புதன், 4 மார்ச், 2015

மறுமை வெற்றிக்கு வழி

மறுமை வெற்றிக்கு வழி

பிரார்த்தனையை இறந்தவர்களால் கேட்கவும் பதில்தரவும் முடியாது

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அல்குர்ஆன் (27 : 80) 

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாகமாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. அல்குர்ஆன் (35 : 22) 

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுறமாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தரமாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அல்குர்ஆன் (35 : 14) 

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! அல்குர்ஆன் (72 : 18) 

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். அல்குர்ஆன் (46 : 5) 

அவ்லியாக்களில் மிகப்பெரிய அவ்லியா நமது தூதர் நபி (ஸல்) அவர்கள் தான். நாம் கூறும் சலாத்தை அவர்களால் கூட கேட்கமுடியாது. மலக்குமார்கள் தான் நாம் கூறும் சலாத்தை நபி (ஸல்) அவர்களுக்கு கொண்டு செல்கிறார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பூமியில் சுற்றிக்கொண்டிருக்கும் சில வானவர்கள் அல்லாஹ்விற்கு உள்ளனர். இவர்கள் என்னுடைய சமுதாயத்தினரிடமிருந்து சலாத்தை என்னிடத்தில் கொண்டுவருவார்கள். 

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நஸயீ (1265) 

ஒரு நல்லடியாரை அல்லாஹ் 100 வருடம் மரணிக்கச் செய்கிறான். பிறகு அவரை எழுப்பி எவ்வளவு காலம் தூங்கினாய் என்று கேட்டான். அதற்கு அந்த நல்லடியார் ஒரு நாள் அல்லது சிறிது 

நேரம் தூங்கியிருப்பேன் என்று கூறினார். 100 வருடம் தூங்கியிருந்தும் தான் எத்தனை நாள் தூங்கினோம் என்பது கூட அந்த நல்லடியாருக்குத் தெரியவில்லை. அவர் கொண்டு வந்த கழுதை இறந்து மட்கிப்போன செய்தி கூட அவருக்குத் தெரியவில்லை. இறைவன் கூறிய பிறகு தான் அவருக்குத் தெரிகிறது. 

அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. ''இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?'' என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்தான். ''எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?'' என்று கேட்டான். ''ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்'' என்று அவர் கூறினார். ''அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்து விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக்காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!'' என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்த போது ''அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்'' எனக் கூறினார். 

அல்குர்ஆன் (2 : 259) 

இறந்தவர்களால் உதவிசெய்ய முடியாது


அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. அல்குர்ஆன் (7 : 197) 

அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். அல்குர்ஆன் (35 : 13) 

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள். அல்குர்ஆன் (22 : 73) 

இறந்துவிட்டவர் நல்லடியாராக இருந்தால் அவர் புதுமாப்பிள்ளை உறங்குவதைப் போல் உறங்குவார். கியாமத் நாள் வரைக்கும் உறங்கிக்கொண்டிக்கும் நல்லடியார்களுக்கு நாம் கேட்கும் பிரார்த்தனை எப்படி விளங்கும்.? நமக்கும் இறந்துவிட்டவர்களுக்கும் மத்தியில் வலுவான திரையை அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கிறான். அல்லாஹ் ஏற்படுத்திய இந்தத் திரையை கிழித்துக்கொண்டு நம்முடைய சப்தம் தூங்கிக்கொண்டிருக்கும் நல்லடியார்களின் காதில் நிச்சயம் விழாது. 

(நல்லவர்களுக்கு கப்ரில்) நன்றாக உறங்குங்கள் என்று சொல்லப்படும். 

அறிவிப்பவர் : அஸ்மா (ரலி) புகாரி (7287) 

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது ''என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது. 

அல்குர்ஆன் (23 : 100) 

மக்கத்து காஃபிர்கள் ஏன் காஃபிரானார்கள்


வானம் பூமி மலைகள் இவற்றையெல்லாம் படைத்தது அல்லாஹ் தான் என்பதை மக்கத்து காஃபிர்கள் நன்கு விளங்கி வைத்திருந்தார்கள். அல்லாஹ் கடவுள் என்பதை அவர்கள் மறுக்கவில்லை. மாறாக அவனை இறைவனாக ஏற்றிருந்தார்கள். இவ்வாறு பின்வரும் வசனங்கள் கூறுகிறது. 

''வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் ''அல்லாஹ்'' என்று கூறுவார்கள். அப்படியாயின் ''எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?'' 

அல்குர்ஆன் (29 : 61) 

''வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் ''அல்லாஹ்'' என்றே கூறுவார்கள். ''அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை. 

அல்குர்ஆன் (29 : 63) 

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? 

அல்குர்ஆன் (44 : 87) 

அல்லாஹ்விடத்தில் தங்களை அவ்லியாக்கள் நெருக்கிவைப்பார்கள் என்றும் நம்பினர். இதனால் அல்லாஹ் அவர்களை காஃபிர் என்று கூறினான். 

அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ''அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்'' என்றும் கூறுகின்றனர். 

''வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்'' என்று கூறுவீராக! 

அல்குர்ஆன் (10 : 18) 

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ''அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அல்குர்ஆன் (39 : 3) 

கப்ரு வழிபாடு கூடாது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எனது கப்ரை விழாக்கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். என் மீது சலவாத்து சொல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய சலவாத்து எனக்கு எத்திவைக்கப்படும். 

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அபூதாவுத் (1746) 

உம்மு ஹபீபா (ரலி) அவர்களும் உம்மு சலமா (ரலி) அவர்களும் தாங்கள் அபீஸீனியாவில் கண்ட உருவங்கள் இடம்பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை அவர்கள் எழுப்பிவிடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்துவிடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி (427) 

நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக. அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர் என்று கூறினார்கள். இந்த பயம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரை திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். 

அறிவிப்பர் : ஆயிஷா (ரலி) புகாரி (1330) 

அலீ (ரலி) அவர்கள் கூறுவதாவது : (அபுல் ஹய்யாஜே) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை எந்தப் பணிக்காக அனுப்பினார்களோ அதே பணிக்கு நான் உண்னை அனுப்பட்டுமா? எந்த உருவமானாலும் அதை அழிக்காமல் விட்டுவிடக்கூடாது உயர்ந்திருக்கின்ற எந்தக் கப்ரையும் தரைமட்டமாக ஆக்காமல் விட்டுவிடக்கூடாது என்று எனக்குக் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். 

அறிவிப்பவர் : அபுல் ஹய்யாஜ் (ரஹ்) முஸ்லிம் (1609) 

கப்ரை பூசுவதையும் அதன் மேல் உட்காருவதையும் அதன் மேல் கட்டடம் எழுப்புவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். 

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) முஸ்லிம் (1610) 

அல்லாஹ்விடத்தில் மட்டுமே கேட்க வேண்டும்

இறைவனை விட்டுவிட்டு மற்றவர்களிடத்தில் கையேந்தக்கூடாது என்பதற்காக தன்னிடத்தில் மட்டும் பிரார்த்தனை செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்லாஹ் தனக்கு அருள் புரியமாட்டான். தன்னை மன்னிக்கமாட்டான். தன்னுடைய தேவையை நிறைவேற்றமாட்டான் என்று நம்புவர்கள் காஃபிர்கள் என்று கூறுகிறான். 

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்'' அல்குர்ஆன் (12 : 87) 

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! 

அல்குர்ஆன் (39 : 53) 

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ''நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரர்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்''(என்பதைக் கூறுவீராக!) 

அல்குர்ஆன் (2 : 186) 

''என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன் கூறுகிறான். அல்குர்ஆன் (40 : 60) 

மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். 

அல்குர்ஆன் (50 : 16) 

''நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன்'' என (முஹம்மதே!) கூறுவீராக! 

அல்குர்ஆன் (72 : 20)