாரத்தையும் காப்பது என் கடமை'' என்று குறிப்பிடுகின்றார். அது போன்றே அபுல் முளஃப்பர் விரைந்து செல்கின்றார். முதலை விட அதிகமாக முன்னூறு தீனார் லாபம் ஈட்டுகின்றார்.

வியாபாரத்தில் இப்படியொரு லாபத்தை அடைந்த அவர் ஒருநாள் தன் இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்குச் செல்ல நேரிடுகின்றது. தான் சம்பாதித்த அந்தப் பொருளை கவனக்குறைவாக அங்குள்ள மணற்பரப்பில் வைத்து விட்டுச் செல்கின்றார். தன்னுடைய தேவையை நிறைவேற்றி விட்டுத் திரும்பும் போது பணத்தை மறந்து வைத்து விட்டு, தான் தங்கும் வீட்டிற்கு வந்து விடுகின்றார். தூக்கம் மேலிட்டு, தூங்கியும் விடுகின்றார்.

அப்போது ஒரு கனவு காண்கிறார். கனவில் அவர் ஒரு வியாபாரக் கூட்டத்தில் வரும் போது கொள்ளையர்கள் அந்தக் கூட்டத்தைக் கொன்று விடுகின்றனர். இவரையும் ஒருவர் வந்து ஈட்டியால் தாக்கிக் கொன்று விடுகின்றார்.

இவ்வாறு கனவு கண்டதும் திடுக்கிட்டு விழிக்கின்றார். இவ்வாறு விழித்துப் பார்க்கும் போது அவருடைய கழுத்தில் இரத்தக் கறை இருப்பதைப் பார்க்கின்றார். அவரது உடல் தாக்குதலுக்கு உள்ளானது போன்ற கடுமையான வலியையும், வேதனையையும் உணர்கின்றார். உடனே அவருக்குத் தன்னுடைய பணம் நினைவுக்கு வருகின்றது. பணம் வைத்த இடத்தை நோக்கி விரைகிறார். அவர் வைத்த இடத்தில் பணம் அப்படியே இருந்தது. அதை எடுத்துக் கொண்டு பாக்தாத் வந்து சேர்கிறார்.

பாக்தாத் வந்ததும் அவரது உள்ளத்தில், முதன் முதலில் யாரைச் சந்திப்பது? என்ற கேள்வி எழுகின்றது. ஷைக் ஹம்மாதைச் சந்திக்கலாம்; காரணம் அவர் வயதில் மூத்தவர்; அப்துல் காதிர் ஜீலானியைச் சந்திக்கலாம்; காரணம் அவர் சொன்னது தான் சரியாக இருக்கின்றது என்று அபுல் முளஃப்பர் தடுமாறிக் கொண்டிருக்கிறார். எதிரில் ஷைகு ஹம்மாதே வந்து விடுகிறார். அவர் அபுல் முளஃப்பரின் மன ஓட்டத்தைஅப்படியே புரிந்து கொண்டு, "நீ முதலில் அப்துல் காதிர் ஜீலானியையே சந்திப்பாயாக! ஏனெனில் அவர் உனக்காக அல்லாஹ்விடம் பதினேழு தடவை முறையிட்டார். (அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்) அவர் அம்முறையீட்டை எழுபது தடவையாக நிறைவு செய்தார். கடைசியில் உன் மீது நேரடியாக, நிஜமாகவே நிகழவிருந்த கொலை, கொள்ளையானது கனவிலும், மறதியிலும் நிகழ்வதாக மாறியது'' என்று ஷைகு ஹம்மாத், தடுமாற்றத்திலிருந்த அபுல் முளஃப்பருக்கு விளக்கினார்.

இது முஹ்யித்தீன் மவ்லிதில் அவரைப் பற்றி அளக்கப்பட்ட கதையாகும். இது உரையாகவும், கவிதையாகவும் அம்மவ்லிதில் இடம் பெற்றுள்ளது.

இங்கு நாம் பார்க்க வேண்டிய விஷயங்கள்:

1. அபுல் முளஃப்பரைப் பார்த்து ஹம்மாத், செல்லாதே என்று கூறுகிறார். இவ்வாறு அவர் கூறியதற்குக் காரணம் அவருக்குப் பதிவேட்டில் உள்ளது தெரிந்திருக்கின்றது.

2. அபுல் முளஃப்பர், ஹம்மாத் ஆகிய இருவருக்கு மத்தியில் மட்டுமே நடந்தவிபரத்தை அல்லாஹ் மட்டுமே அறிவான். ஆனால் அதை அப்படியே அப்துல் காதிர்ஜீலானி அறிகிறார்.

3. ஹம்மாத், போகாதே என்று சொன்னார்! நான் சொல்கிறேன், நீ போ! என்று முஹ்யித்தீன் உத்தரவிடுகின்றார். அவரிடம் விதியை மாற்றுவதற்கு உத்தரவாதமும் கொடுக்கின்றார்.

4. இலாபம் ஈட்டி விட்டு, பாக்தாதுக்குள் நுழைந்து யாரைப் பார்ப்பது என்று அபுல் முளஃப்பர் மனதுக்குள் தத்தளிக்கின்றார், தடுமாறுகின்றார். இந்தத் தவிப்பை, அபுல் முளஃப்பரின் உள்ளத்தில் நடக்கும் இந்தப் போராட்டத்தை, எதிரில் வந்த ஹம்மாத் அறிந்து கொண்டு, நீ முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியைப் போய் பார் என்று கூறுகிறார்.

ஷைகு ஹம்மாத், ஷைகு முஹ்யித்தீன் ஆகிய இருவரில் ஷைகு முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி தான் மிகவும் உயர்ந்தவர் என்று நிரூபணம் ஆனாலும், இரண்டு பேருமே பதிவேட்டில் உள்ளதை சர்வ சாதாரணமாகப் பார்க்கிறார்கள். உள்ளத்தில் தோன்றுவதையும் அப்படியே பார்க்கிறார்கள். அவற்றை எடுத்துச் சொல்லவும் செய்கிறார்கள்.

மறைவானவற்றை அப்படியே அறிகின்ற இந்த அற்புத ஆற்றல் (?) இவ்விரு ஷைகுகளுக்கும் நிறையவே உள்ளது என்பதை இந்தக் கதையிலிருந்து நாம் மிகச் சாதாரணமாக விளங்கிக் கொள்கிறோம்.

நாம் அல்லாஹ்வின் பூமியில் அவனது நம்பிக்கை நட்சத்திரங்கள். நம்மிடம் (மக்களுக்கு வரும்) சோதனைகள், மரணங்கள் பற்றிய ஞானங்கள் இருக்கின்றன. அரபியர்கள் தலைமுறை இஸ்லாத்தில் உருவாக்கம் பற்றிய ஞானமும் நம்மிடம்இருக்கிறது.

ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரது உள்ளத்தில் குடியிருப்பது இறை நம்பிக்கையின் தன்மையா? அல்லது நயவஞ்சகத் தன்மையா? என்று நாம் அறிந்து கொள்வோம். நம்முடைய ஷியாக்களின் பெயர் களும் அவர்களது தந்தைமார்களின் பெயர்களும் பதியப்பட்டவர்களாவர். அல்லாஹ் நம்மிடமும் அவர்களிடமும் வாக்குறுதி எடுத்திருக்கிறான்.

அல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம்: 223

மறைவான ஞானம் பற்றி ஷியாக்கள் கொண்டிருக்கும் கருத்துக்கள் இவை. இதற்கும்முஹ்யித்தீன் மவ்லிதில் இடம் பெற்றுள்ள இந்தக் கதைகளுக்கும் என்ன வித்தியாசம்?

முஹ்யித்தீன் அப்துல் ஜீலானிக்கும், ஹம்மாதுக்கும் மறைவான ஞானம் இருப்பதாக சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த மவ்லவிகள் சொல்கிறார்கள். அவர்கள் ஓதுகின்ற, தூக்கிப் பிடிக்கின்ற மவ்லிதுக் கிதாபு சொல்கிறது. இதை ஒவ்வொரு ஆண்டும் ரபீஉல் ஆகிர் மாதத்தில் ஓத வேண்டும் என்றும் இந்த மவ்லவிகள் சொல்கிறார்கள். மக்களும் அதை நம்பி இவர்களை ஓத அழைக்கிறார்கள். இவர்களும் போய் ஓதுகின்றனர். அப்படியானால் இவர்கள் யார்? சுன்னத் வல் ஜமாஅத்தினர் அல்ல! பக்கா ஷியாக்கள் தான். யூதர்களின் கள்ளப் பிள்ளையான ஷியாக்களின் பரம்பரை தான் இவர்கள்!

இவர்களுக்கு என்ன நெஞ்சழுத்தம் என்று பாருங்கள்!

உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ்வே அறிவான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

கவனத்தில் கொள்க! அவனிடமிருந்து மறைத்துக் கொள்வதற்காக தமது நெஞ்சுகளை அவர்கள் மூடிக் கொள்கின்றனர். கவனத்தில் கொள்க! அவர்கள் தமது ஆடைகளால் மூடிக் கொண்டாலும் அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.

அல்குர்ஆன் 11:5

"அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளையும், உங்களிடம் அவன் செய்த உடன்படிக்கையையும், "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்று நீங்கள் கூறியதையும் எண்ணிப் பாருங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உள்ளங்களில் இருப்பதை அல்லாஹ் அறிந்தவன்.

அல்குர்ஆன் 5:7

(முஹம்மதே!) உமது கனவில் அவர்களை அல்லாஹ் குறைந்த எண்ணிக்கையினராகக் காட்டியதை எண்ணிப் பாருங்கள்!. அவர்களை அதிக எண்ணிக்கையினராக அல்லாஹ் உமக்குக் காட்டியிருந்தால் தைரியம் இழந்திருப்பீர்கள். இவ்விஷயத்தில் முரண் பட்டிருப்பீர்கள். எனினும் அல்லாஹ் காப்பாற்றினான். உள்ளங்களில் உள்ளவற்றை அவன் அறிந்தவன்.

அல்குர்ஆன் 8:43

(நம்மை) மறுத்தோரின் மறுப்பு உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடமே உள்ளது. அவர்கள் செய்ததை அவர்களுக்கு நாம் அறிவிப்போம். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.

அல்குர்ஆன் 31:23

வானங்களிலும் பூமியிலும் உள்ள மறைவானவற்றை அல்லாஹ் அறிபவன். அவன் உள்ளங்களில் உள்ளதையும் அறிந்தவன்.

அல்குர்ஆன் 35:38

கண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான்.

அல்குர்ஆன் 40:19

"அல்லாஹ்வின் மீது இவர் இட்டுக்கட்டி விட்டார்'' எனக் கூறுகிறார்களா? (முஹம்மதே!) அல்லாஹ் நாடினால் உமது உள்ளத்தில் முத்திரையிடுவான். அல்லாஹ் பொய்யை அழிக்கிறான். தனது கட்டளைகளால் உண்மையை நிலைக்கச் செய்கிறான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.

அல்குர்ஆன் 42:24

இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். உள்ளங்களில் உள்ளவற்றையும் அவன் அறிந்தவன்.

அல்குர்ஆன் 57:6

வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அவன் அறிவான். நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்து வதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.

அல்குர்ஆன் 64:4

உங்கள் கூற்றை இரகசிய மாக்குங்கள்! அல்லது அதைப் பகிரங்கமாகக் கூறுங்கள்! உள்ளங்களில் உள்ளதையும் அவன் அறிந்தவன்.

அல்குர்ஆன் 67:13

இந்த வசனங்களும் இன்னும் இது போன்ற ஏராளமான வசனங்களும், உள்ளத்தில் உள்ளதை அறியும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு இருப்பதைக் கூறுகின்றன. ஆனால் இந்த ஆற்றலை முஹ்யித்தீனுக்கும், ஹம்மாதுக்கும் தூக்கிக் கொடுக்கின்றனர், மவ்லிது ஓதும் மவ்லவிகள். அப்படியென்றால் இவர்கள் யார்? கடைந்தெடுத்த ஷியாக்கள் தான்.