செவ்வாய், 3 மார்ச், 2015

பெருநாள் தொழுகையின் சட்டங்கள்

பெருநாள் தொழுகையின் சட்டங்கள்

ஷவ்வால் பிறை ஒன்றிலும் துல்ஹஜ் பிறை 10 அன்று இஸ்லாமியர்களின் பெருநாளாக நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். அன்றைய தினம் சிறப்புத் தொழுகையை இரண்டு ரக்அத்கள் நிறைவேற்றுமாறும் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். 

தொழுகை நேரம்

சூரியன் உதித்த பின்னர் இத்தொழுகைகள் நிறைவேற்ற வேண்டும். அதிக கால தாமதம் செய்யக் கூடாது. 

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன்முதலில் தொழுகையைத் துவக்குவார்கள். 

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள் : புகாரீ (956), முஸ்லிம் (1472?) 

இன்றைய தினத்தில் நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம் . அதன் பின் அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டதை நான் செவியுற்றேன். 

அறிவிப்பவர் : பரா (ரலி), நூல்கள் : புகாரீ (951),முஸ்லிம் (3627) 

திடலில் தொழுகை

இரு பெருநாள் தொழுகையையும் திடலில்தான் தொழவேண்டும். மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம் என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், (புகாரீ 1190) பெருநாள் தொழுகையை திடலில் தொழுதுள்ளதால் திடலில் தொழுவதின் முக்கியதுவத்தை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநான் தொழுகைகளையும் திடலியே தொழ வேண்டும். 

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன்முதலில் தொழுகையைத் துவக்குவார்கள். 

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள் : புகாரீ (956), முஸ்லிம் (1472?) 

பெருநாள் தொழுகையில் பெண்கள்

பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளவேண்டும். மேலும் தொழுகை கடமையில்லாத மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் திடலுக்கு வரவேண்டும். தொழுகையைத் தவிர மற்ற நல்ல காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும். 

இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்குப்) போகச் சொல்லுமாறு நாங்கள் கட்டையிடப்பட்டோம். அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிகள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும். தொழும் இடத்தை விட்டு மாதவிடாய் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும். 

நபி (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்ளவதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது? என்றார். அதற்கு அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள் : புகாரீ (351), முஸ்லிம் (1475?) 

ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்

பெருநாளுக்கு செல்லும் போது ஒரு வழியிலும் திரும்பும் போது மற்றொரு வழியிலும் திரும்பும் வகையில் திடலுக்கு செல்வதை அமைத்து கொள்வது நபி வழியாகும். 

பெருநாள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள். 

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : புகாரீ (986), 

தொழுகைக்கு முன் சாப்பிடுதல்

நோன்பு பெருநாள் தொழுகைக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டுவிட்டு தொழச் செல்வார்கள். 

சில பேரித்தம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்படமாட்டார்கள். 

அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல்கள் : புகாரீ (953), திர்மிதீ (498), இப்னுமாஜா (1744), அஹ்மத் (11820) 

நோன்பு பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள். 

அறிவிப்பவர் : புரைதா (ரலி), நூல் : இப்னுகுஸைமா (1426) 

சுன்னத்துகள்

இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின் சுன்னத்துகள் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைக்கு முன்னரும் பின்னரும் எந்த தொழுகையையும் தொழுததில்லை. 

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்கு) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும் பின்னும் எதையும் தொழவில்லை. 

அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ் (ரலி), நூல்கள் : புகாரீ (1431), முஸ்லிம் (1476?) 

பாங்கும் இகாமத்தும்

இரு பெருநாள் தொழுகைக்கும் மற்றத் தொழுகைகளைப் போல் பாங்கும் இகாமத்தும் கிடையாது. 

ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை பாங்கும் இகாமத்தும் இல்லாமல் இருபெருநாள் தொழுகையை நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுள்ளேன். 

அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி), நூல்கள் : முஸ்லிம் (1470?) திர்மிதீ (489), அபூதாவூத் (969), அஹ்மத் (19931) 

தொழும் முறை

மற்றத் தொழுகையைப் போல் இத்தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுவேண்டும். எனினும் முதல் ரக்அத்தில் ஸனா (அல்லாஹும்ம பாயித் பைனீ... என்ற அல்லது வஜ்ஜஹத்து வஜ்ஹிய லில்லதீ... என்ற துஆவை) ஓதிய பின்னர் அல்லாஹு அக்பர் என்று ஏழு தடவை இமாம் கூறுவார். பின்பற்றித் தொழுபவர்களும் ஏழு தடவை சப்தமின்றி கூறவேண்டும். பின்னர் ஸுரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்கள் ஓதி ருகூவு மற்றும் மற்ற தொழுகையில் செய்வதைப் போன்று ஏனைய காரியங்களைச் செய்வார். பின்னர் இரண்டாம் ரக்அத்திற்கு எழுந்தவுடன் ஸுரத்துல் பாத்திஹா ஓதுவதற்கு முன்னர் இமாம் ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூறுவார். பின்பற்றித் தொழுபவர்களும் சப்தமின்றி ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூறவேண்டும். பின்னர் மற்றத் தொழுகைகளைப் போல் ஸுரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்களை ஓதி தொழுகையை முடிப்பார். கூடுதல் தக்பீர் கூறும் போது தக்பீர்களுக்கு இடையில் ஓதுவதற்கு எந்த துஆவையும் நபி (ஸல்) கற்றுத்தரவில்லை. எனவே இடையில் எந்த துஆவும் ஓதக் கூடாது. 

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்கு) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும் பின்னும் எதையும் தொழவில்லை. 

அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ் (ரலி), நூல்கள் : புகாரீ (1431), முஸ்லிம் (1476?) 

நபி (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் பெருநாள் தொழுகையில் சொல்வார்கள். அதற்கு முன்னும் பின்னும் வேறு எதையும் தொழுததில்லை. 

அறிவிப்பவா : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல்கள் : அஹ்மத் (6401), இப்னுமாஜா (1268) 

நபி (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள். இவற்றை கிராத்திற்கு முன்பு கூறுவார்கள். 

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல்கள் : அபூதாவூத் (971), தாரகுத்னீ பாகம் : 2, பக்கம் 48, பைஹகீ (5968 


சுத்ரா (தடுப்பு)

இரு பெருநாள் தொழுகையிலும் திடலில் தொழும்போது இமாமிற்கு முன்னால் எதையாவது தடுப்பாக வைத்துக் கொள்ளவேண்டும். 

நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஒரு ஈட்டி நாட்டப்படும். நபி (ஸல்) அவர்கள் (அதை நோக்கித் தொழுவார்கள்) 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல்கள் : புகாரீ 9972), முஸ்லிம் (773?) 

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்காக) தொழும் திடலுக்கு புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பு கைத்தடி எடுத்துச் செல்லப்படுத் தொழும் இடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கித் தொழுவார்கள். 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல்கள் : புகாரீ (973), முஸ்லிம் (774?) 

மிம்பர்

வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் எப்படி மிம்பரில் இமாம் பயான் நிகழ்த்துவாரோ அதைப் போன்று இரு பெருநாள்களிலும் மிம்பரில் உரை நிகழ்த்துதல் இல்லை. தரையில் நின்றுதான் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும். இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். 

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவாôகள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். 

மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானுடன் நோன்புப் பெருநாள் தொழுகையையோ ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையோ தொழச் செல்லும்வரை மக்கள் இவ்வாறே கடைப்பிடித்து வந்தனர். (மர்வான் ஆட்சியில் ஒரு நாள்) நாங்கள் தொழும் திடலுக்கு வந்த போது கஸீர் பின் ஸல்த் என்பார் உருவாக்கிய மேடை ஒன்று அங்கே திடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் தொழுவதற்கு முன்பே அதில் ஏற முன்றார். நான் அவரது ஆடையை பிடித்து கீழே இழுத்தேன். 

அவர் என்னை இழுத்தர். முடிவில் அவர் மேடையில் ஏறித் தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்தாலானார். அப்போது நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (நபி வழியை) மாற்றிவிட்டீர்கள் என்று கூறினேன். 

அதற்கு மர்வான் நீ விளங்கி வைத்திருக்கும் நடைமுறை மலையேறிவிட்டது என்றார். நான் விளங்காத (இந்த புதிய) நடைமுறையை விட நான் விளங்கிய வைத்துள்ள நடைமுறை அல்லாஹ்வின் மீது ஆணையாக மிகச் சிறந்ததாகும் என நான் கூறினேன். 

அதற்கு மர்வான், மக்கள் தொழகைக்குப் பிறகு இருப்பதில்லை, எனவே நான் தொழுகைக்கு முன்பே உரையை அமைத்துக் கொண்டேன் என்று கூறினார். 

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள் : புகாரீ (956), முஸ்லிம் (1472?) 

அபூதாவூத் (963), இப்னுமாஜா (1265), அஹ்மத் (10651) ஆகிய நூல்களின் அறிவிப்பில் மர்வானே! நீ சுன்னத்திற்கு மாற்றம் செய்துவிட்டீர்! பெருநாள் தினத்தில் மிம்பரை கொண்டுவந்துள்ளீர், இதற்கு முன்னர் இவ்வாறு கொண்டுவரப்படவில்லை... என்று இடம் பெற்றுள்ளது. 

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று ஒரு உரையை நிகழ்த்தினார்கள் என்பதற்கே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. மேலும் மிம்பர் இல்லை எனும் போது இரண்டு குத்பாக்கள் இல்லை என்பதையும் தெளிவாக விளங்கலாம். 

தக்பீரும் பிரார்த்தனையும்

இரு பெருநாள்களிலும அல்லாஹ்வை பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும், மேலும் திடலில் தமது தேவைகளை வல்ல இறைவனிடம் முறையிட்டு கேட்க வேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும் மகத்துவம் உள்ளது. 

பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்யவேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள், ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். 

அறிவிப்பவர் : உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள் : புகாரீ (971),முஸ்லிம் (1474) 

அல்லாஹு அக்பர் என்று கூறுவதுதான் தக்பீர் ஆகும். பெருநாளைக்கு என நபி (ஸல்) அவர்கள் தனியான எந்த தக்பீரையும கற்றுத்தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை. மேலும் குறிப்பிட்ட வேளைகளில் சொல்லவேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை. எனவே அல்லாஹு அக்பர் என்றே கூற வேண்டும். தக்பீர்களை சப்தமிட்டு கூறக்கக் கூடாது. 

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர்ஆன் 7:205)